நம்மூர் தயாரிப்பிற்கு இங்கிலாந்தில் இப்படியொரு மவுசா! எலக்ட்ரிக் மோட்டாருடன் ராயல்என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் எரிபொருள் வாகனங்களுடன் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஒப்பிட்டு பார்த்தால், 100 சதவீத எலக்ட்ரிக் சுற்றுச்சூழலுக்கு நாம் இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்தாக வேண்டும்.

இந்த காலத்தை வேகமாக அடைய வேண்டுமென்றால், தற்சமயம் நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் கோடிக்கணக்கான வாகனங்களில் என்ஜினிற்கு மாற்றாக எலக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வேண்டும். ஆனால் இது நடக்கும் காரியம் அல்ல.

ஏனெனில் வாகனத்தில் ஏதேனும் ஒரு பகுதியை கழற்றி மாற்றினாலே செலவை இழுத்துவிடும். அப்படியிருக்க, வாகனம் இயங்குவதற்கே முக்கிய காரணமாக உள்ள என்ஜினேயே மாற்றுவது என்பது உண்மையில் செலவுமிகுந்த விஷயமாகும். நம்மில் பலரும் மாதத்தவணையில் தான் இருசக்கர வாகனத்தையோ அல்லது நான்கு சக்கர வாகனத்தையோ வாங்கியுள்ளோம்.

இதனால் மீண்டும் பெரிய தொகையை செலவு செய்ய எத்தனை பேர் தயாராக உள்ளனர் என்பது தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் மோட்டார்சைக்கிளில் எலக்ட்ரிக் மோட்டாரை பொருத்துவது அதன் தோற்றத்தையே மாற்றுகிறது. இது சிலருக்கு பிடிப்பதில்லை.

ஆனால் வெளிநாடுகளில் கதையே வேறு. அதிலும் வளர்ந்த நாடுகளில், பயன்பாட்டில் இருக்கும் எரிபொருள் வாகனங்களுக்கு இணையாக எலக்ட்ரிக் வாகனங்கள் வந்துவிட்டன. அத்தகைய நாடுகளுள் ஒன்றான இங்கிலாந்தில் எலக்ட்ரிக் மோட்டாரை பெற்ற ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி பைக்கை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.
யுகே-வை சேர்ந்த சாயெட்டா க்ரூப்-ஆல் இவ்வாறு இந்த காண்டினெண்டல் ஜிடி பைக் மாற்றப்பட்டுள்ளது. சாயெட்டா க்ரூப் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான எலக்ட்ரிக் இயக்கி அமைப்புகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றதாக விளங்குகிறது.

இந்த மாடிஃபை ராயல் என்பீல்டு பைக்கின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்காக தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சோதனை முடிவுகள் எதிர்பார்ப்பதை போன்று வந்தால், அதிக எண்ணிக்கையில் இவ்வாறான எலக்ட்ரிக் மோட்டார்களை தயாரிக்க இந்த இங்கிலாந்து நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன் இந்த எலக்ட்ரிக் மோட்டார்களை இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் விற்பனை செய்யவும் சாயெட்டா க்ரூப் முடிவு செய்துள்ளது. நம்மூர் சென்னையில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் ராயல் என்பீல்டு நிறுவனமும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்க தயாராகி வருவது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

இந்த புதிய எலக்ட்ரிக் பைக்குகள் தற்போதைய ராயல் என்பீல்டின் ரெட்ரோ தோற்றத்தில் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், எப்போது ராயல் என்பீல்டு தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தும் என்பது உறுதியாக தெரியவில்லை.

தற்சமயம் 350சிசி- 650சிசி என ஆற்றல்மிக்க மோட்டார்சைக்கிள்களை மட்டுமே ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்கிறது. இதனால் இதே அளவிலான ஆற்றலை கொண்ட எலக்ட்ரிக் பைக்குகளை தான் இந்த நிறுவனம் தயாரிக்குமா என்பது சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும்.

அதேபோல் ராயல் என்பீல்டு பைக்குகளின் அடையாளமே அவற்றின் அதிர வைக்கும் சத்தமாகும். ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களில் சத்தம் அவ்வளவாக வெளிவருவது இல்லை. இதனை எவ்வாறு இந்த சென்னை மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் கையாள உள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சரி மீண்டும் சாயெட்டா க்ரூப்பிற்கு வருவோம். இந்த இங்கிலாந்து எலக்ட்ரிக் மோட்டார் வடிவமைப்பு நிறுவனம் ராயல் என்பீல்டு காண்டினெண்டல் ஜிடி650 மட்டுமின்றி இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் மோட்டார்சைக்கிளிலும் தனது எலக்ட்ரிக் மோட்டாரை பொருத்தி சோதனை செய்து பார்த்துள்ளது.

சாயெட்டாவின் எலக்ட்ரிக் மோட்டார்களில் நீக்கக்கூடிய பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. பொதுவாக எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில், தேவைக்கு ஏற்றாற்போல் நீக்கக்கூடிய பேட்டரியை வழங்குவது தான் சிறந்தது. ஏனெனில் மோட்டார்சைக்கிளை எப்போதும் சார்ஜிங் வசதி உள்ள இடத்திற்கு கொண்டு செல்ல முடியாது. ஆனால் பேட்டரியை கையில் எடுத்தப்படி சென்று விடலாம்.

இதற்கு அடுத்து எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தினால் கிடைக்க பெறும் மற்றொரு நன்மை என்னவென்றால், பேட்டரிக்காக தனியாக எந்தவொரு முதலீட்டையும் செய்ய தேவையில்லை. பேட்டரியை பயன்படுத்துவதற்கு ஆரம்பத்தில் மோட்டார்சைக்கிளை வாங்கும்போது பணம் செலுத்தினால் போதும்.


Click it and Unblock the Notifications








