240கிமீ ரேஞ்சில் அறிமுகமானது சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! 1947 ரூபாயில் முன்பதிவுகளும் துவங்கின
சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த சுதந்திர தின நன்னாளில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இ-ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்ன? மற்றவைகளில் இருந்து இது எந்தெந்த விதத்தில் சிறத்தது என்பதையெல்லாம் இனி தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

சில மணிநேரங்களுக்கு முன்பு அறிமுகமான ஓலா எஸ்1 மற்றும் ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் போட்டியினை விற்பனையில் நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுவரப்பட்டுள்ளது.

சிம்பிள் எனர்ஜியின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இன்றில் (ஆகஸ்ட் 15) இருந்து ரூ.1947 என்ற முன்தொகை உடன் முன்பதிவு செய்யலாம் என சில தினங்களுக்கு முன்பே தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆம், இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டான 1947-ஐ தான் தனது இ-ஸ்கூட்டரை முன்பதிவு செய்வதற்கான டோக்கன் தொகையாக சிம்பிள் என்ர்ஜி நிர்ணயித்துள்ளது.

சிம்பிள் ஒன் ஸ்கூட்டரை http://www.simpleenergy.in/ என்ற நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம். ஒருவேளை முன்பதிவு செய்வதில் தவறு நேர்ந்தாலோ அல்லது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவை ரத்து செய்தாலோ டோக்கன் தொகை திரும்ப வழங்கப்பட்டுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொறுத்தவரையில், சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.8kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியின் உதவியுடன் ஈக்கோ மோடில் அதிகப்பட்சமாக 240கிமீ வரையில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

240கிமீ என்பது உண்மையில் மிக நீண்ட தொலைவாகும். அதிகப்பட்சமாக மணிக்கு 100கிமீ வேகத்தில் செல்லலக்கூடிய இந்த இ-ஸ்கூட்டரில் 0-வில் இருந்து 50kmph வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடலாம். இதன் பேட்டரி தொகுப்பு ஸ்கூட்டரின் மத்தியில் வழங்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்பட்டுள்ளது.

மோட்டாரில் இருந்து பேட்டரியை தேவைக்கு வெளியே எடுத்து கொள்ளலாம் என சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 6 கிலோ எடையில் க்ரே நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை சிம்பிள் எனர்ஜி நிறுவனம் ஏற்கனவே வெளிக்காட்டிவிட்டது.

சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தோற்றத்தை பார்த்தோமேயானால், எதிர்காலத்தில் நமது இந்திய நகரத்தில் ஓடும் ஸ்கூட்டர்கள் எவ்வாறு இருக்கும் என்று யாரேனும் கேட்டால் இதனை பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்கால வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அட்வான்ஸாகவே இவ்வாறான ஸ்டைலில் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய தோற்றத்தில் தொடுத்திரை, ஆன்போர்டு நாவிகேஷன், ப்ளூடூத் இணைப்பு என ஸ்மார்ட் வசதிகள் ஏகப்பட்டவைகளை இது கொண்டுள்ளது. இருப்பினும் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.10 லட்சத்தில் இருந்து ரூ.1.2 லட்சம் வரையில் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருக்கைக்கு அடியில் 30 லிட்டர் கொள்ளளவில் பொருட்களை வைக்கும் பகுதியினை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது. தற்போதைக்கு பிரீமியம் ஸ்கூட்டர்கள் பிரிவில் வேறெந்த மாடலும் இந்த அளவிற்கு இடத்தை கொண்டிருக்கவில்லை. இந்தியாவில் முதற்கட்டமாக 13 மாநிலங்களில் மட்டுமே சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 13 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இதனை தொடர்ந்து மற்ற மாநிலங்களுக்கு சந்தையை விரிவுப்படுத்த இந்த எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் நமது தமிழகத்தில், ஓசூரில் சுமார் 2 லட்ச சதுர அடி பரப்பில் தொழிற்சாலை ஒன்றை கட்டமைக்கும் பணியில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் இறங்கியுள்ளது.

அதேபோல் சார்ஜிங் நிலையங்களையும் சிம்பிள் லூப் என்கிற பெயரில் இந்தியாவில் சுமார் 300 பகுதிகளில் கொண்டுவர சிம்பிள் எனர்ஜி தயாராகி வருகிறது. இந்த சார்ஜிங் நிலையங்களில் எந்தவொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் சார்ஜ் செய்து கொள்ள முடியும் என செய்திகள் கூறுகின்றன.

இதற்காக சில ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், உணவு விடுதிகளுடன் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த சார்ஜிங் நிலையங்களில் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒவ்வொரு 60 வினாடிக்கும் 2.5 கிமீ தூரம் இயங்குவதற்கான சார்ஜை பெறலாமாம்.


Click it and Unblock the Notifications








