மஹிந்திராவும், ஹீரோ எலெக்ட்ரிக்கும் இணைஞ்சிருக்காங்களா?.. இரு பிரமாண்ட நிறுவனங்களின் கூட்டணி எதுக்குங்க?
நாளுக்கு நாள் டிமாண்ட் அதிகரித்து வருவதன் காரணத்தினால் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே பார்க்கலாம், வாங்க.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் இரு பிரமாண்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் வாகன உற்பத்தியை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஹீரோ எலெக்ட்ரிக், இந்நிறுவனமும் மின்சாரம் மற்றும் ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனங்களை உற்பத்தி செய்து வரும் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனமுமே புதிதாக கூட்டணி அமைத்துள்ள நிறுவனங்கள் ஆகும்.

மின் வாகன உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கிலேயே ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் மஹிந்திரா நிறுவனத்துடன் தற்போது கூட்டு சேர்ந்திருக்கின்றது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

குறிப்பாக, நிறுவனத்தின் ஆப்டிமா (Optima) மற்றும் என்ஒய்எக்ஸ் (NYX) ஆகிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மிக அதிக டிமாண்ட் நிலவி வருகின்றது. ஆனால், நிறுவனத்தின் உற்பத்தி திறன் டிமாண்டை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. இதன் விளைவாகவே நிறுவனம் மஹிந்திரா மற்றும் மஹிந்திராவுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றது.

இணைவின்கீழ், நிறுவனம் மஹிந்திரா குழுமத்திற்கு சொந்தமான பிதாம்பூர் வாகன உற்பத்தி ஆலையை பயன்படுத்தி ஆப்டிமா மற்றும் என்ஒய்எக்ஸ் ஆகிய மின்சார இருசக்கர வாகனங்களை தயாரிக்க இருக்கின்றது. வளர்ந்து வரும் தன்னுடைய மின் வாகனங்களுக்கான தேவையை உடனடியாக பூர்த்தி செய்ய இது உதவும் என நிறுவனம் நம்புகின்றது.

அதே நேரத்தில் தன்னுடைய லூதியான தொழிற்சாலையிலும் மின் வாகன உற்பத்தியை தொடர்ச்சியாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் மேற்கொள்ள இருக்கின்றது. 2022ம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு மில்லியன் மின் வாகனங்களை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டு நிறுவனம் செயல்பட தொடங்கி இருக்கின்றது.

இந்த கூட்டணியின் வாயிலாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் மின் வாகன உற்பத்தியை மட்டுமே மேற்கொள்ள போவதில்லை. மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான பியூஜியோட் மோட்டார்சைக்கிள் போர்ட்ஃபோலியாவை மின் மயமாக்குவதில் பெரும் உதவியையும் ஹீரோ எலெக்ட்ரிக் செய்ய இருக்கின்றது.

உலகளவில் மின் வாகன சந்தை பெரியளவில் வளர தொடங்கியிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டே இரு பிரமாண்ட இந்திய நிறுவனங்களும் தற்போது இணைந்திருக்கின்றன. இந்த இணைவு விரைவில் மஹிந்திராவின் பியூஜியோட் மோட்டார்சைக்கிள் பிராண்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமாகலாம் என்ற எண்ணம் எழும்ப தொடங்கியிருக்கின்றது.

இரு நிறுவனங்களின் இணைவு குறித்து ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எம்டி நவீன் முஞ்சல் கூறியதாவது, "நாட்டின் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத் துறையில் ஹீரோ எலக்ட்ரிக் முன்னணியில் உள்ளது. இந்த நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் மஹிந்திரா குழுமத்துடன் ஒரு கூட்டணியை அறிவித்துள்ளது.

இது மின்சார மூன்று மற்றும் நான்கு சக்கர வாகன பிரிவில் மாற்றத்தை முன்னெடுக்கவும் உதவும். கூட்டணியின் வாயிலாக மின் வாகன தேவையை பூர்த்தி செய்ய உதவுவது, நாட்டில் புதிய மையங்களை உருவாக்குவது, மஹிந்திரா குழுமத்தின் வலுவான விநியோகச் சங்கிலியைப் பயன்படுத்துவதே நோக்கமாகும்" என்றார்.

மேலும், இன்னும் பல நடவடிக்கைகளை இந்த நெடு நீண்ட கால கூட்டணியின் வாயிலாக மஹிந்திரா மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனங்கள் மேற்கொள்ள இருக்கின்றன. உள் நாட்டில் மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் இரு நிறுவனங்களின் கூட்டணி வாயிலாக மின் வாகனங்கள் விநியோகம் செய்யப்பட இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








