ஸ்கூட்டர், பைக் அனைத்தின் விலையையும் உயர்த்துகிறது ஹீரோ... இப்பவே வாங்கிடுங்க... இல்ல ரொம்ப வருத்தப்படுவீங்க!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), அதன் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை விரைவில் உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்போது விலை உயர்த்தப்பட இருக்கின்றது?, எவ்வளவு ரூபாய் வரை உயர்த்தப்பட இருக்கின்றது?, என்பதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் அதன் அனைத்து தயாரிப்புகளின் விலையையும் உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலை நேற்றைய தினம் (ஜூன் 23) வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக ஹீரோ உறுதிப்படுத்தியுள்ளது.

நிறுவனம் சுமார் ரூ. 3 ஆயிரம் வரை விலை உயர்வை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. ஆகையால், நிறுவனத்தின் தயாரிப்புகளின் விலை உயரும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. பைக் மற்றும் ஸ்கூட்டர் என அனைத்தின் விலையையுமே உயர்த்த ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.

புதிய விலையுயர்வு நடவடிக்கை வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் அது அதன் அறிக்கையின் வாயிலாகக் கூறியுள்ளது. மேலும், இந்த திடீர் விலை உயர்விற்கு தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வாகன கட்டுமான பொருட்களின் விலை உயர்வே காரணம் என அது கூறியிருக்கின்றது.

நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவு ஹீரோ இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, புதிதாக இந்நிறுவனத்தின் இருசக்கர வாகனத்தை வாங்க திட்டமிட்டிருந்தவர்களை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கின்றது ஹீரோவின் இந்த திடீர் விலையுயர்வு முடிவு.

இதுகுறித்து நிறுவனம் கூறுகையில், "தொடர்ச்சியாக வாகன கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் நிறுவனத்திற்கு செலவீணம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர இந்த விலையுயர்வு அவசியம்" என அது தெரிவித்துள்ளது.

ஹீரோ நிறுவனம் அதன் பைக்குகள் பிரிவில் 10-க்கும் மேற்பட்ட மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் (Splendor+ XTEC), புதிய கிளாமர் (New Glamour), எக்ஸ்பல்ஸ் 200 4வி (Xpulse 200 4V), கிளாமர் எக்ஸ்டெக் (Glamour XTEC), எச்எஃப் 100 (HF 100), எக்ஸ்ட்ரீம் 200எஸ் (Xtreme 200S), எக்ஸ்ட்ரீம் 160ஆர் (Xtreme 160R), எக்ஸ்பல்ஸ் 200டி (Xpulse 200T), எக்ஸ்பல்ஸ் 200 (Xpulse 200), ஸ்பிளெண்டர் ஐ-ஸ்மார்ட் (Splendor iSmart), ஸ்பிளெண்டர் பிளஸ் பிளாக் மற்றும் அக்செண்ட் (Splendor+ Black and Accent), ஸ்பிளெண்டர் பிளஸ் (Splendor+), பேஷன் ப்ரோ (Passion Pro), எச்எஃப் டீலக்ஸ் (HF Deluxe), கிளாமர் (Glamour) உள்ளிட்ட பைக் மாடல்களை ஹீரோ நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதேபோல் ஸ்கூட்டர்கள் பிரிவிலும் எண்ணற்ற தேர்வை ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் (Pleasure+ XTEC), புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125 (New Maestro Edge 125), புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 110 (New Maestro Edge 110), டெஸ்டினி 125 எக்ஸ்டெக் (Destini 125 XTEC), டெஸ்டினி 125 (Destini 125) உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களே ஹீரோ நிறுவனத்தின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இவற்றின் விலைகளே இன்னும் சில தினங்களில் உயர இருக்கின்றன. நிறுவனத்தின் விலைக்குறைவான இருசக்கர வாகனமாக எச்எஃப் 100 இருக்கின்றது. இது தற்போது ரூ. 51,450 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. நிறுவனத்தின் அதிக விலைக் கொண்ட தயாரிப்பாக எக்ஸ்பல்ஸ் 200 4வி இருக்கின்றது. இதன் விலை ரூ. 1.32 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹீரோ நிறுவனம் மட்டுமே விலை உயர்வுகுறித்து அறிவித்த நிறுவனம் என நினைத்துவிட வேண்டாம். ஏற்கனவே, டிவிஎஸ், யமஹா மற்றும் அப்ரில்லா உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளின் விலையை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டன. இந்த நிறுவனங்களின் விலை உயர்வு நடவடிக்கைக்கும் அண்மைக் காலங்களாக உயர்ந்து வரும் வாகன உற்பத்தி பொருட்களின் விலையே காரணமாகும். வாகன உற்பத்தியாளர்களின் இந்தமாதிரியான நடவடிக்கையால் இருசக்கர வாகன பிரியர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








