சாதா சைக்கிளை கொடுத்திட்டு இ-சைக்கிளை ஓட்டி போங்க! பிரபல நிறுவனம் அதிரடி! இந்த சலுகை எத்தனை நாளுக்கு தெரியுமா?
பிரபல மின்சார மிதிவண்டிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று சாதாரண சைக்கிளுக்கு எக்ஸ்சேஞ்ஜாக இ-மிதிவண்டியை வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனமான கோஜீரோ மொபிலிட்டி (GoZero Mobility), புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு சிறப்பு திட்டம் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. 'சுவிட்ச்' (Switch) எனும் திட்டத்தையே அது அறிமுகம் செய்திருக்கின்றது.

இத்திட்டத்தின் அடிப்படையில் கோ-ஜீரோ நிறுவனம் வழக்கமான மிதிவண்டியை எக்ஸ்சேஞ்ஜ் வாயிலாக பெற்றுக் கொண்டு நிறுவனத்தின் புதிய இ-சைக்கிளை வழங்க இருக்கின்றது. வழக்கமான மிதிவண்டி (conventional bicycle) பயன்பாட்டில் இருந்து பேட்டரியால் இயங்கும் இ-சைக்கிள் பயன்பாட்டை நோக்கி ஈர்ப்பதே புதிய சுவிட்ச் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

இதற்காகவே இந்த திட்டத்தை இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் கோஜீரோ மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது. நிறுவனம், ரூ. 7 ஆயிரம் தொடங்கி ரூ. 25 ஆயிரம் வரை எக்ஸ்சேஞ்ஜிற்கு வழங்க இருப்பதாக உறுதி அளித்துள்ளது. மேலும், எந்த நிறுவனத்தின் மிதிவண்டியாக இருந்தாலும் நிறுவனம் எக்ஸ்சேஞ்ஜ் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு கோஜீரோ நிறுவனம் தற்போது புதிய நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்திருக்கின்றது. எலெக்ட்ரிக் ஒன், சாரதி டிரேடர்ஸ், கிரீவ்ஸ் இவி ஆட்டோமார்ட் மற்றும் ஆர்யெந்த்ரா மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடனேயே நிறுவனம் கூட்டு சேர்ந்திருக்கின்றது.

புதிய சுவிட்ச் திட்டம் நாட்டின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும், இந்த சலுகையானது தனது நிறுவனத்தின் அனைத்து விற்பனையகங்களிலும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த சலுகை வரும் ஏப்ரல் 9ம் தேதி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.

இதற்கு பின்னர் சுவிட்ச் எக்ஸ்சேஞ்ஜ் திட்டம் விளக்கிக் கொள்ளப்படும் என கூறப்படுகின்றது. இந்தியாவில் மின் வாகன பயன்பாட்டாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் கோஜீரோ நிறுவனத்தின் புதிய திட்டம் அமைந்துள்ளது.

தினசரி மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு உகந்தவையாக இ-சைக்கிள்கள் இருக்கின்றன. நகர்புறங்களின் அதிக வாகன நெரிசல் கொண்ட சாலைகளுக்கு உகந்த வாகனமாகவும் இவை இருக்கின்றன. இதன் விளைவாக நாட்டில் இ-சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனை கூடுதலாக உயர்த்த கோஜீரோவின் புதிய திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எக்ஸ்சேஞ்ஜ் திட்டம் குறித்து கோஜீரோ நிறுவனத்தின் இணை நிறுவனர் சுமித் ரஞ்சன் கூறியதாவது, "அதிகரித்து வரும் மின் வாகன தேவையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த பிரச்சாரம் நாட்டில் தொடங்கப்பட்டிருக்கின்றது" என்றார்.

மேலும், பேசிய அவர், "நுகர்வோர் எப்பொழுதும் வித்தியாசமாக இருக்க விரும்புகிறார்கள். மக்கள் பழங்காலத்திலிருந்தே வழக்கமான மிதிவண்டிகளை ஓட்டி வருகின்றனர். கோஜீரோ நிறுவனம் மிகவும் நவநாகரீகமான மற்றும் மேம்படுத்தப்பட்ட இ-பைக்கிகளை அத்தகையோருக்கு பரிசீலிக்கின்றது. எங்களின் எக்ஸ் சீரிஸ் இ-பைக்குகள் ஒரு மிதிவண்டி பயனரின் அனைத்து வழக்கமான மற்றும் ஆஃப்-ரோடு தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானது. அதே நேரத்தில் அவர்களுக்கு எலக்ட்ரிக் டிரைவ் டிரெய்னின் வசதியும் கிடைக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications








