‘ட்வின்னர்’ என்கிற பெயரில் பஜாஜ் பைக்கா? பெயருக்கான உரிமையை பெற்றது!! எந்த மாதிரியான வாகனமாக இருக்கும்?
'ட்வின்னர்' என்கிற பெயரை இந்திய சந்தைக்கான எதிர்கால மோட்டார்சைக்கிளுக்காக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பதிவு செய்து கொண்டுள்ளது. அதனை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

நமக்கு கிடைத்துள்ள ஆவண படத்தின்படி, கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 'ட்வின்னர்' (TWINNER) என்கிற பெயருக்கான காப்புரிமையை தாக்கல் செய்துள்ளது. அது தற்போது, இந்த 2022 ஜனவரி மாதத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆவண படத்தின்படி பார்க்கும்போது, ட்வின்னர் என்கிற பெயரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் ஆட்டோமொபைல் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், மோட்டார்சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், 3-சக்கர வாகனங்கள், நான்கு-சக்கர வாகனங்கள், மோட்டார்சைக்கிள்களின் என்ஜின்கள் & பாகங்களுக்கு சூட்டலாம். மற்றப்படி இந்த பெயர் குறித்த எந்தவொரு அறிவிப்பையும் இன்னும் பஜாஜ் நிறுவனம் வெளியிடவில்லை.

எங்களுக்கு தெரிந்தவரையில், ட்வின்னர் என்கிற பெயர் பஜாட் ஆட்டோ க்ரூப்பின் கீழ் உருவாக்கப்படும் புதிய நடுத்தர-அளவு இரட்டை-சிலிண்டர் என்ஜின் மோட்டார்சைக்கிளுக்கு வழங்கப்படலாம். தற்சமயம் ஏகப்பட்ட மிட்-சைஸ் என்ஜின் பைக்குகளை பஜாஜ் நிறுவனம் அதன் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள் பிராண்டான டிரையம்ப் உடனான கூட்டணியில் உருவாக்கி வருகிறது.

இதில் குறைந்தப்பட்சமாக 200சிசி-யில் இருந்து அதிகப்பட்சமாக 700சிசி வரையில் என்ஜினை கொண்ட மோட்டார்சைக்கிள்கள் அடங்குகின்றன. ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு நேரெதிர் போட்டி மாடல்களாக இவை வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பஜாஜ்- டிரையம்ப் பைக்குகள் இந்த 2022ஆம் ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படலாம் என இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்தது, இந்த 2022ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள்ளாக ஒரு மோட்டார்சைக்கிளாவது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். இவற்றில் பெரும்பாலானவை டிரையம்ப் பொன்னேவில்லே பைக்குகளை போன்று ரெட்ரோ டிசைனில் இருக்கும். ஏனெனில் இந்தியா மட்டுமின்றி உலகளவில் ரெட்ரோ ஸ்டைல் மோட்டார்சைக்கிள்களுக்கு தற்சமயம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

டிரையம்ப் மட்டுமில்லாமல், ஆஸ்திரிய மோட்டார்சைக்கிள் பிராண்டான கேடிஎம் உடனும் புனேவை சேர்ந்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கூட்டணியில் உள்ளது. இந்த கூட்டணியில் அடுத்தக்கட்டமாக 490சிசி இணையான-இரட்டை என்ஜின் அமைப்பு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக 490 அட்வென்ச்சர், 490 ட்யூக், ஆர்சி490 மற்றும் 490 சூப்பர்மோட்டோ/ எண்டூரோ என புதிய கேடிஎம் 490சிசி பைக்குகள் வரிசை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய 490சிசி என்ஜின் பஜாஜ் மாடல்களிலும் பயன்படுத்தப்படலாம். யார் கண்டது... ட்வின்னர் பைக்கில் கூட இந்த என்ஜின் பொருத்தப்படலாம். இவை எல்லாம் எங்களது கணிப்பே. பஜாஜ் ஆட்டோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால்தான் எல்லா விபரமும் தெரியவரும். அதேநேரம், இவ்வாறு காப்புரிமை பதியப்படும் அனைத்து பெயர்களும் விற்பனைக்கு வரும் மாடல்களுக்கு சூட்டப்படுவதில்லை.

ஆகையால் இந்த ட்வின்னர் பெயர் கடைசி வரையில் பயன்பாட்டிற்கு வராமல் கூட போகலாம். இதற்கு முன்பு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இதேபோன்று 'புளோர்', 'ஃப்ளூயர்' மற்றும் 'நியுரான்' என்கிற பெயர்களை பதிவு செய்திருந்தது. ஆனால் இந்த பெயர்கள் எதுவும் பஜாஜ் ஆட்டோவின் எதிர்கால எலக்ட்ரிக் வாகனங்களுக்கானவை கிடையாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களுக்காக அதன் இரண்டாவது தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவியுள்ளது. இதனை பற்றி சமீபத்தில் நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் கூட பார்த்திருந்தோம். தற்போதைக்கு இந்த புனே ஆட்டோமொபைல் நிறுவனத்தில் இருந்து சேத்தக் இ-ஸ்கூட்டர் மட்டுமே ஒரே ஒரு எலக்ட்ரிக் வாகனமாக சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.பஜாஜ் சேத்தக்கும் இந்தியாவின் சில நகரங்களில் இன்னமும் விற்பனைக்கு வரவில்லை.

ஆனால் சேத்தக்கை இந்தியா முழுவதும் சந்தைப்படுத்த பஜாஜ் ஆட்டோ விரும்புகிறது. இதற்கிடையில் தனது எலக்ட்ரிக் வாகன வரிசையை விரிவுப்படுத்தவும் இந்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அதன்பின் இதன் கூட்டணி பிராண்ட்களில் இருந்தும் எலக்ட்ரிக் வாகனங்கள் களமிறக்கப்படும். நமது சென்னையிலும், ஹைதராபாத்திலும் கடந்த 2021 செப்டம்பர் மாத துவக்கத்தில் தான் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








