ரொம்ப சந்தோஷமான விஷயம்... போற போக்கை பாத்தா எல்லார் வீட்லயும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்குமாட்ட இருக்கு!
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஜாஜ் மற்றும் டிவிஎஸ் ஆகிய இரண்டும்தான் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்கள். மற்றவை அனைத்தும் பெரும்பாலும் சிறிய நிறுவனங்கள்தான். டிவிஎஸ் நிறுவனம் ஐ-க்யூப் (TVS iQube) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வைத்துள்ளது. அதே நேரத்தில் பஜாஜ் நிறுவனம் சேத்தக் (Bajaj Chetak) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வைத்துள்ளது.

இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குமே இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டிவிஎஸ் ஐ-க்யூப் வீழ்த்தியுள்ளது. டிவிஎஸ் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 649 ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

அதே நேரத்தில் பஜாஜ் நிறுவனம் வெறும் 364 சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. டிவிஎஸ் ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 23 ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

வெறும் 23 ஆக இருந்த விற்பனை எண்ணிக்கை தற்போது 649 ஆக உயர்ந்திருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம். அதே சமயம் நடப்பாண்டு ஜூலை மாதம் டிவிஎஸ் நிறுவனம் 540 ஐ-க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது. இந்த மாதாந்திர அடிப்படையில் பார்த்தால், டிவிஎஸ் ஐ-க்யூப் 20.19 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வருடாந்திர விற்பனையில் (2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது), 89.58 சதவீத வளர்ச்சியையும், மாதாந்திர விற்பனையில் (2021ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது) 50.14 சதவீத வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது. பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை கடந்தாண்டு ஆகஸ்ட்டில் 192 ஆக இருந்தது.

அதே சமயம் நடப்பாண்டு ஜூலையில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை 730 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகம் முழுக்க செமி-கண்டக்டர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக வாகனங்களின் உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி அதிகளவில் தடைபட்டுள்ளது.

உற்பத்தி செய்வதில் பிரச்னைகள் இருந்த காரணத்தால், பஜாஜ் நிறுவனமும் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை ஏற்பதை பல முறை நிறுத்தி வைத்தது. தற்போதைய நிலையில் பஜாஜ் நிறுவனம் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை ஏற்று கொண்டு வருகிறது. ஆனால் தற்போதைய பேட்ஜ் இருக்கும் வரை மட்டுமே முன்பதிவுகள் ஏற்கப்படும்.

இதன் மூலம் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள், டெலிவரி பெறுவதற்கு மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. இதனை பஜாஜ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆச்சரியம் அளிக்கும் விதமாக இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் சமீப காலமாக நிறைய தயாரிப்புகள் அறிமுகமாகி வருகின்றன.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்ற 2 வேரியண்ட்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும். அதே நேரத்தில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சிம்பிள் ஒன் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மிகவும் சவாலான விலை நிர்ணயம் மற்றும் அதிக ரேஞ்ச் ஆகிய காரணங்களால், இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குமே தற்போது இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெறும் இரண்டே நாட்களில் சுமார் 1,100 கோடி ரூபாய்க்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்ட் வாடிக்கையாளர்களை நன்றாக கவர தொடங்கி விட்டது என்பதற்கு இதை விட வேறு சாட்சி எதுவும் தேவையில்லை. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக அரசாங்கம் மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், காற்று மாசுபாடு பிரச்னை குறையும். அத்துடன் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவும் குறைந்து, பொருளாதாரம் மேம்படும். எனவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருவது மகிழ்ச்சியான செய்திதான்.


Click it and Unblock the Notifications








