உலகின் மிக மிக அதிக ரேஞ்ஜை வழங்கும் மேட்-இன்-இந்தியா இ-ஸ்கூட்டர்... 480க்கும் அதிகமான கிமீ பயணிக்கலாம்!
ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 480 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கக் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி இருப்பதாக ராஃப்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ராஃப்ட் மோட்டார்ஸ் (Raft Motors). இந்நிறுவனம் இன்டஸ் என்எக்ஸ் (INDUS NX) எனும் புதுமுக பேட்டரி ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. உலகிலேயே மிக அதிக ரேஞ்ஜ் திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 480 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. இத்தகைய நம்ப முடியாத ரேஞ்ஜ் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே ராஃப்ட் மோட்டார்ஸ் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கின்றது. இதுமாதிரியான அதிகபட்ச ரேஞ்ஜ் திறனை தற்போது உலகளவில் விற்பனையில் இருக்கும் எந்தவொரு மின்சார வாகனமும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகையால், இந்த இந்திய தயாரிப்பு உலகின் மிக அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடிய எலெக்ஸ்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையையும், மகுடத்தையும் சூடியிருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு தயாரிப்பு நிறுவனம் 1 லட்சம் கிலோ மீட்டர்கள் வாரண்டி மற்றும் இரட்டை பேட்டரி தேர்வு என மிக அசத்தலான வசதிகளை வழங்குகின்றது. ஆகையால், மிகவும் சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ராஃப்ட் மோட்டார்சின் இன்டஸ் என்எக்ஸ் காட்சியளிக்கின்றது.

இத்துடன் அதிக வேகத்தில் சார்ஜ் செய்யும் வகையில் 10 ஆம்ப்ஸ் ஃபார்ஸ் சார்ஜிங் தொழில்நுட்பமும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது நேரத்தை மிச்சப்படுத்த உதவும். தொடர்ந்து, அடுத்த தலைமுறை சிறப்பு வசதிகள் என கூறுமளவிற்கு ரிவர்ஸ் கியர், திருட்டு தடுப்பு அலாரம், சாவியில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி, ரிமோட் லாக்கிங், ஸ்டைலிஷான டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பாதுகாப்பான பார்க்கிங் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இன்டஸ் என்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். போர்டபிள், மிட்-ரேஞ்ஜ், மற்றும் ட்யூவல் பேட்டரி ஆகிய தேர்வுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த மூன்றில் குறைந்த விலை மாடலாக போர்டபிள் உள்ளது.

இதில், 48V 65Ah அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 156 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்கு எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ. 1,18,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மும்பை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

போர்டபிள் தேர்வைக் காட்டிலும் சற்று கூடுதல் விலைக் கொண்ட தேர்வாக மிட்-ரேஞ்ஜ் இருக்கிறது. இதில், இடம் மாற்றம் செய்ய முடியாத 48V 135Ah பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 324 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்தகைய அதிகபட்ச ரேஞ்ஜை தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் எந்தவொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதற்கு ரூ. 1,91,976 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்த விலைக் கொண்ட தேர்வாக இதன் ட்யூவல்-பேட்டரி தேர்வு இருக்கின்றது. இந்த தேர்வில் மிக அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடிய 9.6KWH திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 480 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் வரை பயணிக்க முடியும். இதற்கு ரூ. 2,57,431 என்ற உச்சபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விலை சற்று அதிகமாக காணப்பட்டாலும், அதிக ரேஞ்ஜ் திறன் அதன் உயரிய விலையை மழுங்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

மேலே பார்த்த அனைத்து விலைகளும் மும்பை எக்ஸ்-ஷோரூம் விலை மதிப்பாகும். இந்த விலையிலேயே இன்டஸ் என்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. ராஃப்ட் மோட்டார்ஸ் இந்தியாவில் மிகவும் உறுதியான விற்பனை நெட்வொர்க்கைக் கொண்டிருக்கின்றது. நாடு முழுவதும் 550க்கும் அதிகமான நகரங்களில் நிறுவனத்தின் விற்பனையகம் செயல்பட்டு வருகின்றது.

இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் விற்பனையகம் என்ற இலக்கை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றது. கிராமம் மற்றும் நகரம் என அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் இந்த திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது. இதனை 2022 மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்ற நிறுவனம் உறுதியேற்றிருக்கின்றது.

தொடர்ந்து, 2023ம் ஆண்டிற்குள் உலகின் பிற நாடுகளிலும் கால் தடம் பதிக்க வேண்டும் என பிரமாண்டமான திட்டத்தையும் ராஃப்ட் மோட்டார்ஸ் போட்டிருக்கின்றது. நிறுவனம், மின்சார வாகன தயாரிப்பில் மட்டுமின்றி மின்சாதன தயாரிப்பிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், ஆன்ட்ராய்டு வசதிக் கொண்டு ஸ்மார்ட் டிவி, ஹை-ஃபை கரோக்கி சவுண்ட் சிஸ்டம் என பல சாதனங்களை நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதுபோன்ற நடவடிக்கைகளால் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ராஃப்ட் மோட்டார்ஸ் திகழ்கின்றது.


Click it and Unblock the Notifications








