சலுகை விலையில் மேட்-இன் சென்னை எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்.. ஒரு முற சார்ஜ் பண்ணா 85கிமீ போலாம்!
சென்னையில் உள்ள ஈக்காட்டுத்தாங்கலை மையமாகக் கொண்டு இயங்கும் வோல்ட்ரிக்ஸ் மொபிலிட்டி (Voltrix Mobility) நிறுவனம், அதன் புதிய மற்றும் முதல் மின்சார மிதிவண்டியை நாட்டில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்த வாகனம் குறித்த முக்கிய மற்றும் சுவாரஷ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் வோல்ட்ரிக்ஸ் மொபிலிட்டி (Voltrix Mobility) நிறுவனம், அதன் புதுமுக எலெக்ட்ரிக் சைக்கிள் ஒன்றை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ட்ரெஸர் (Tresor) எனும் பெயர் கொண்ட எலெக்ட்ரிக் மிதிவண்டியையே நிறுவனம் விற்பனைக்கு களமிறக்கி இருக்கின்றது.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 55,999 என்ற விலையை வோல்ட்ரிக்ஸ் மொபிலிட்டி நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த விலையானது இப்போது ப்ரீ-ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது சிறப்பு சலுகையாக இவ்விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

இந்த சலுகை விலைக்கு பின்னர் ட்ரெஸர் இ-சைக்கிள் ரூ. 64,999 என்ற விலைக்கு விற்பனைச் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. ரூ. 999 என்ற விலையிலேயே மின்சார மிதிவண்டிக்கான ப்ரீ புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இதனை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவில் எலெக்ட்ரிக் சைக்கிள் டெலிவரி கொடுக்கப்பட இருக்கின்றது. இந்த பணிகள் மிக விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன.

நடப்பு ஜனவரி மாதத்தின் மூன்றாவது வாரத்திற்குள் டெலிவரி வழங்கும் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், துள்ளியமான தேதி பற்றிய விபரத்தை வோல்ட்ரிக்ஸ் மொபிலிட்டி வெளியிடவில்லை. ட்ரெஸர் எலெக்ட்ரிக் மிதிவண்டியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுடன் ஐந்து விதமான பெடல் அசிஸ்ட் மற்றும் த்ரோட்டில் தேர்வுகள் இ-சைக்கிளில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது வோல்ட்ரிக் இ-மிதிவண்டியின் இயக்கத்தை மிக சிறப்பானதாக மாற்ற உதவும். எலெக்ட்ரிக் சைக்கிளில் 250 வாட் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த மின் மோட்டாருக்கான மின்சார திறனை லித்தியம் அயன் பேட்டரியே வழங்குகின்றது. இதன் மின் மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ இயங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இம்மிதிவண்டியின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு வோல்ட்ரிக்ஸ் மொபிலிட்டி நிறுவனம் சுலப கடன் திட்டத்தை வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

இந்த இ-சைக்கிள் அலுவலக மற்றும் தினசரி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக, நகர்புற பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஓர் இந்திய நிறுவனம் என்பதால் இந்தியாவின் அனைத்து விதமான காலகட்டத்தையும், சாலை நிலைகளையும் உணர்ந்து ட்ரெஸர் இ-சைக்கிள் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

வோல்ட்ரிக்ஸ் ட்ரெஸர் இ-சைக்கிளின் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிடிஓ, சக்திவிக்னேஷ்வர் ஆர், இந்த சைக்கிளே நிறுவனத்தின் முதல் தயாரிப்பு என தெரிவித்தார். மேலும், இந்த இ-சைக்கிளை அலுவலகம் செல்வோருக்காகச பிரத்யேகமாக வடிவமைத்து, உருவாக்கி இருப்பதாகும் கூறினார்.

மேலும், பேசி அவர், "அடுத்த ஆறு மாதங்களில் மேலும் இரு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய இருப்பதாக" முக்கிய தகவலை வெளியிட்டார். இந்திய இ-சைக்கிள் சந்தையை அதகளப்படுத்தும் வகையில் இந்த வாகனங்களின் வருகை அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இ-சைக்கிளில் பேட்டரியை தனியாக கழட்டும் வசதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதனை சாவி கொடுத்தால் மட்டுமே கழட்ட முடியும். ஆகையால், இது திருடு போகும் வாய்ப்பு மிக குறைவு. இ-சைக்கிளில் பயன்படுத்தப்பட்டிருப்பது பிரஸ்லெஸ் மோட்டாராகும். இத்துடன், சிறிய திரை ஒன்று கொடுக்கப்பட்டிருக்கின்றது. பல்வேறு சாதனங்களை கன்ட்ரோல் செய்யக் கூடிய வசதி அதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் இருக்கை சிங்கப்பூர் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், சொகுசான மற்றும் சௌகரியமான பயண அனுபவம் நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்ட டயர்கள் மற்றும் 100 மிமீ சஸ்பென்ஷன் லாக்-அவுட் வசதியுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும், பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் முன் மற்றும் பின் பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








