தமிழகத்திற்கு படையெடுக்கும் எலெக்ட்ரிக் டூவீலர் கம்பெனிகள்! மாஸான சம்பவம் ஒன்னு நடந்திருக்கு! என்னனு தெரியுமா?
தமிழகத்தை நோக்கி எலெக்ட்ரிக் டூவீலர் நிறுவனங்கள் படையெடுத்து வரும் நிலையில், மாஸான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களின் மிக முக்கியமான உற்பத்தி மையங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இங்கு ஏற்கனவே நிறைய இருக்கின்றன. இந்த சூழலில் ஓலா போன்று, எலெக்ட்ரிக் டூவீலர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் தற்போது தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது.

தமிழகத்தில் எலெக்ட்ரிக் டூவீலர் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்திருக்கும் நிறுவனங்களில் ஆம்பியரும் (Ampere) ஒன்று. இது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எலெக்ட்ரிக் டூவீலர் நிறுவனம் ஆகும். க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி (Greaves Electric Mobility) நிறுவனத்தால், ஆம்பியர் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் ராணிப்பேட்டையில் ஆம்பியர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் டூவீலர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், ராணிப்பேட்டை தொழிற்சாலை தற்போது உற்பத்தியில் புதிய மைல்கல் ஒன்றை கடந்துள்ளது. ராணிப்பேட்டை தொழிற்சாலையில் 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் டூவீலர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக ஆம்பியர் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

இந்த தொழிற்சாலையில் 50 ஆயிரமாவது வாகனமாக உற்பத்தி செய்யப்பட்டிருப்பது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். ராணிப்பேட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் எலெக்ட்ரிக் டூவீலர்களை ஆம்பியர் நிறுவனம் உற்பத்தி செய்திருப்பது தமிழக மக்களும் பெருமை கொள்ளக்கூடிய விஷயங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமானது ஆம்பியர் பிராண்டின் கீழ் எலெக்ட்ரிக் டூவீலர்களை உற்பத்தி செய்து வருகிறது. அதே நேரத்தில் முறையே இஎல்இ (ELE) மற்றும் தேஜா மொபிலிட்டி (Teja Mobility) பிராண்டுகளின் கீழ், எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் மற்றும் எலெக்ட்ரிக் ரிக்ஸாக்கள் ஆகிய எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களையும் க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் உற்பத்தி செய்து கொண்டுள்ளது.

இதில், ஆம்பியர் எலெக்ட்ரிக் டூவீலர்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களுக்கு இருப்பதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் காலங்களில் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக உயரலாம்.

ஏனெனில் தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னையும், சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து அதிகரித்து வரும் விழிப்புணர்வுமே இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளும் இதற்கு ஒரு காரணம்தான்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலப்படுத்துவதற்கு மத்திய அரசு விரும்புகிறது. பல்வேறு மாநில அரசுகளும் கூட அதையேதான் விரும்புகின்றன. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக தற்போது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எலெக்ட்ரிக் மட்டுமல்லாது சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாடும் தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசலுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வாகனங்களை போன்று, சிஎன்ஜி எரிபொருளும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததுதான். மேலும் பெட்ரோல், டீசலை காட்டிலும் சிஎன்ஜி எரிபொருளின் விலையும் குறைவு என்பது கூடுதல் சிறப்பம்சம்.

இந்தியாவில் தற்போது சிஎன்ஜி எரிபொருள் மூலம் இயங்கக்கூடிய வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருவதால், சிஎன்ஜி எரிபொருளை வீடுகளுக்கே டோர்-டெலிவரி செய்யும் சேவையும் கூட தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் வர்த்தக தலைநகர் மும்பையின் ஒரு சில பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தற்போது இந்த சேவையை பெற முடியும்.

ஃப்யூயல் டெலிவரி என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் மும்பையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை விரைவில் நாட்டின் பிற நகரங்களுக்கும் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கே சிஎன்ஜி எரிபொருள் வந்து விடும் என்பதால், வாகனங்களை சிஎன்ஜி ஸ்டேஷன்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்காது.


Click it and Unblock the Notifications








