கடமை உணர்வு! இருசக்கர வாகன ஓட்டி உடன் பைக்கை கொத்தாக தூக்கிய போலீஸ்... எங்கே இந்த சம்பவம் நடைபெற்றது தெரியுமா?
காவல்துறையினர் இருசக்கர வாகனம் ஒன்றை அதன் உரிமையாளருடன் டோவ் செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வின் பின்னணி குறித்த தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

நகர பகுதிகளில் பணியில் இருக்கும் போக்குவரத்து போலீஸாருக்கு வாகனங்களினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மிகப் பெரிய தலை வலியாக இருக்கிறது. முறையற்ற வாகன நிறுத்தமே (பார்க்கிங்) இதற்கான முக்கிய காரணியாக உள்ளது. இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு இதுவே காரணம் ஆகும்.

வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இருந்தாலும் பலர் சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டியிருக்கும் என்ற காரணத்திற்காகவும், அக்கறையற்ற செயல்பாட்டின் காரணமாகவும் பலர் பார்க்கிங் செய்யக்கூடாத இடங்களில்கூட தங்களின் வாகனங்களை அசால்டாக நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.

இதனால், அப்பகுதியே போக்குவரத்து தடையால் ஸ்தம்பித்து விடுகின்றன. குறிப்பாக போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் சில நேரங்களில் விபத்துகள் கூட ஏற்படுகின்றன. எனவேதான் இத்தகைய வாகனங்கள்மீது காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அந்தவகையில், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட ஓர் வாகனத்தை பறிமுதல் செய்யும்போதே இந்த விநோத நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. இச்சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் அரங்கேறியிருக்கின்றது. நகரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டர்.

அப்போது, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓர் பைக்கை வாகனத்தில் ஏற்ற முயன்றபோது, அதன் உரிமையாளர் வாகனத்தின் மீது ஏறி அமர்ந்துக் கொண்டு இறங்க அடம்பிடித்திருக்கின்றார். இருப்பினும், போலீஸார் விடாப்பிடியாக உரிமையாளருடன் பைக்கை டோவிங் வாகனத்தில் ஏற்ற முயற்சித்திருக்கின்றனர்.

இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இச்சம்பவம் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மாலை சுமார் 5 மணியளவில் அரங்கேறியதாகக் கூறப்படுகின்றது. சம்பவத்திற்கு காரணமான பைக்கின் உரிமையாளர், பைக்கை நிறுத்திவிட்டு அதன் அருகிலேயே நின்றுக் கொண்டிருந்ததாகக் கூறியுள்ளார்.

இந்த நிலையிலேயே தனது பைக்கை டோவ் செய்வதைக் கண்டு உடனடியாக அங்கு சென்று பைக்கின்மீது ஏறி அமர்ந்திருக்கின்றார். இருப்பினும், பைக் பார்க்கிங் செய்யக்கூடாத இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினால், போலீஸார் இருசக்கர வாகனத்தை அகற்றுவதில் மிக தீவிரம் காட்டினர். பல முறை பைக்கின் உரிமையாளர் கெஞ்சியும் விடவில்லை.

இதனால், சில நேரங்கள் போக்குவரத்து போலீஸார் மற்றும் பைக்கின் உரிமையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கின்றது. போக்குவரத்து விதிகளின்படி, உரிமையாளர்கள் வாகனத்தின் அருகில் நின்றுக் கொண்டிருந்தாலும், அவற்றை போக்குவரத்து இடையூறாக, குறிப்பாக, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தியிருந்தால் விதிமீறல் செயலாகவே கருதப்படும். எனவேதான், அந்த வாகனத்தை காவல்துறையினர் எந்தவொரு தயவுமின்றி டோவ் செய்திருக்கின்றனர்.

நோ பார்க்கிங் செயலுக்காக, அபராதம் உள்ளிட்ட பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில்கூட இதுபோன்று, வாகனத்தில் ஆட்களுடன் டோவ் செய்த சம்பவம் நாட்டில் அரங்கேறியிருக்கின்றது. அந்தவகையில், மும்பையில் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த தாயுடன் வாகனத்தை போலீஸார் டோவ் செய்த சம்பவங்கள்கூட நமது நாட்டில் அரங்கேறியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பு: 5 முதல் 8 வரை கொடுக்கப்பட்டுள்ள படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








