தமிழகத்திற்கு பெரும் தொகையை நிவாரணமாக அள்ளி கொடுத்த ராயல் என்பீல்டு! எவ்வளவு தெரிஞ்சா பிரம்மிச்சு போய்ருவீங்க!
தமிழகத்திற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் பெரும் தொகையை கொரோனா நிவாரண நிதியாக அள்ளிக் கொடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ராயல் என்பீல்டு. உலகின் மிகவும் பழமையான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான இது கொரோனா பாதிப்பில் இருந்து மாநில் மீளுவதற்காக பெரும் தொகையை நிவாரணமாக வழங்கியுள்ளது.

ரூ. 2 கோடியை நிறுவனம் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்த ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதன்மை செயலாக்க அதிகாரி வினோத் தசாரி ரூ. 2 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

ராயல் என்பீல்டு நிறுவன அதிகாரிகள் காசோலையை வழங்கியபோது எடுக்கப்பட்ட படம்.
கொரோனா ஒழிப்பு பணியில் மாநில அரசுக்கு உதவிக் கரம் நீட்டும் வகையில் இத்தொகையை ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியிருக்கின்றது. தற்போது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுவனம் பெரும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இந்த நிலையிலும் பெரும் தொகையை நிறுவனம் அள்ளிக் கொடுத்திருப்பது வாகன சந்தையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாகன விற்பனை வீழ்ச்சி மட்டுமின்றி வாகன உற்பத்தி நிறுத்தம் போன்ற இடர்பாடுகளையும் நிறுவனம் சந்தித்தது குறிப்பிடத்தகுந்தது. கடந்த மே மாதத்தில் 13ம் தேதி தொடங்கி மே 16ம் தேதி வரை முழுக்க முழுக்க உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ராயல் என்பீல்டு நிறுவனம், அதன் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது. சென்னையில் மட்டும் மூன்று ஆலைகளை ராயல் என்பீல்டு செயல்படுத்தி வருகின்றது. ஒரகடம், திருவொற்றியூர் மற்றும் வல்லம் வடகல் ஆகிய மூன்று பகுதிகளில் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

"தமிழகம் ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்களின் தாயகமாகும். தொற்று நோயின் பாதிப்பில் இருந்து மாநிலம் மீண்டு வருவதற்கான முயற்சிகளில் ஆதரவளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இதனடிப்படையிலேயே மாநில அரசுக்கு ஆதரவை வழங்குவதற்கான நிவாரண நிதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் பல உதவிகளை வழங்கவும் நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்" என நிறுவனத்தின் முதன் செயலாக்க அலுவலர் வினோத் தசாரி கூறியுள்ளார்.

முதலமைச்சர் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை முக ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வருகின்றது. அந்தவகையில், நாடே பாராட்டும் வகையில் கொரோனா இரண்டாம் அலை பரவலைக் கையாண்டு வருகின்றது. இதன் ஒரு பங்காக அண்மையில் அரசுக்கு தாராளமாக நிதியுதவி செய்யுமாறு மக்கள் கோரிக்கை முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கைத் தொடர்ந்து திரைபிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் சாமானியர்கள் என பலதரப்பட்டோர் முதலமைச்சர் நிவாரண நிதி கணக்கில் நன்கொடைகளை வாரி வழங்க தொடங்கினர். அந்தவகையில், அண்மையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 5 கோடிக்கான காசோலையை முதலமைச்சரிடத்தில் வழங்கியது.

அதுமட்டுமின்றி ஆக்சிஜன் செரிவூட்டிகளையும் மாவட்டம் வாரியாக நிறுவனம் வழங்கி வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ராயல் என்பீல்டு நிறுவனம் நேரடியாக மாநில அரசுக்கு உதவிக் கரம் நீட்டியிருக்கின்றது. இந்த செயல் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கும் பெருமிதம் சேர்த்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








