டூ-வீலர் ஓட்டும்போது இந்த தப்ப பண்ணாதீங்க... ரசிகர்களுக்கு மட்டுமல்ல நம்ம எல்லாருக்கும் இது பொருந்தும்...
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் உலகின் இரு ஜாம்பவான்கள் பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நம் நாடு வளர்ச்சி பாதையில் முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றதோ, இல்லையோ, கசப்பான விவகாரங்களில் அதீத வளர்ச்சியை சந்தித்து வருகின்றது. விபத்து, கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் போன்றவற்றில் முன்பைக் காட்டிலும் பலமடங்கு வளர்ச்சியை நாடு தற்போது பெற்றிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான சச்சின் மற்றும் பிரையன் லாரா ஆகியோர் இணைந்து எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. சாலை பாதுகாப்பை உணர்த்தும் சமூக நல வீடியோவை இவர்கள் இருவரும் வெளியிட்டிருக்கின்றனர்.

இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதை அறிவுருத்தும் வகையில் இவ்வீடியோ அமைந்திருக்கின்றது. அதாவது, இருசக்கர வாகனத்தை வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வீடியோ அமைந்திருக்கின்றது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் அமர்ந்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் புறப்பட தயாராக இருக்கின்றார். அந்தவேலையில், அதே பாதையில் வரும் பிரையன் லாராவையும் தன்னுடன் வருமாறு சச்சின் அழைக்கின்றார். அழைப்பை ஏற்ற லாரா உடனடியாக ஸ்கூட்டரில் ஏறி அமர்வதற்கு முன்னரே தலைக் கவசத்தை அணிகின்றார்.

இதனைக் கண்டு வியந்த சச்சின், நானும் ஹெல்மெட் என கூறி, ஹெல்மெட்டை தேடுகின்றார். ஆனால், அவரிடத்திலோ கிரிக்கெட் ஹெல்மெட் மட்டுமே இருந்தது. உடனடியாக வேறொரு ஹெல்மெட்டை கேட்டு வாங்கிய அவர், அதை அணிந்த பின்னரே ஸ்கூட்டரில் பயணிக்க தொடங்குகின்றார்.

தொடர்ந்து, டூவீலரை ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அறிவுரையை அவர் கூறினார். சாலை பாதுகாப்புகுறித்து சச்சின் வெளியிட்டிருக்கும் இவ்வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

கிரிக்கெட் உலகை விட்டு சற்றே விலகியிருந்தாலும் இவருக்கு தற்போதும் ரசிகர்கள் கோடிக்கணக்கானோர் இருக்கின்றனர். எனவேதான் ஹெல்மெட்டின் அவசியத்தை உணர்த்தும் வீடியோவை இவரைக் கொண்டு வெளியிட்டிருக்கின்றனர்.
அண்மையில், இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் வெளிநாட்டவர்கள் சிலர் கொடுத்த குரலுக்கு, எங்கள் நாட்டு பிரச்னையை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு, எங்களுக்கு நண்பர்களாக மட்டும் இருந்தால் போதும் என பதிலடி கருத்தை சச்சின் வெளியிட்டிருந்தார்.

சச்சின் இந்த கருத்திற்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஒரு சேர கிடைத்தன. இந்த நிலையிலேயே சாலை பாதுகாப்பை உணர்த்தக் கூடிய இப்புதி வீடியோவை அவர் வெளியிட்டிருக்கின்றார். சச்சினைப் போலவே கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவராக பிரையன் லாரா இருக்கின்றார்.

இவரும், இவ்வீடியோவில் இணைந்திருப்பது, மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக வெளியிடப்பட்டிருக்கும் வீடியோவிற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இவர்கள் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரைப் பயன்படுத்தியிருப்பது, அந்த ஸ்கூட்டரின் விற்பனைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

நாட்டின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகன மாடல்களில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி 20 ஆண்டுகள் ஆகிவிட்ட காரணத்தினால் இதன் ஸ்பெஷல் பதிப்பு மாடலை நாட்டில் விற்பனைச் செய்து வருகின்றது. ரூ. 71,522 தொடங்கி ரூ. 73,268 வரையிலான விலையில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.


Click it and Unblock the Notifications








