“எதிர்காலத்திலும் சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்கலாம், ஆனால்...”- ஓலா சிஇஓ-வின் சமீபத்திய பேட்டி!!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பு அரிதானதே என்றாலும், எதிர்காலத்திலும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறலாம் என அதிர்ச்சிகர விஷயத்தை ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஒ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பு சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இதனால் எரிபொருள் என்ஜின் ஸ்கூட்டர்களில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாறியவர்கள் மத்தியில், ஒருவித குழப்பமும், புதியதாக வாங்கவுள்ளவர்களிடம் பயமும் தொற்றி கொண்டுள்ளது.

இந்த சந்தேகத்தையும், பயத்தையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் குறைக்க இவி தயாரிப்பு நிறுவனங்கள் பல விதமான முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனமும் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஏற்பட்டுவரும் பிரச்சனைகளை சரிச்செய்ய பலக்கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த மே 15ஆம் தேதி நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாவிஷ் அகர்வால், "எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொடர்பான மேலும் சில தீப்பிடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இருப்பினும் இவை அரிதானதாக மாறும். எதிர்காலத்தில் சில நிகழ்வுகள் நடக்குமா என்றால், இருக்கலாம்.

ஆனால் எங்கள் உறுதிப்பாடு என்னவென்றால், ஒவ்வொரு சிக்கலையும் நாங்கள் பகுப்பாய்வு செய்வோம் என்பதை உறுதி செய்வோம். மேலும் திருந்தங்கள் இருந்தால் அவற்றை நாங்கள் சரிசெய்வோம். பேட்டரி அல்லது வேறு ஏதாவது ஒன்றில் சில நேரங்களில், சில சிறிய குறைப்பாடுகள் இருக்கும். இவை உள் ஷார்ட் சர்க்யூட்டிற்கு வழிவகுக்கின்றன" என்றார்.

மேலும் தொடர் தீப்பிடிப்பு சம்பவங்களை பற்றி பேசிய பாவிஷ் அகர்வால், "இவை மிகவும் அரிதானவை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவை" என்று கூறினார். கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் சந்தையில் களமிறங்கிய ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த மார்ச் மாத இறுதியில் புனேவில் தீப்பிடிப்பிற்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் எவருக்கும் காயமில்லை என்றாலும், இது நாடு முழுவதுமே வைரலானது.

இந்த சம்பவத்திற்கு உடனடியாக பதிலளித்த சிஇஓ பாவிஷ் அகர்வால், டெலிவிரி செய்யப்பட்ட 50 ஆயிரம் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இந்த ஒரு மாதிரி மட்டுமே தீப்பிடிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும், இருப்பினும் இதுகுறித்து முறையான விசாரணை சம்பவ இடத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சார்பில் 1,441 எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் திரும்ப அழைக்கப்படுவதை பற்றி நமது செய்திதளத்தில் கூட பார்த்திருந்தோம்.

இந்த திரும்ப அழைக்கப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விரிவான பழுதறிதல் மற்றும் சுகாதார சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓலா நிறுவனம் மட்டுமின்றி, அரசாங்கம் சார்பிலும் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடிப்பு சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் விசாரணைகளின் மூலம் இந்த இரு குழுக்களும் வெவ்வேறான முடிவை எட்டியுள்ளன.

அதாவது, அரசு சார்பில் விசாரித்த போலீஸார், இந்த தீப்பிடிப்பு சம்பவத்திற்கு ஸ்கூட்டரின் பேட்டரி தொகுப்புகளும், பேட்டரி நிர்வாக மேலாண்மை அமைப்பே காரணம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆனால் ஓலா எலக்ட்ரிக் நிறுவனமோ அதிகப்படியான வெப்ப சூழலினாலே இந்த தீப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. இவை இந்த இரு குழுக்களின் முதற்கட்ட விசாரணையின் முடிவுகள் என்பதால், இறுதிக்கட்ட முடிவுகள் எவ்வாறு வெளிவரவுள்ளன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டர்களுக்கான பேட்டரிகளை தென்கொரியாவை சேர்ந்த எல்ஜி எனர்ஜி தீர்வுகள் நிறுவனத்திடம் இருந்து பெறுகிறது. தீப்பிடிப்பு சம்பவங்கள் குறித்து இந்த நிறுவனம், "இந்திய அரசாங்கம் இதுவரையில் தனது விசாரணை அறிக்கையை வெளியிடவில்லை அல்லது எங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அதுமட்டுமில்லாமல், மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விபத்துக்கான மூல காரணத்தை நாங்கள் இன்னும் கண்டறியவில்லை.

ஆதலால் இதுகுறித்து எங்களால் எந்தவொரு பதிலையும் தெரிவிக்க இயலாது" என தெரிவித்துள்ளது. தனது பேட்டரி தொகுப்பு இசிஇ136 தரத்திற்கு இணக்கமானது என்கிறது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம். இது ஐரோப்பிய ஸ்டாண்டர்ட் & ஏஐஎஸ் 156 ஸ்டாண்டர்ட்களுக்கு இணையானது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்துடையது மட்டுமின்றி, ப்யூர் இவி மற்றும் ஒகினவா பிராண்ட்களின் சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் தீப்பிடிப்பு சம்பவங்களுக்கு உள்ளாகியுள்ளன.


Click it and Unblock the Notifications








