இந்தியாவில் ரூ.250 கோடி முதலீடு, தெலுங்கானாவில் தொழிற்சாலை!! 3 மின்சார ஸ்கூட்டர்களை களமிறக்கும் யுஏஇ பிராண்ட்!
ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த இவிய்யும் (EVeium) இந்தியாவில் அடுத்த 30 நாட்களில் புதியதாக 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அடுத்தடுத்ததாக அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அவை என்னென்ன எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்பதை பற்றியும், இவிய்யும் நிறுவனத்தை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மெடா4 குழுமம் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் கால்பதிக்க ஆயத்தமாகி வருகிறது. இதன்படி முதற்கட்டமாக ரூ.250 கோடியை இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்த இந்த குழுமம், மேலும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பிற்காக வோல்ட்லி எனர்ஜி என்ற பெயரில் தெலுங்கானாவில் புதியதாக ஒரு தொழிற்சாலையை நிறுவவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மெடா4 குழுமத்தில் ஓர் அங்கமாக இருக்கும் எலிசியும் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் இன்று (ஜூன் 24) அதன் எலக்ட்ரிக் இருசக்கர வாகன பிராண்டாக இவிய்யும் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது மட்டுமில்லாமல், இந்த இவி ஸ்டார்ட்-அப் பிராண்டில் இருந்து அடுத்த 30 நாட்களுக்குள், அதாவது அடுத்த 1 மாதத்திற்குள் 3 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுக செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

யுஏஇ-ஐ சேர்ந்த குழுமத்தின் கீழ் அங்கம் வகித்தாலும், இவிய்யும் முற்றிலுமாக மேட்-இன்-இந்தியா பிராண்டாக செயல்படவுள்ளது. இதனால் இந்த இவி ஸ்டார்ட்-அப் பிராண்டில் இருந்து களமிறக்கப்பட உள்ள 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் தெலுங்கானாவில் புதியதாக கட்டமைக்கப்பட உள்ள வோல்ட்லி எனர்ஜி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த புதிய தொழிற்சாலையை கட்டமைப்பதற்காக தெலுங்கானா மாநில அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மெடா4 குழுமம் இதற்காக அந்த மாநிலத்தில் ஜகீராபாத் பகுதியில் 15 ஏக்கர் பரப்பளப்பில் நிலத்தையும் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், ரூ.250 கோடி முதலீட்டில் உருவாகும் இந்த தொழிற்சாலையை முழுவதுமாக அடுத்த 2023 மார்ச் மாதத்திற்குள் நிறுவி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெடா4 குழுமத்தின் சிஇஒ முஸாம்மில் ரியாஸ் கருத்து தெரிவிக்கையில், "இந்திய ஒழுங்குமுறை ஆணையத்தால் அமைக்கப்பட்ட ஃபேம்-2 ஒப்புதல்களுக்கு இணங்க, இந்திய வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் தரம் சார்ந்த எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம். ஒரு தொழில்முறை மற்றும் திறமையான குழுவுடன், பாதுகாப்பாக மற்றும் நம்பிக்கையாக இவி பயணம் செய்வது எவ்வாறு என்று இந்தியர்களின் மனதை ஒழுங்குப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.

இவிய்யும் பிராண்டின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் துணை தலைவர் ஆதித்யா ரெட்டி பேசுகையில், "இந்தியாவில் எங்களது மதிப்பை நிலைப்படுத்துதல் மற்றும் மொபைலிட்டி போட்டியை மனதில் கொண்டு 3 புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துகிறோம். மேலும், இந்திய வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தரம் மற்றும் தொழிற்நுட்பத்தை கொண்ட முழுமையான மேட்-இன்-இந்திய தயாரிப்பை உருவாக்க உத்தேசித்துள்ளோம்" என்றார்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி, பைசைக்கிள்கள் மற்றும் எலக்ட்ரிக் பைக்குகளையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கும் இவிய்யும், தனது சொந்த தகவல் தொழிற்நுட்ப செயலியையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது. இந்த செயலியின் மூலமாக டிஜிட்டல் பூட்டு, அருகில் உள்ள சார்ஜிங் நிலையங்களை கண்டறிதல், அருகில் உள்ள முக்கிய இடங்களை அடையாளம் காணுதல் உள்பட பல தகவல்களை ஸ்மார்ட்போன் வாயிலாக பெறலாம்.

இவிய்யும் நிறுவனம் ஏற்கனவே தனது பிராண்டிற்கான அதிகாரப்பூர்வ டீலர்களை ஒன்றிணைக்கும் பணிகளை துவங்கிவிட்டது. இதனால் நடப்பு 2022-23 நிதியாண்டிற்குள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா பிரதேசம், தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்காளம், ஒடிசா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் மற்றும் டெல்லி-என்சிஆர் உள்ளிட்ட மாநிலங்களில் இவிய்யும் பிராண்டின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப் ஷோரூம்களை காணலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








