மின் வாகன மெக்கானிக்குகளை உருவாக்கும் பணியில் ஹீரோ எலெக்ட்ரிக்! எத்தன ஆயிரம் பேரை உருவாக்க போறாங்க தெரியுமா?
ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) நிறுவனம் நாடு முழுவதும் ஆட்களைத் தேர்வு செய்து மின் வாகன மெக்கானிக்குகளை உருவாக்க இருக்கின்றது. இதற்காக வேறு ஒரு நிறுவனத்துடன் தற்போது கை கோர்த்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.

மின் வாகன விற்பனையில் கொடிக் கட்டி பறக்கும் நிறுவனமாக விளங்குகின்றது ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric). இந்நிறுவனம் ரெடி அசிஸ்ட் (ReadyAssist) எனும் வேற்று நிறுவனத்துடன் தற்போது கை கோர்த்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டணி நாட்டில் மின் வாகன மெக்கானிக்குகளை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, இரு நிறுவனங்கள் இணைகிறது என்றால் புதிய வாகனத்தை உருவாக்க அல்லது வேறு ஏதேனும் வசதியை அதிகரிக்கச் செய்வதற்காகவே இருக்கும். ஆனால், இந்த கூட்டணியோ வளர்ந்து வரும் மின் வாகன சந்தைக்கான மெக்கானிக்குகளை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக 20 ஆயிரம் நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை மின் வாகனங்களை சரி செய்பவர்களாக உருவாக்க இருக்கின்றனர். நாடு முழுவதில் இருந்து இதற்கான நபர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் எலெக்ட்ரிக் வாகனம் பற்றிய முழு கற்றலும் வழங்கப்பட்டு, கை தேர்ந்த எலெக்ட்ரிக் வாகன மெக்கானிக்குகளாக மாற்றப்பட இருக்கின்றனர்.

நாடு முழுவதும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் மிக தாராளமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சார்ஜிங் மையங்கள், பேட்டரி ஸ்வாப் மையங்கள் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணியில் அரசு மட்டுமின்றி சில தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே எந்த ஒரு நிறுவனமும் மேற்கொண்டிராத ஓர் நடவடிக்கையாக, ஹீரோ எலெக்ட்ரிக் மின் வாகனங்களுக்கான மெக்கானிக்குகளை உருவாக்குவதற்கான முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில் நகரங்கள் மட்டுமின்றி சிறு கிராமத்திலும்கூட மெக்கானிக்குகள் இருக்கின்றனர்.

ஆனால், மின் வாகனங்களுக்கென தனிப்பட்ட முறையில் இயங்கக் கூடிய மெக்கானிக் ஷாப்புகள் இதுவரை பெரியளவில் உருவாகவில்லை. இந்த நிலையைக் களைய ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நடவடிக்கை உதவ இருக்கின்றது. தனியார் கராஜ் உரிமையாளர்கள் (Private Garage Owners) என்ற திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கையில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

இது போன்று மெக்கானிக்குகளை உருவாக்கும் பணியில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபடுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகப் பல்வேறு நிறுவனங்கள் இதுமாதிரியான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால், நாட்டில் மிக அதிகளவில் மெக்கானிக்குகள் உருவாகியதில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்களே முக்கிய பங்காற்றியிருக்கின்றன.

இத்தகைய இலக்கை மின்வாகன பிரிவில் எட்டும் வகையிலேயே ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது களமிறங்கியிருக்கின்றது. மின்சார வாகனத்திற்கும், பெட்ரோலால் இயங்கும் வாகனங்களுக்கும் இடையில் மிக பெரிய வித்தியாசம் நிலவுகின்றது. ஆகையால், இதற்கென பிரத்யேகமாக மெக்கானிக்குகள் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யவே ஹீரோ எலெக்ட்ரிக் - ரெடி அசிஸ்ட் நிறுவனங்களின் கூட்டிணைவு அமைந்துள்ளது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய மின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகக் காட்சியளிக்கின்றது. இந்நிறுவனம் ஏற்கனவே 6 ஆயிரம் மின் வாகன மெக்கானிக்குகளை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நகரங்களில் மட்டுமின்றி தற்போது கிராமப் புறங்களிலும் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான் நிறுவனம் ரெடி அசிஸ்ட் உடன் இணைந்திருக்கின்றது. ரெடி அசிஸ்ட், இந்தியாவின் மிகப் பெரிய சாலையோர உதவியை வழங்கும் நிறுவனமாக இருக்கின்றது. நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் மெக்கானிக் ஷாப் நெட்வொர்க்குடன் இது இயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








