விற்பனைக்கு வந்து ஒரு மாசம்தான் ஆகுது... அதிகம் விற்பனையாகும் பைக்கின் விலையை உயர்த்த Yamaha திட்டம்!
Yamaha நிறுவனம் அதன் புதுமுக அறிமுகமான R15 V4 பைக்கின் விலையை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பைக்கின் விலை எவ்வளவு, எப்போது உயர்த்தப்பட இருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

யமஹா (Yamaha) நிறுவனத்தின் அதிகம் விற்பனைப் பெறும் இருசக்கர வாகன மாடல்களில் ஆர்15 வி4 மாடலும் ஒன்றாக இருக்கின்றது. மிக சமீபத்திலேயே இப்புதிய தலைமுறை வெர்ஷன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது. பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் அப்டேட்டுகள் உடன் இப்பைக் இந்தியாவில் கால் தடம் பதித்திருக்கின்றது.

புதிய அப்டேட்டானது இப்பைக்கை குழந்தை சூப்பர் பைக் என்றழைக்கும் அளவிற்கு செய்யப்பட்டிருக்கின்றது. தற்போது வரை இந்த பைக் ரூ. 1.68 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இதன் உச்ச நிலை வேரியண்டான மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசன் ரூ. 1.80 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. மேலே கூறப்பட்ட விலைகளில் ஆர்15 வி4 பைக் ரொம்ப நாளைக்கு விற்பனைக்கு கிடைக்காது என்ற தகவலே தற்போது வெளியாகியுள்ளது.

ஆம், யமஹா நிறுவனம் புதிய ஆர்15 வி4 பைக்கின் விலையை உயர்த்த திட்டமிட்டிருக்கின்றது. வரும் 1ம் தேதி முதல் புதிய விலையில் விற்பனைச் செய்யவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. ரூ. 3 ஆயிரம் வரையில் விலை உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

மிக விரைவில் விலை உயர்வு குறித்த அதிகாரப்பூர்வமாக தகவலை யமஹா வெளியிட இருக்கின்றது. புதிய தலைமுறை யமஹா ஆர்வி15 வி4 பைக் செப்டம்பர் 21ம் அன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியது. புதிய அம்சங்களாக டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் குயிக் ஷிஃப்டர் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுமாதிரியான அம்சங்களை வைத்தே இதனை பேபி சூப்பர் பைக் என்று வாகன வல்லுநர்கள் அழைக்கின்றனர். இதுமட்டுமின்றி இன்னும் பல புதிய ஸ்போர்ட்ஸ் மற்றும் பிரீமியம் தர கருவிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அப்சைடு டவுண் ஃபோர்க், ப்ளூடூத் இணைப்பு ஆகிய வசதிகளும் இப்புதிய தலைமுறை ஆர்15 பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

ப்ளூடூத் இணைப்பு வசதி புதிய எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் திரை வாயிலாகவே நிறுவனம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதனை இணைக்கும் விதமாக பிரத்யேக செல்போன் செயலி ஒன்றும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதேபோல் பழைய தலைமுறையைக் காட்டிலும் புதிய தலைமுறை அதிக ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் காட்சியளிக்கும் விதமாக முகப்பு பகுதியில் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆர்15 வி4 பைக்கில் 155 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும். இந்த எஞ்ஜினில் சிறப்பு வசதியாக ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் கூடுதல் சிறப்பு தொழில்நுட்பமாக விவிஏ (Variable Valve Actuation) தொழில்நுட்பம் இந்த எஞ்ஜின் வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த எஞ்ஜின் 18.2 பிஎச்பி மற்றும் 14.1 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மிக சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக தங்க நிறத்திலான யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, சிறந்த பிரேக்கிங் வசதிக்காக இரட்டை சேனல் ஏபிஎஸ் வழக்கமான அம்சமாக இதில் வழங்கப்பட்டுள்ளது.

யமஹா நிறுவனம் ஹைபிரிட் வசதிக் கொண்ட ஃபஸ்ஸினோ 125 மற்றும் ரே இசட்ஆர் 125 ஆகிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனைக்கு அண்மயில் களமிறக்கியது. இத்துடன், இன்னும் சில புதுமுக வாகனங்களை களமிறக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையிலேயே கடந்த செப்டம்பர் மாதம் யமஹா நிறுவனம் ஆர்15 வி4.0 பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மேலும், தற்போது அறிமுகமாகி ஒரு மாதம் சில நாட்களே ஆகின்ற நிலையில் தற்போது இப்பைக்கின் விலையை நிறுவனம் உயர்த்தியிருக்கின்றது. இது யமஹா ஆர்15 பைக் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








