மஹிந்திராவின் தொழிற்சாலையில் இருந்து ஹீரோ எலக்ட்ரிக்கின் முதல் இவி!! இனி தயாரிப்பு எல்லாமே இங்க தான்!
மஹிந்திராவின் தொழிற்சாலையில் ஹீரோ எலக்ட்ரிக்கின் முதல் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் முழுவதுமாக தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்தும், மஹிந்திராவின் தொழிற்சாலையில் இருந்து முதலாவதாக வெளியேற்றப்பட்ட ஸ்கூட்டர் குறித்தும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் குழுமமான மஹிந்திரா & மஹிந்திரா குழுமம், நாட்டில் வேகமாக முன்னணி இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக வளர்ந்துவரும் ஹீரோ எலக்ட்ரிக் உடன் ஏற்கனவே கூட்டணி சேர்ந்தது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை மேம்படுத்துவது என்கிற நோக்கத்துடன் இந்த கூட்டணி ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், வருடத்திற்கு ஒரு மில்லியன் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பது என இந்த கூட்டணியில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ரூ.150 கோடி மதிப்பில், 5 வருடங்களுக்கு இந்த கூட்டணி இருக்கும் என இந்த இரு நிறுவனங்களின் சார்பில் கடந்த ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டணியில், இவ்விரு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான பாகங்கள் விநியோக சங்கிலியையும், ப்ளாட்ஃபாரத்தையும் உருவாக்க உள்ளன.

மேலும், கூட்டணி கொள்கையின்படி மஹிந்திராவின் தொழிற்சாலையை ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தனது தயாரிப்புகளுக்காக பயன்படுத்தி கொள்ளவுள்ளது. இந்த நிலையில் தற்போது மஹிந்திரா க்ரூப் & ஹீரோ எலக்ட்ரிக் கூட்டணியில் முதல் எலக்ட்ரிக் இருசக்கர வாகனமாக ஆப்டிமா மஹிந்திராவின் பிதாம்பூர் தொழிற்சாலையில் இருந்து முழுவதுமாக தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள படத்தினை தான் மேலே காண்கிறீர்கள். ஆப்டிமா மட்டுமின்றி, என்.ஒய்.எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் மஹிந்திரா க்ரூப்பின் இந்த பிதாம்பூர் தொழிற்சாலையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அத்துடன், இந்த கூட்டணியின்படி இவ்விரு நிறுவனங்களும் பியூஜியோட் மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்பு பணிகளிலும் ஈடுப்பட உள்ளன.

ஐரோப்பாவில் வரவேற்பை பெற்றுவரும் பியூஜியோட் பிராண்டையும் மஹிந்திரா & மஹிந்திரா குழுமமே சொந்தமாக கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணியில் புதியதாக வெளிவரும் ஒவ்வொரு எலக்ட்ரிக் இருசக்கர வாகனமும் ஹீரோ எலக்ட்ரிக் மற்றும் மஹிந்திராவின் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு குழுக்களின் கருத்துகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட உள்ளதாக இந்த இரு நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கூட்டணி தொடர்பான அறிவிப்பின் போது ஹீரோ எலக்ட்ரிக்கின் நிர்வாக இயக்குனர் நவீன் முஞ்சல் கருத்து தெரிவிக்கையில், "இந்த கூட்டணியின் மூலம், எங்களது தயாரிப்பு பணிகளை மேம்படுத்துவதற்கான திறன்களை அடைய முடியும். மஹிந்திரா க்ரூப்பின் விநியோக சங்கிலியை பயன்படுத்தி நாட்டின் முக்கிய நகரங்களில் புதிய மையங்களை திறக்க முடியும்" என்றார்.

இதற்கு முன்னதாக ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் 24/7 சாலையோர உதவி நிறுவனமான ட்ரெயின் & அப்ஸ்கில் உடன் கூட்டு சேர்வதாக அறிவித்திருந்தது. இந்த சாலையோர உதவிகளை வழங்கும் நிறுவனத்திடம் 20,000 மெக்கானிக்குகள் நாடு முழுவதும் உள்ளனர். தனிப்பட்ட கேரேஜ் உரிமையாளர்கள் என்கிற பெயரில் திட்டம் ஒன்றினை ஹீரோ எலக்ட்ரிக் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே இந்த கூட்டணி ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூறியதுதான், இந்தியாவில் மிகவும் வேகமாக பிரபலமான இவி பிராண்டாக ஹீரோ எலக்ட்ரிக் வளர்ந்துவருகிறது. ஒரு மாதத்தில் அதிகளவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்று பார்த்தால், அதில் நிச்சயம் ஹீரோ எலக்ட்ரிக்கும் ஒன்றாக இருக்கும். அந்த அளவிற்கு நாட்டின் பல நகரங்களில் முக்கிய பிராண்டாக வளர்ந்துள்ள ஹீரோ எலக்ட்ரிக் விற்பனையில் 50,000 என்கிற மைல்கல்லை வெற்றிக்கரமாக கடந்த நவம்பரில் அடைந்ததாக அறிவித்தது.

இந்த எண்ணிக்கை இப்போது பல ஆயிரங்கள் அதிகரித்திருக்கலாம். இதன் மூலமாக நடப்பு 2021-22 நிதியாண்டை நல்லதொரு மதிப்புடன் நிறைவு செய்ய இந்த நிறுவனம் விரும்புகிறது. மாதத்திற்கு சராசரியாக 6,000- 8,000 எலக்ட்ரிக் 2-வீலர்கள் இந்த பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் இந்த நிதியாண்டு முடிவதற்குள் 1 லட்சம் என்கிற மைல்கல்லை ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் கடந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

ஹீரோ எலக்ட்ரிக் முதன்முதலாக கடந்த 2007இல் நிறுவப்பட்டது. இந்த பிராண்டில் இருந்து அதிகளவில் விற்பனையாகும் மாடல்களாக ஆப்டிமா & என்ஒய்எக்ஸ் விளங்குகின்றன. இவை இரண்டையும் தேவைக்கு ஏற்ப தயாரிக்க லூதியானாவில் புதியதொரு தொழிற்சாலையை ஹீரோ எலக்ட்ரிக் நிறுவி வருகிறது. இது வருடத்திற்கு 5 லட்ச எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் அளவிற்கு திறன் கொண்டதாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








