"பொய்யான மாயையை ஏற்படுத்த வேண்டாம்" - திமுகவின் சிக்ஸர்களை சுக்கு நூறாக நொறுக்கிய எடப்பாடி பழனிசாமி!
மக்கள் மத்தியில் பொய்யான மாயையை ஏற்படுத்த வேண்டாம் என திமுகாவிற்கு எதிராக ஓர் அறிக்கையை தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

முன்னாள் தமிழக முதலமைச்சரும், இன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தங்கள் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களைக் காழ்ப்புணர்ச்சி கொண்டு முடக்காமல், தொழில்துறையில் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அடித்தளத்தை செம்மையாக பயன்படுத்தி தமிழகத்தை சிறந்த வளமிக்க நாடாக மாற்ற வேண்டும்" என கூறியிருக்கின்றார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில் இன்னும் பல தகவல்களை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கின்றார். அவர் வெளியிட்டிருப்பதாவது, "அதிமுக ஆட்சி காலத்தில் 'விஷன் 2023' என்ற தொழிற் கொள்கை அறிவிக்கப்பட்டு பல்வேறு புதிய தொழில்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

இதனால் பல ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறும் நிலை தமிழகத்தில் உருவாகியது. இதனை தங்கள் ஆட்சியில் கொண்டு வந்ததைப் போல் அமைச்சர் தங்கம் தென்னரசு, பொதுவெளியில் பேசி வருவது வியப்பாக உள்ளது.

இவர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்று ஒன்றரை மாதங்களே ஆகின்றன. இதற்குள் ஏற்கனவே முடிவடையும்நிலையில் இருக்கும் பணிகளை எல்லாம் தங்களின் ஆட்சி காலத்தில் கொண்டு வந்ததுபோல் சித்தரிப்பது ஏற்படையதல்ல" என்று அவர் கூறியிருக்கின்றார்.

தொடர்ந்து, "இந்த போக்கை கைவிட்டு, நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அடித்தளத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டை தொழில்துறையில் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக மாற்ற தொடர்ந்து செயல்படுமாறு" அந்த அறிக்கையின் வாயிலாக திமுக அரசிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

சுற்று சூழலை பாதுகாக்கவும், மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் எங்களுடைய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனடிப்படையில், ஓலா நிறுவனத்தின் பிரமாண்டமான மின் வாகன உற்பத்தி ஆலை ஒசூரில் தயாராகி வருகின்றது.

இந்த ஆலை இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய (பயன்பாட்டிற்கு வர) இருக்கின்றநிலையில் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசு தங்களின் ஆட்சி காலத்தில் இந்த தொழில் நிறுவனத்தைக் கொண்டு வந்ததுபோல் பொய்யான மாயையை ஏற்படுத்த முயல்வதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார்.

ஓலா நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ. 2,354 கோடி முதலீட்டில் தமிழகத்தில் மின்சார வாகன உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தகுந்தது. இங்கு தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களே ஐரோப்பா, ஆசிய நாடுகள் என உலக நாடுகள் பலவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன.

நிறுவனத்தின் மூலம் 10 ஆயிரத்திற்கும் வேலை வாய்ப்பு பெற இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக விரைவில் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்கள் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக உற்பத்தி ஆலையை கட்டுமானம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








