80% சார்ஜிங் வெறும் 30 நிமிடங்களில்... புதிய கானோபஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!! முன்பதிவுகள் விரைவில் துவக்கம்!
இந்தியாவின் வளர்ந்துவரும் இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்களுள் ஒன்றான கானோபஸ் 4 புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

SRAM & MRAM மற்றும் ATD குழுமத்தின் ஒரு அங்கமாக கானோபஸ் பிராண்ட் விளங்குகிறது. இந்த இவி ஸ்டார்ட்-அப் பிராண்டில் இருந்து விரைவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன. இந்த பிராண்டிற்கு உத்திர பிரதேசம், நொய்டாவில் தலைமையகம் உள்ளது.

வரும் காலங்களில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிப்பதற்காக பல்வேறு முதலீடுகள் இந்த பிராண்டில் இருந்து மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்படி முதற்கட்டமாக ரூ.100 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. கானோபஸ் பிராண்டில் இருந்து தற்சமயம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான முன்மாதிரிகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் சில்லறை விற்பனை மையங்கள் பெரியதாக எந்த நகரத்திலும் இல்லை.

நாடு முழுவதும் டீலர்ஷிப் மையங்களை நிறுவும் முயற்சியில் தயாரிப்பு குழுமம் உள்ளது. இந்த நிலையில் தற்போது கானோபஸ் பிராண்டில் இருந்து நான்கு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அரோரா, ஸ்கார்லெட், கோலெட் மற்றும் வலேரியா என்பன இந்த நான்கு புதிய இவி-கள் ஆகும்.

இந்த எலக்ட்ரிக் 2-வீலர்களில் டிரான்ஸ்மிஷனுக்கு CAMIVT மற்றும் கண்ட்ரோலருக்கு FOC என ஜெர்மன் மற்றும் கொரியன் தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. அத்துடன் இவற்றில் பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது அதி செயல்திறன்மிக்க ஆற்றல் பாதுகாப்பு அமைப்பாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிப்பதற்காக பல்வேறு தொழில் நிறுவனங்களுடனும் கானோபஸ் பிராண்ட் கூட்டணியை ஏற்படுத்தி கொண்டு வருகிறது. கானோபஸ் இவி-களுக்கான ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையம் அகமதாபாத்தில் நிறுவப்பட்டுள்ளது. தொழிற்சாலையை இந்த நிறுவனம் ராஜஸ்தானில் கட்டமைக்க திட்டமிட்டுள்ளது.

சில வெளிநாட்டு பிராண்ட்களின் தொழிற்நுட்பங்களை தவிர்த்து, கிட்டத்தட்ட 99% இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட உள்ள இந்த 4 கானோபஸ் இவி-களின் உற்பத்தி பணிகள் கட்டமைக்கப்பட்டு வரும் தொழிற்சாலையில் வருகிற 2022 ஏப்ரலில் இருந்து துவங்கப்பட்டுவிடும் என ஏற்கனவே கானோபஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் கானோபஸ் அரோரா, ஸ்கார்லெட், கோலெட் மற்றும் வலேரியா எலக்ட்ரிக் 2-வீலர்ஸ்க்கான முன்பதிவுகள் அடுத்த மார்ச் மாதத்தில் இருந்து துவங்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கிற்கும் புக்கிங் துவங்கப்படவில்லை என்றாலும், முதற்கட்டமாக குறைந்தப்பட்சம் இரு மாடல்களுக்கான முன்பதிவுகளாவது அடுத்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுவிடும்.

ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்க இந்த இவி-களில் தொழிற்நுட்பங்களின் நுண்ணறிவு (IoT) சார்ந்த டெலெமேட்டிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பத்தின் மூலம் திரட்டப்படும் தகவல்கள் இந்த 4 கானோபஸ் எலக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்படும் ஸ்மார்ட் டிஎஃப்டி டேஸ்போர்ட் திரையில் காட்டப்படும். இதனால் மொபைல் போன் உடன் இணைக்கக்கூடியதாக வழங்கப்பட உள்ள இந்த திரையின் மூலமாக ஓட்டுனரின் பண்பு, பேட்டரியின் நிலை, ரைடிங் மோட்கள் உள்ளிட்ட விபரங்களை ரைடர் பெறலாம்.

இவற்றுடன் ஜியோஃபென்சிங், ஜிபிஎஸ் டிராக்கிங், பெண் ஓட்டுனர்களுக்கு உதவியாக எஸ்ஒஎஸ் வசதி, அவசர நேரங்களில் தேவைப்படும் பழுது பார்ப்பு உதவி உள்ளிட்டவற்றையும் கானோபஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெற்றுவர உள்ளன. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரியை சார்ஜ் நிரப்ப 4இல் இருந்து 5 மணிநேரம் வரையில் தேவைப்படும்.

ஆனால் விரைவில் இதனை 80 சதவீத பேட்டரி சார்ஜ்க்கு 30 நிமிடங்கள் என மாற்றிவிடுவோம் என்கிறது தயாரிப்பு குழுமம். இதற்காக நாடு முழுவதும் சார்ஜிங் நிலையங்களை விரிவுப்படுத்தும் முனைப்பில் இந்த குழுமம் உள்ளது. சார்ஜிங் நிலையங்கள் இருக்கும் பகுதிகளை அதிகாரப்பூர்வ மொபைல் செயலியின் மூலம் தெரிந்து கொள்ளலாமாம்.

அதேநேரம், மேற்கூறப்பட்டுள்ள புதிய கானோபஸ் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் இருந்து பேட்டரியை தனியாக நீக்கி கொள்ளவும் முடியும். பேட்டரிகளின் ஆற்றல் திறன்களை அதிகப்படுத்த கொரியன் காற்றாற்றல் தொழிற்நுட்பம் ஒன்று இந்த எலக்ட்ரிக் 2-வீலர்ஸில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக SRAM & MRAM மற்றும் ATD குழுமம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








