ராயல் என்பீல்டுக்கு போட்டியா பஜாஜும் களமிறங்க போகுதா!.. வின்சென்ட் பிராண்ட் பெயருக்கான உரிமத்தை பெற்ற பஜாஜ்!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் (Bajaj), வின்சென்ட் (Vincent) பிராண்ட் பெயருக்கான உரிமத்தைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் பஜாஜ் (Bajaj)-ம் ஒன்று. இந்நிறுவனமே, வின்சென்ட் (Vincent) பெயரை பயன்படுத்துவதற்கான உரிமத்தைப் பெற்றிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் பஜாஜ் நிறுவனமும் விரைவில் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக இந்திய சந்தையில் கிளாசிக் அல்லது ரெட்ரோ ரக இருசக்கர வாகனத்தை களமிறக்கலாம் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்த தகவல் பஜாஜ் வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தற்போது இந்தியாவில் ரெட்ரோ மற்றும் கிளாசிக் இருசக்கர வாகன விற்பனையில் ராயல் என்பீல்டு நிறுவனம் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது. தனியாக இந்த பிரிவில் நிறுவனம் நீண்ட நாட்களாக ஆதிக்கம் செலுத்தி வந்தநிலையில் இப்போது நிறுவனத்திற்கு போட்டி பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

சமீப சில காலமாக முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு போட்டியை வழங்கும் வகையில் தங்களின் தயாரிப்புகளைக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஜாவா, யெஸ்டி, பிஎஸ்ஏ உள்ளிட்ட நிறுவனங்கள் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு போட்டியாக இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கியிருக்கின்றன.

இதுதவிர, ஹோண்டா நிறுவனத்தின் ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்பிற்கு போட்டியாக இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கின்றது. இந்த நிலையிலேயே பிரிட்டிஷ் நிறுவனத்தின் வின்சென்ட் பிராண்ட் பெயரை பயன்படுத்துவதற்கான உரிமத்தை பஜாஜ் தற்போது பெற்றிருக்கின்றது.

ஆகையால், விரைவில் இந்நிறுவனத்தின்கீழ் ராயல் என்பீல்டுக்கு போட்டியாக அட்டகாசமான ஓர் வாகனம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வின்சென்ட் பிராண்டிற்கான உரிமத்தைப் பெற்றதன் வாயிலாக ஹார்னர் ரேஸ் டெவலப்மெண்ட் மற்றும் எஃக்லி வின்சென்ட் ஆகிய பிராண்ட் பெயர்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையும் பஜாஜிற்கு கிடைத்திருக்கின்றது.

1928 ஆம் ஆண்டு பிலிப் வின்சென்டால் உருவாக்கப்பட்டதே வின்சென்ட் மோட்டார்சைக்கிள் நிறுவனம். இவருக்கு அடுத்தபடியாக இந்நிறுவனம் டேவ் ஹோல்டர் மற்றும் குடும்பத்தினரிடம் கை மாறியது. 1948ம் ஆண்டில் ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ஓர் தரமான சம்பவத்தை இந்நிறுவனம் நிகழ்த்தியது. உலகின் மிக அதிக வேகத்தில் செல்லக் கூடிய இருசக்கர வாகனத்தை உருவாக்கியதன் வாயிலாக அன்றைய தினம் ஒட்டுமொத்த செய்தி நாளிதழ்களின் தலையங்கமாக அது மாறியது.

மணிக்கு 241.9 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடியி வின்சென்ட் பிளாக் ஷேடோவ் எனும் பைக் உருவாக்கியதன் வாயிலாகவே அது அனைத்து செய்திகளின் தலையங்கத்தில் இடம் பிடித்தது. இதற்கு அடுத்தபடியாக 2018ம் ஆண்டில் வின்சென்ட் பிளாக் லைட்னிங் பைக்கை மிக மிக அதிக விலையில் விற்பனைக்கு வழங்கியதனால் மீண்டும் இந்த உலகத்தை நிறுவனம் பரபரப்புக்கு ஆளாக்கியது.

ஆறு கோடி ரூபாய்க்கே நிறுவனம் அந்த மோட்டார்சைக்கிளை விற்பனைச் செய்தது. ஒட்டுமொத்தமாக நிறுவனம் 31 யூனிட்டுகளை மட்டுமே உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான மிக சூப்பரான மோட்டார்சைக்கிள்களை தயாரித்த நிறுவனத்தின் பிராண்ட் பெயர்களுக்கே பஜாஜ் நிறுவனம் தற்போது உரிமம் பெற்றிருக்கின்றது.

ஆகையால், விரைவில் நிறுவனம் வின்சென்ட் பிராண்ட் பெயரில் பஜாஜ் நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிளை விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ராயல் என்பீல்டு நிறுவனம் 350 சிசி முதல் 650 சிசி வரையிலான இருசக்கர வாகன பிரிவில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவில் தன்னுடைய பங்களிப்பையும் வழங்கும் விதமாக பஜாஜ் நிறுவனம் தற்போது தனித்துவமான முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.

பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே டிரையம்ப் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளருடன் இணைந்து செயல்புரிந்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே வின்சென்ட் பிராண்ட் பெயருக்கான உரிமத்தை நிறுவனம் பெற்றிருக்கின்றது. இந்திய இருசக்கர வாகன சந்தையில் தன்னுடைய ஆதிக்கத்தை வலுப்படுத்தம் விதமாக இந்த மாதிரியான தீவிர முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது, பஜாஜ்.


Click it and Unblock the Notifications








