தமிழகம், உபி இரு மாநில ஆலைகளிலும் உற்பத்தி பணிகள் நிறுத்தம்... யமஹா அதிரடி... எப்போது வரை?
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா அதன் தமிழ்நாடு மற்றும்ம உபி மாநிலங்களில் அமைந்துள்ள உற்பத்தி ஆலைகளில் அனைத்து பணிகளையும் நிறுத்தியிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை உருவாக்கி வருகின்றது. மக்கள் கொத்து, கொத்தாக மடிய தொடங்கியிருக்கின்றனர். இறப்பின் விகிதம் முன்பைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்திருக்கின்றது. தொடர்ந்து, தொற்றின் பரவல் வேகமும் மிக மிக அதிகளவில் உயர்ந்து காணப்படுகின்றது.

இருப்பினும், நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு நாடு தழுவிய முழு ஊரடங்கை அறிவிப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வருகின்றது. இருப்பினும், அதிக பாதிப்புகளைச் சந்தித்து வரும் மாநில அரசுகள் தன்னிச்சையாக மாநிலம் தழுவிய ஊரடங்கை அறிவித்து வருகின்றன.

இதனால், அந்தந்த மாநிலங்களை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் தற்காலிக மூடப்பட்டு வருகின்றன. அதாவது, உற்பத்தி மற்றும் தயாரிப்பு என அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் நிறுவனங்கள் தற்காலிக முற்று புள்ளி வைத்து வருகின்றன.

இதே நடவடிக்கையில்தான் இந்தியா யமஹா மோட்டார்ஸ் நிறுவனமும் களமிறங்கியிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் இந்தியாவின் தமிழகம் மற்றும் உத்தரபிரதேசம் இரு மாநிலங்களிலும் இயங்கி வருகின்றது. இவ்விரு மாநிலங்களிலும் அதிக தொற்று பரவலின் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், இரு மாநிலங்களையும் மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்து நிறுவனங்களும் தற்காலிக இழுத்து மூடலுக்கு ஆளாகியிருக்கின்றன. இந்த நிலையிலேயே பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹாவும் அதன் இழுத்து மூடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது.

மே 15 தொடங்கி மே 31ம் தேதி வரை அனைத்து செயல்பாடுகளுக்கும் தற்காலிக முற்று புள்ளியை வைத்திருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது. மிகக் கடுமையாக உயர்ந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் வேகத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

அதேசமயம், அலுவக பணியாளர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றும் வசதியை நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி ஊழியர்களின் நலனை உறுதி செய்யும் வகையில் தடுப்பூசி வழங்குதல் மற்றும் பிற அத்தியாவசிய உதவிகளையும் நிறுவனம் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.

யமஹா மோட்டார் நிறுவனம் மட்டுமின்றி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் தனது உற்பத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கின்றது. வரும் மே17ம் தேதி வரை உற்பத்தி மற்றும் தயாரிப்பு என அனைத்து பணிகளுக்கும் முற்று புள்ளி வைத்திருப்பதாக நிறுவனம் மிக சமீபத்தில் தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








