ஜாவாவை தொடர்ந்து யெஸ்டி பைக்குகளையும் களமிறக்கும் மஹிந்திரா
ஜாவா மோட்டார்சைக்கிள்களை தொடர்ந்து யெஸ்டி மோட்டார்சைக்கிள் மாடல்களையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் பழமையான ஜாவா நிறுவனத்தின் பைக்குகளை இந்தியாவில் மீண்டும் கொண்டு வந்தது மஹிந்திரா. தனது அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் வாயிலாக ஜாவா பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஜாவாவை போலவே பழம் பெருமை வாய்ந்த யெஸ்டி நிறுவனத்தின் பைக் மாடல்களையும் இந்தியாவில் களமிறக்க கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக எக்கனாமிக் டைம்ஸ் தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

முதல் மாடலாக யெஸ்டி நிறுவனத்தின் ரோடுகிங் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது. ஏற்கனவே இந்திய மண்ணில் வைத்து யெஸ்டி ரோடுகிங் மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஜாவா 300 பைக்கில் இருக்கும் எஞ்சின்தான் இந்த புதிய யெஸ்டி ரோடுகிங் பைக்கிலும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரியமான டிசைன் அம்சங்களுடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த புதிய மாடல் வர இருக்கிறது.

இந்த செய்தி இந்தியாவில் உள்ள பைக் பிரியர்கள் மற்றும் யெஸ்டி பைக்கை வைத்திருந்த உரிமையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. எஞ்சின், பிரேக் சிஸ்டம், சஸ்பென்ஷன் என பல பாகங்கள் ஜாவா 300 பைக் மாடல்களுடன் புதிய யெஸ்டி ரோடுகிங் பங்கிட்டுக் கொள்ளும்.

யெஸ்டி மட்டுமின்றி, அடுத்ததாக பிஎஸ்ஏ நிறுவனத்தின் பைக் மாடல்களையும் இந்தியாவில் களமிறக்குவதற்கு கிளாசிக் லெஜென்ட்ஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிளுக்காக புதிய 650சிசி எஞ்சினை உருவாக்குவதற்கான முயற்சிகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த எஞ்சின் ட்வின் சிலிண்டர் அமைப்பு கொண்டதாக இருக்கும். யூரோ-5 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் புதிய பிஎஸ்ஏ பைக் மாடல்கள் காட்சிப்படுத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








