பெட்ரோல் வண்டி ஓட்டி போர் அடிக்குதா? விரைவில் களமிறங்குகிறது ராயல் என்பீல்டின் எலெக்ட்ரிக் பைக்!
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மின்சார மோட்டார்சைக்கிளை எப்போது இந்தியாவில் எதிர்பார்க்கலாம் என்பதற்கான பதிலை நிறுவனத்தின் எம்டி தற்போது வெளியிட்டிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு அண்மையில் ஹண்டர் 350 எனும் புதுமுக பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மிக பெரிய அளவில் இந்த இருசக்கர வாகனத்திற்கு எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில் ஆகஸ்டு 7ம் தேதி அன்று இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது ராயல் என்பீல்டு நிறுவனம்.

இந்த இருசக்கர வாகன அறிமுக நிகழ்வின்போது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஐஷர் நிறுவனத்தின் எம்டி சித்தார்தா லால் இடத்தில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தவகையில் நிறுவனத்தின் எதிர்கால தயாரிப்புகுறித்தும் கேள்விகள் எழுப்பட்டன. இதன் வாயிலாகவே நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி திட்டம் பற்றிய தகவல் தற்போது தெரிய வந்திருக்கின்றது.

ராயல் என்பீல்டு நிறுவனம் மின்சார மோட்டார்சைக்கிளை உற்பத்தி செய்யும் பணியை விரைவில் தொடங்கியிருப்பதாக சித்தார்தா லால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டின் அனைத்து சாலைகளிலும் மின்சார இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த நிலையிலேயே ராயல் என்பீல்டு நிறுவனமும் மின்சார வாகன உற்பத்தி பணியில் களமிறங்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் தற்போது 350 சிசி இருசக்கர வாகன உற்பத்தியில் மிக சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இத்தகைய சிசி திறன் கொண்ட மின்சார வாகனங்களை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என தகவல் தெரிவிக்கின்றன.

ஆகையால், முன்னதாக குறைந்த சிசி திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளே நிறுவனத்தின்கீழ் எதிர்பார்க்கப்படுகின்றது. 3 அல்லது 4 ஆண்டுகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேலையில் நிறுவனம் 2025-26 க்குள் தங்களின் மின்சார வாகனத்தை அறிமுகம் செய்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.

நிறுவனத்தின் தற்போதையே ஏதேனும் ஓர் புகழ்வாய்ந்த மாடலே மின்சார வெர்ஷனில் எதிர்பார்க்கப்படுகின்றது. அது கிளாசிக் 350 பைக்காககூட இருக்கலாம். ஏனெனில் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகன மாடலாக கிளாசிக் 350யே உள்ளது. இதற்கு வரவேற்பு அதிகம். ஆகையால், இந்த வாகனத்தை மின்சார வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் ஏராளம் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சார இருசக்கர வாகனத்தின் வருகை குறித்து சித்தார்தா லால் கூறியதாவது, "தற்போதையே சூழலில் 350 சிசி அல்லது 650 சிசி திறனுக்கு இணையான மின்சார மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தினால் அது மிக மிக விலையுயர்ந்ததாக இருக்கும். ஆகையால், நாங்கள் மின்வாகன உற்பத்தி செலவு சற்றுக் கட்டுக்குள் வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றோம். உற்பத்தி செலவு குறையும் நிறுவனம் மின்சார வாகனத்தை அறிமுகம் செய்யும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "எங்களின் மின்சார இருசக்கர வாகனங்கள் நுகர்வோரின் செலவை குறைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படப்போவதில்லை. அவை, மிக சிறந்த சவாரி அனுபவத்தை வழங்கும் பொருட்டும் உருவாக்கப்பட உள்ளது" என தெரிவித்தார். ஆகையால், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிற தயாரிப்புகளைப் போலவே மின்சார வாகனங்களும் அதிக பவர்ஃபுல்லானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பிற்காக புதிய தளத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து தற்போது விற்பனையில் இருக்கும் பிற மின்சார மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அது நல்ல ரேஞ்ஜ் திறனை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது இந்திய சந்தையில் கணிசமான அளவிலேயே மின்சார மோட்டார்சைக்கிள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் எக்கசக்க தேர்வுகள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே ஒட்டுமொத்த மின்சார வாகன பிரிவையும் அதகளப்படுத்த ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் இந்த மின்சார இருசக்கர வாகனம் எப்போது வருமே என்கிற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழும்ப தொடங்கியிருக்கின்றது. இதற்கு தற்போது வெளியாகியிருக்கும் தகவலே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
Source: TOI


Click it and Unblock the Notifications








