சார்ஜ்க்காக எங்கயும் நிக்கல... குவாண்டா எலக்ட்ரிக் பைக்கின் 4,011கிமீ பயணம்!! ஆசிய சாதனை புத்தகத்தில்...!
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவையை உணர்ந்து பல புதிய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சந்தையில் களமிறங்கியுள்ளன. அத்தகைய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஐதராபாத்தை சேர்ந்த கிராவ்டன் மோட்டார்ஸ் (Gravton Motors)-உம் ஒன்றாகும்.

கிராவ்டன் பிராண்டில் இருந்து தற்போதைக்கு குவாண்டா என்கிற பெயரிலான எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த எலக்ட்ரிக் பைக் தடையில்லாமல் அதிக தூரம் இயங்கி தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது.

கிராவ்டன் மோட்டார்ஸின் குவாண்டா எலக்ட்ரிக் பைக் கன்னியாக்குமரியில் இருந்து லடாக், கர்துங் லா பகுதி வரையில் சுமார் 4011 கிமீ தொலைவிற்கு இயக்கப்பட்டுள்ளது. இந்த 4011 கிமீ தொலைவை இந்த எலக்ட்ரிக் பைக் எந்தவொரு பழுதும் ஆகாமல் 164 மணிநேரம் மற்றும் 30 வினாடிகளில், அதாவது 6.5 நாட்களில் எட்டியுள்ளது. இதன் மூலமாக ஆசிய சாதனைகள் புத்தகத்திலும் குவாண்டா எலக்ட்ரிக் பைக் இடம் பிடித்துள்ளது.

கடந்த 2021 செப்டம்பர் 13ஆம் தேதி கன்னியாக்குமரியில் கொடியசைத்து துவங்கி வைக்கப்பட்ட இந்த பயணம் செப்.20ஆம் தேதி கர்துங் லா -வில் முடிவடைந்தது. பேட்டரி மாற்று தொழிற்நுட்பத்துடன் விற்பனை செய்யப்பட்டு வரும் குவாண்டா எலக்ட்ரிக் பைக் இந்த 4000கிமீ பயணத்தில் சார்ஜிங்கிற்காக எந்தவொரு இடத்திலும் நிறுத்தப்படவில்லை என கிராவ்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கிராவ்டன் மோட்டார்ஸின் நிறுவனரும், சிஇஓ-வுமான பர்சூராம் பாகா கருத்து தெரிவிக்கையில், "கடந்த ஒரு வருடத்தில், சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களின் செயல்திறன் தொடர்பான விஷயங்களில் இவி தொழில்துறை ஏற்றம் மற்றும் இறக்கம் ஆகிய இரண்டையும் சந்தித்துள்ளது.

நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதற்காகவும், பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை மிஞ்சும் வகையில் எலக்ட்ரிக் வாகனங்களை வடிவமைத்து மேம்படுத்தும் அளவுக்கு நாங்கள் திறமையானவர்கள் என்ற வலுவான நம்பிக்கையை ஏற்படுத்தவும், நாங்கள் இந்த வழக்கத்திற்கு மாறான பாதையில் சென்றுள்ளோம். கர்துங்கில் குவாண்டாவின் சாதனை பயணத்தை நிகழ்த்தியுள்ளோம்" என்றார்.

கிராவ்டன் மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தான் ஹைதராபாத்தில், செர்லா பள்ளியில் புதியதொரு தொழிற்சாலையை நிறுவும் பணியை துவங்கியுள்ளது. பெரிய அளவிலான தொழிற்சாலையாக உருவாக்கப்பட்டு வரும் இது நடப்பு 2022 காலாண்டர் ஆண்டின் இறுதியில் திறக்கப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சில முக்கிய நகரங்களில் ரூ.99,000 என்கிற விலையில் கிராவ்டனின் குவாண்டா எலக்ட்ரிக் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு உருவாக்கப்படுகின்ற இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு என்கிற 3 விதமான நிறத்தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

அதிகப்பட்சமாக 300 கிலோ வரையிலான எடையை சுமந்து செல்லக்கூடியதாக வடிவமைக்கப்படுகின்ற இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு 1.8 kWh-இல் இருந்து 6kWh வரையிலான லித்தியம்-இரும்பு பேட்டரி தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த பேட்டரி 2 கிலோவாட்ஸ் மோட்டாரில் பொருத்தப்படுகிறது. இவற்றின் மூலமாக 4 கிலோவாட்ஸ் மற்றும் அதிகப்பட்சமாக 180 என்எம் டார்க் திறன் வரையில் கிடைக்கிறது.

இந்த எலக்ட்ரிக் பைக்கை ஸ்டார்ட் செய்வதற்கு அழுத்து பொத்தான் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் பணியை கவனிக்க குவாண்டா பைக்கின் முன் சக்கரத்தில் டிஸ்க்கும், பின் சக்கரத்தில் ட்ரம்-மும் பொருத்தப்படுகிறது. இதன் அலாய் சக்கரங்களில் ட்யுப்லெஸ் டயர்கள் பொருத்தப்படுகின்றன. இதன் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பகுதியினை சொல்லலாம்.

ஒரே ஒரு ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் மட்டுமே தற்போதைக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் பைக்கிற்கு விற்பனையில் ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா ப்ளஸ், ஹீரோ எலக்ட்ரிக் பாண்டன், ஹீரோ எலக்ட்ரிக் என்.ஒய்.எக்ஸ் என ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் போட்டியாக உள்ளன.


Click it and Unblock the Notifications








