முக்கிய முடிவை எடுத்த ஹீரோ எலெக்ட்ரிக்... வெளிநாட்டு தயாரிப்புகளை தவிர்க்க போவதாக அதிரடி அறிவிப்பு!
நாட்டின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான ஹீரோ எலெக்ட்ரிக் அதன் வாகன தயாரிப்பில் முக்கிய முடிவை எடுத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனமே தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருக்கின்றது. தனது மின்சார இருசக்கர வாகனங்களில் வெளிநாட்டு தயாரிப்பு பேட்டரி பேக்குகளுக்கு பதிலாக, இந்திய தயாரிப்பு பேட்டரி பேக்குகளைப் பயன்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்திய தயாரிப்பு பேட்டரி பேக்குகளைப் பயன்படுத்துவதனால் என்ன லாபம் என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். மத்திய அரசு அதன் ஃபேம்-2 திட்டத்தை உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வகுத்து உள்ளது. எனவே, இந்த திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க வேண்டும் எனில், ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களின் மின்சார வாகனங்களில் உள்ளூர் தயாரிப்பு பாகங்கள் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது.
இதன் காரணமாகவே ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இந்திய தயாரிப்பு பேட்டரிகளை பயன்டுத்த திட்டமிட்டு உள்ளது. அதுவும் இதனை தங்களின் சொந்த உற்பத்தி ஆலையிலேயே வைத்து தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நிறுவனம் பேட்ரிக்ஸ் எனும் பேட்டரி செல் தயாரிக்கும் நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. இந்த நிறுவனமே ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு பேட்டரியை தயாரிக்க உதவி செய்ய இருக்கின்றது.
தாங்கள் தயாரிக்க இருக்கும் இந்த பேட்டரி பேக்குகள் மிகுந்த பாதுகாப்பானவை என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அட்வான்ஸ்ட் செல்லைக் கொண்டே பேட்டரி பேக் தயாரிக்கப்பட இருக்கின்றது. இது தீ எதிர்ப்பு திறன் கொண்டதாகவும், அதிக பாதுகாப்பானதாகவும் இருக்கும். கடந்த காலங்களில் மின்சார வாகனம் சார்ந்து பல்வேறு தீ விபத்துகள் அரங்கேறின. இந்த விபத்துகளில் சில உயிர்களும் பலியாகின. இந்த நிலை தொடர்கதையாகி வந்ததால் அரசு ஓர் குழுவை அமைத்தது.
இந்த குழு மின்சார வாகன உற்பத்திக்கான வழிக்காட்டுதல்களை உருவாக்கி இருக்கின்றது. இந்த வழிக்காட்டுதல்களின் அடிப்படையிலேயே தங்களுடைய பேட்டரி தயாரிப்பை மேற்கொள்ள இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே நீர் மற்றும் தூசியால் பாதிப்பைச் சந்திக்காத ஓர் பேட்டரியாக இது இருக்கும் என தெரிகின்றது. இதுமட்டுமின்றி, வெப்பம் எதிர்ப்பு, எச்சரிக்கை வழங்கும் சிஸ்டம், ஸ்மார்ட் பிஎம்எஸ் மற்றும் ஐஓடி ஆகிய தரம் கொண்டதாகவும் இது இருக்கும்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சோஹிந்தர் கில், "தங்களின் இந்த புதிய 45 டிகிரி செல்சியல் வரை வெப்பம் சென்றாலும் தங்களின் பேட்டரி தாங்கும்" என தெரிவித்துள்ளார். இத்தகைய சூப்பரான பேட்டரி பேக்குகளையே நிறுவனம் தற்போது பேட்ரிக்ஸ் நிறுவனத்துடனான கூட்டணியின் வாயிலாக தயாரிக்க இருக்கின்றது. மேலும், அடுத்த 12 மாதங்களில் 3 லட்சம் பேட்டரிகளை தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
பேட்டரி பேக்குகள் மட்டுமின்றி உள் நாட்டிலேயே சார்ஜிங் கருவிகளை தயாரிக்கவும் ஹீரோ எலெக்ட்ரிக் திட்டமிட்டிருக்கின்றது. இத்தகைய நடவடிக்கையில் நிறுவனம் களமிறங்கியிருப்பதால் மத்திய அரசின் ஃபேம்-2 திட்டம் தடை இன்றி அந்நிறுவனத்திற்கு கிடைக்கும். ஆகையால், மானியம் போன்றவையும் தடையில்லாமல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். இது நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யவும் உதவியாக இருக்கும். தற்போது இந்தியாவின் முன்னணி மின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஹீரோ எலெக்ட்ரிக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஃபேம்-2 திட்டம்:
மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக அரசால் அறிமுகம் செய்யப்பட்டதே இந்த ஃபேம்-2 திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் வாயிலாகவே மின் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, மின் வாகனம் சார்ந்து உற்பத்தி பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய ஓர் திட்டத்தையே ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்தே நிறுவனம் தற்போது மின்வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








