ரூ.40 கோடியை அள்ளி கொடுக்கும் பிரபல நிறுவனம்... எதற்காக தெரிஞ்சா நிச்சயம் சந்தோஷப்படுவீங்க...
தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல நிறுவனம் ரூ. 40 கோடியை வாரி வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை இந்தியாவில் கோர தாண்டவமாடி வருகின்றது. இதனால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்த வண்ணம் இருக்கின்றன. புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் மு.க. ஸ்டாலின், முன்பைவிட உயிர் கொல்லி கொரோனா வைரஸ் பரவல் அதி வேகத்தில் இருப்பதைக் காரணம் காட்டி தற்போது மாநிலம் தழுவிய முழு ஊரடங்கை அறிவித்திருக்கின்றார்.

இதேபோன்று மிக சமீபத்தில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களும் முழு ஊரடங்கை அறிவித்திருக்கின்றன. இவ்வாறு நாடே மிக இக்கட்டான சூழலை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்ற வேலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அவற்றால் இயன்ற உதவிகளை செய்ய முன் வந்த வண்ணம் இருக்கின்றன.

அந்தவகையில், மிக சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் அதன் உற்பத்தி ஆலை வாயிலாக ஆக்சிஜன் தயாரிக்கும் முயற்சியை முன்னெடுத்தது. தொடர்ந்து, பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் ரூ. 20 கோடியை ஆக்சிஜன் தயாரிப்பிற்காக நிதியை ஒதுக்கியது. இவ்வாறு, பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் உதவிகளை அறிவித்த வண்ணம் இருக்கின்றன.

இந்தநிலையில், தமிழகத்தின் ஒசூரை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ரூ. 40 கோடி மதிப்பிலான கொரோனா வைரஸ் நிவாரண நிதியை அறிவித்திருக்கின்றது. இதுகுறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மற்றும் சுந்தரம் கிளேடன் லிமிடெட் ஆகியவை இணைந்து இயக்கும் சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் எனப்படும் சமூகப் பிரிவின் வாயிலாக இந்த நிவாரண நிதி நடவடிக்கையில் மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

இம்முயற்சியின் அடிப்படையில் இரண்டும் மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஆக்சிஜன் சப்ளை, பிபிஇ கருவிகள், மருத்துவ உபகரணம் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை நாடு முழுவதிற்கும் வழங்க இருக்கின்றது.

2,000 ஆக்சிஜன் கன்சென்ட்ரேட்டர்க்ளை மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு வழங்க இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதுதவிர, நாள் ஒன்றிற்கு 20 ஆயிரம் உணவு பொட்டளங்களை தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஹிமாச்சலத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு மட்டுமின்றி அரசு முன்கள பணியாளர்களுக்கும் சில சிறப்பு சேவைகளை வழங்க இருப்பதாக டிவிஎஸ் தெரிவித்திருக்கின்றது. முகக்கவசம், ஆக்ஸிமீட்டர்கள், பிபிஇ கருவிகள், சானிட்டைசர் பாட்டில்கள் மற்றும் சில முக்கிய மருத்துவ பொருட்களை 500க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களுக்கு வழங்க இருக்கின்றது.

மிக முக்கியமாக நகர்ப்புறம் அல்லாத கிராமப்புறங்களுக்கும் தங்களின் உதவி கரத்தை நீட்ட இருப்பதாக டிவிஎஸ் கூறியிருக்கின்றது. வாகன உற்பத்தி நிறுவனத்தின் இந்த அவசரகால உதவி பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டாண்லி மருத்துவ கல்லூரி ஆகிய இரு மருத்துவமனை நிர்வாகத்துடன் நெருங்கி பணி புரிந்து வருவதாக நிறுவனம் கூறியுள்ளது. இங்கு, கோவிட் 19 வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கான பல்வேறு சேவைகளை நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

இதுதவிர உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து இரு சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை ஒசூர் மற்றும் மைசூர் பகுதியில் இயக்கி வருகின்றது. இந்த ஆம்புலன்ஸில் அத்தியாவசிய தேவைகளான ஆக்சிஜன் தொடங்கி பல்வேறு மருத்துவ உபகரணங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








