சீனாவிற்கே இங்கிருந்துதான் ஏற்றுமதியாக போகுது!! அங்கேயும் தனது புதிய ஜி310 ஆர்ஆர் பைக்கை களமிறக்கும் BMW!
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்ஆர் பைக் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கே விற்பனை செய்யப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய மோட்டார்சைக்கிளாக ஜி310 ஆர்ஆர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. பிஎம்டபிள்யூவின் மற்றொரு விலை குறைவான பைக்காக களமிறக்கப்பட்டுள்ள இது முன்பு இருந்தே விற்பனையில் இருக்கும் ஜி310 ஆர் பைக்கிற்கும், ஜி310 ஜிஎஸ் பைக்கிற்கும் மத்தியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்ஆர் மோட்டார்சைக்கிளானது டிவிஎஸ் மோட்டாரின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். ஏனெனில் இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ மோட்டார்ராடும், டிவிஎஸ் மோட்டாரும் கூட்டணியில் உள்ளன. இதனாலேயே தமிழகத்தில் உள்ள டிவிஎஸ்-இன் ஓசூர் தொழிற்சாலையில்தான் இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஜி310 ஆர்ஆர் பைக்கை முதலாவதாக பெற்றுள்ள நாடு நமது இந்தியா ஆகும். இதனை தொடர்ந்தே மற்ற நாடுகளில் இந்த புதிய பைக்கை அடுத்தடுத்து அறிமுகப்படுத்த பிஎம்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த வகையில், ஜி310 ஆர்ஆர் பைக் சீனாவில் அடுத்த 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றல், இந்தியாவில் இருந்துதான் சீனாவிற்கு இந்த பைக் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், நமது தமிழகத்தில் ஓசூரில் தயாரிக்கப்படும் ஜி310 ஆர்ஆர் பைக்குகளையே சீன மக்கள் விரைவில் பயன்படுத்த உள்ளனர். உலகளவில் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடுகளுள் சீனாவும் ஒன்று. ஆனால் அத்தகைய நாட்டிற்கே பிஎம்டபிள்யூ பைக் நம் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது உண்மையில் பூரிப்பை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் ஆசிய, சீன, பசுபிக் & ஆப்பிரிக்க நாடுகளுக்கான தலைமை அதிகாரி மார்கஸ் முல்லர் ஜாம்ரே கருத்து தெரிவிக்கையில், "பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்ஆர்-இன் எங்களின் ஏற்றுமதிகள் சீனாவில் தொடங்கும். இது இந்தியாவிற்கு அடுத்தப்படியாக 2வது சந்தையாக இருக்கும். சீனாவில் இந்த தயாரிப்பு 2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியிடப்படும்.

ஜி310 ஆர்ஆர் இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்படும். டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடனான எங்களின் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இந்த பைக்குகள் சீனாவில் விற்பனைக்கு செல்லவுள்ளன" என்றார். பிஎம்டபிள்யூ பைக்குகள் இந்தியாவை காட்டிலும் சீன & அமெரிக்க நாடுகளில் தான் அதிகமாக விற்பனையாகின்றன என்றாலும், இந்த நிறுவனத்தின் ஆரம்ப-நிலை 310சிசி பைக்குகள் விற்பனையில் முன்னிலை வகிப்பது இந்தியா தான்.

எந்த அளவிற்கு என்றால், உலகளவில் பிஎம்டபிள்யூ 310சிசி பைக்குகள் இதுவரையில் ஏறக்குறைய 50 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் நமது நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். இந்தியாவிற்கு அடுத்து சீனாவில் தற்போது வரையில் கிட்டத்தட்ட 6,000 பிஎம்டபிள்யூ 310சிசி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சீனாவை தொடர்ந்து 1,200- 1,300 பிஎம்டபிள்யூ 310சிசி பைக்குகளின் விற்பனை உடன் லத்தீன் அமெரிக்கா 3வது இடத்தில் உள்ளது. இவற்றிற்கு அடுத்து ஐரோப்பிய நாடுகள், பிலிப்பைன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா என உள்ளன. நமது இந்தியாவில் பிரீமியம் தர பைக்குகளையும் குறைந்து விலையில் வாங்கவே பலர் விரும்புகின்றனர். பிஎம்டபிள்யூ பைக்குகளை மிக அதிக விலையில் வாங்குவோரின் எண்ணிக்கை நம் நாட்டில் குறைவுதான்.

ஆனால் சமீபத்திய அறிமுகமான ஜி310 ஆர்ஆர் பைக்கிற்கு இதுவரையில் மட்டுமே 500க்கும் அதிகமான முன்பதிவுகள் கிடைத்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த முல்லர் ஜாம்ரே, "2022இன் கடந்த முதல் அரையாண்டில் சந்தை மிக சிறப்பாக முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த வருடத்திலும் கடந்த வருடத்தை போல சந்தை நல்லப்படியாக வளர்ச்சி காண வேண்டும் என எண்ணுகிறோம்" என்றார்.

புதிய பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்ஆர் பைக்கை பொறுத்தவரையில், இதன் பெயரில் இருக்கும் ஆர்ஆர் என்பது ரோடு ரேசிங் ஸ்போர்ட்ஸ் என்பதை குறிப்பதாக உள்ளது. ஜி310 ஆர்ஆர் மற்றும் ஜி310 ஆர்ஆர் ஸ்டைல் ஸ்போர்ட் என இரு விதமான வேரியண்ட்களில் இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.2.85 லட்சம் மற்றும் ரூ.2.99 லட்சமாகும்.


Click it and Unblock the Notifications








