ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கே இப்படி ஒரு நிலைமையா?.. ஒரு யூனிட்டைகூட விற்பனைக்காக டீலருக்கு அனுப்பலையாம்!
ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) நிறுவனம் நடப்பு ஏப்ரல் மாதத்தில் ஒரு யூனிட்டைகூட விற்பனைக்காக டீலர்களுக்கு அனுப்பி வைக்கவில்லை என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உலகின் தலைவனாக விளங்குகின்றது ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric). இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் நிலவுகின்றது. சென்ற மாதம் மட்டுமின்றி அதற்கு முந்தைய மாதங்களிலும் இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களே அதிகளவில் விற்பனையாகியிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் நிறுவனம் சென்ற மாதம் ஒரு யூனிட்டை கூட டீலர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கவில்லை என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீப சில காலமாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தீ விபத்து சம்பவத்தில் அதிகளவில் சிக்கி வருகின்றன. சாலையில் சும்மா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள்கூட தீப்பிடித்து எரிந்திருக்கின்றன. இதன் காரணத்தினால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பிளானில் இருந்தவர்கள்கூட அந்த திட்டத்தை கை விட தொடங்கியிருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே நடப்பு ஏப்ரல் மாதத்தில் நிறுவனம் ஒரு யூனிட்டைகூட டீலர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கவில்லை என்கிற ஆச்சரியமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கும், மேலே பார்த்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தீ விபத்து நிகழ்வுகளுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆமாங்க, நிறுவனத்தின் இந்த நிலைக்கு வேறொரு காரணம் கூறப்படுகின்றது. அதாவது, கடந்த சில மாதங்களாக நிலவி வரும் செமி கன்டக்டர் பற்றாக்குறையே இதற்கு காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகன உற்பத்தியில் செமி கன்டக்டர் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன் பற்றாக்குறை தற்போது புதிய வாகன உற்பத்தியை முடங்க செய்திருக்கின்றது.

எனவேதான் நிறுவனத்தால் இந்த மாதத்தில் ஒரு யூனிட்டைகூட விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. செமி கன்டக்டர் பற்றாக்குறை கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே நீடித்து வருகின்றது. ஆனால், கடந்த சில மாதங்களாக இப்பற்றாக்குறை தலைவிரித்தாட தொடங்கியிருக்கின்றது.

இதன் விளைவாகவே முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களால்கூட வாகன உற்பத்தி இலக்கை எட்ட முடியவில்லை. இத்தகைய சிக்கலிலேயே நாட்டின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனம் என கருதப்படும் ஹீரோ எலெக்ட்ரிக்கும் சிக்கியிருக்கின்றது.

இதனால் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை புக் செய்தவர்கள் அவற்றை டெலிவரி பெற கூடுதல் காலம் காத்திருக்க வேண்டும் என்கிற நிலை உருவாகியுள்ளது. சில விற்பனையாளர்கள் தங்களிடம் இருக்கும் டிஸ்பிளே வாகனங்களையும் விற்பனைக்குக் கொடுத்துவிட்டதால் அவர்களிடத்தில் காட்சிக்கு வைக்கக்கூட வாகனம் இல்லாத நிலை தென்படுவதாக கூறப்படுகின்றது.

நிறுவனத்தின் இந்த இக்கட்டான சூழல் குறித்து ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சோஹிந்தர் கில் கூறியதாவது, "வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயிலை எமர்ஜென்சி பிரேக் போட்டு நிறுத்தியதைப் போல் செமிகன்டக்டர் பற்றாக் குறை இருக்கின்றது. மிக சிறப்பான விற்பனைக்கு மிக பெரிய சிக்கலை இது ஏற்படுத்தியிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த நிலைக்கு கொரோனா வைரஸ் மட்டுமின்றி ரஷ்யா-உக்ரைன் போரும் ஓர் காரணம்" என அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "விரைவில் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய இருப்பதாகவும், ஸ்கூட்டர்களின் தரத்தை மேலும் மேம்படுத்த இருப்பதாகவும்" அவர் கூறினார். சமீப காலமாக தீ விபத்து நிகழ்ந்து வருவதைக் கருத்தில் நிறுவனம் தீ எதிர்ப்பு வசதிக் கொண்ட பேட்டரியை உற்பத்தியில் கவனத்தைச் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சென்ற மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 13,022 யூனிட் இ-வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது. இது கடந்த காலங்களைக் காட்டிலும் மிக அதிக எண்ணிக்கையாகும். பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும்கூட இது அதிகம் ஆகும். 2022 பிப்ரவரியில் 7,356 யூனிட் இ-வாகனங்களை விற்பனைச் செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த வேகமான விற்பனை வளர்ச்சியே நிறுவனத்தை தற்போது முதன்மை மின் வாகன உற்பத்தியாளராக மாற்றியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








