மீண்டும் வெடித்த மற்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... என்னதான் பிரச்சனை?
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக தொடர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெடிக்கும் சம்பவம் இந்தியாவில் அதிகம் நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் விற்பனையான பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சார்ஜ் போடும் போது தீ பிடித்து எரியும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் வேலூரில் இந்த சம்பவம் முதலில் துவங்கியது. இரவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்த நிலையில் வீட்டிலிருந்த தந்தை மகள் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர்.

அதன் பின் சென்னையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையகத்திலேயே தீ விபத்து நிகழ்ந்து சுமார் 20 ஸ்கூட்டர்கள் தீ விபத்தில் சிக்கி நாசமாகின. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவின் நிஸாம்பாத் பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் எலெக்ட்ரிக் பைக் வெடித்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் அருகே இருந்த 3 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது அதே போல மற்றொரு சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. ஆந்திராவின் கரீம்நகர் மாவட்டம் ராமதுகு மண்டல் பகுதியைச் சேர்ந்தவர் ஓடிலு, விவசாயியான இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு எலெக்ட்ரிக் பைக்கை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இவர் வழக்கமாக இரவு நேரத்தில் பைக்கை சார்ஜ் போட்டு விட்டுத் தூங்கச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் வழக்கம்போல் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்று இரவு உணவு சாப்பிடத் தயாராகியுள்ளார். அப்பொழுது திடீரென அவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுத்திய இடத்திலிருந்து பயங்கரமான சத்தம் கேட்டது. அதை அறிந்த அந்த பகுதிக்கு அவர் பதறியடித்து ஓடியபோது அவர் எலெக்டரிக் பைக் வெடித்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்து.

உடனடியாக சாதூர்யமாக செயல்பட்ட அவர் தீயை அணைத்து அது மேலும் பரவாமல் தடுத்துவிட்டார். நல்லவேளையாக எலெக்ட்ரிக் பைக் வெடிக்கும் போது அதன் அருகில் யாரும் இல்லை. அதனால் எலெக்ட்ரிக் பைக் வெடிப்பில் யாருக்கும் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. இந்த எலெக்டரிக் பைக்கில் பேட்டரிதான் வெடித்துள்ளது. இதற்கான காரணம் யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை.

இவ்வளவு நாள் நன்றாக வேலை செய்த பேட்டரி திடீரென வெடித்துள்ளது. இதற்குப் பின் மின் கோளாறு கூட காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 3 மாதத்தில் இது போல ஏராளமான சம்பவங்கள் இந்தியாவில் நிகழ்ந்துவிட்டன. இதனால் மக்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதே ஒரு விதமான பயம் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் இது குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு குழு ஒன்றை அமைத்தது.

அந்த குழு விபத்து ஏற்பட்ட வாகனங்களில் பொருத்தப்பட்ட பேட்டரிகளை ஆய்வு செய்தனர் எதன் காரணமாக இந்த பேட்டரிகள் வெடித்திருக்கும் என நடத்தப்பட்ட ஆய்வில் ஆரம்பக்கட்டமாக இது பேட்டரியில் உள்ள செல்களின் வடிவமைப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் எனக் கண்டுபிடித்துள்ளார். இதுவரை நடந்த எல்லா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விபத்திற்கும் இது தான் முக்கியமான காரணமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த குறைபாடுகள் தான் உண்மையான காரணமா என தற்போது ஆய்வுகள் நடந்து வருகிறது. இந்த ஆய்வில் இது தான் உண்மையான காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டால் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் பேட்டரிகளை மாற்ற வேண்டிய சூழ் நிலை உருவாகும். அது மட்டுமல்லாமல் இதுவரை விற்பனையாகி வெடிக்காமல் இருக்கும் ஸ்கூட்டர்களையும் திரும்ப அழைத்து அதன் பேட்டரிகளையும் மாற்ற வேண்டும்.

தற்போது ஓலா, ஒகினாவா, ப்யூர் இவி, பூம் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களின் வாகனங்கள் தீ விபத்தில் சிக்கியுள்ளன. ஒரே நிறுவனமாக இல்லாமல் அநேகமான நிறுவனங்களின் வாகனங்கள் தீவிபத்தில் சிக்கியிருப்பதால் இது கட்டமைப்பு கோளாறாக இருப்பதை விட தொழிற்நுட்பத்திலேயே ஏதோ சிக்கல் இருக்கும் என்றே வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் தீவிர முயற்சியில் இறங்கி வருகிறது. இதற்காகப் பல நடவடிக்கைகளையும் வரிசலுகைககளையும் வழங்கி வருகிறது. இந்த வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதோடு, பெட்ரோல் டீசல் பயன்பாட்டையும் தவிர்ப்பதால் மத்திய அரசு தற்போது இவ்வாறான வாகனங்களை ஊக்குவித்து வருகிறது.

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் 2030 ஆண்டு இந்தியச் சாலையில் ஓடும் 80 சதவீதமான வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாகவே இருக்கும் என ஒரு இடத்தில் பேசியிருந்தார். தற்போது பேட்டரியில் ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சனை மத்திய அரசின் இந்த இலக்கிற்கு பெரும் தலைவலியை மாறியுள்ளது.

இந்த பிரச்சனையை மட்டும் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உடனடியாக சரி செய்யாவிட்டால் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்களுக்குப் பயம் ஏற்பட்டு அதன் விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றே வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இந்த பேட்டரி விஷயத்தில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் விரும்புகின்றனர்.
Note: Images are representative purpose only
Image Courtesy: ABPLive


Click it and Unblock the Notifications








