முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக தேதியை அறிவித்தது ஹீரோ மோட்டோகார்ப்! வெடவெடத்து நிற்கும் போட்டியாளர்கள்!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

நாட்டின் முதன்மையான இருசக்கர வாகன உற்பத்தியாளராக ஹீரோ மோட்டோகார்ப் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்நிறுவனம், தற்போது வரை பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நிறுவனம் அதன் கால் தடத்தை மின் வாகன சந்தையிலும் பதிக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இது 'விடா' (Vida) எனும் புதிய பிராண்டின்கீழே அதன் மின்சார இருசக்கர வாகனங்களையும் களமிறக்க இருக்கின்றது. இதுகுறித்த தகவலையும் நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. இந்த நிலையிலேயே இப்புதிய பிராண்டின்கீழ் நிறுவனம் எப்போது அதன் முதல் வாகனத்தை வெளியீடு செய்யும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட நாட்களாக இந்தியர்கள் இதுகுறித்த தகவலை ஆவலோடு எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் 7ம் தேதி அன்றே விடா பிராண்டில் முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. உலக மின் வாகன தினத்தை முன்னிட்டு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் புதுமுக மின் வாகனங்களை வெளியீடு செய்துக் கொண்டிருக்கின்றன.

சில நிறுவனங்கள் விரைவில் அதன் புதுமுக மின் வாகனங்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், டாடா மோட்டார்ஸ் அதன் மலிவு விலை டியாகோ இவி எலெக்ட்ரிக் காரை வரும் 28ம் தேதி வெளியீடு செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது. அதேநேரத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் டெலிவரி பணிகள் வரும் ஜனவரி 2023இல் தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையிலேயே விடா பிராண்டின்கீழ் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி தனது முதல் மின்சார இருசக்கர வாகனத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியீடு செய்ய இருக்கின்றது. இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ள ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் விற்பனை நிறுவனங்களுக்கு ஹீரோ அழைப்பு விடுத்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் ஜெய்பூரில் உள்ள ஆர்&டி மையத்தில் வைத்தே அதன் அனைத்து மின் வாகனங்களையும் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மையத்திற்கே அனைவரையும் வரும்படி அழைப்பு விடுத்திருக்கின்றது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்.

இந்நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ. 760 கோடி) முதிலீட்டை மின்வாகன உற்பத்தி மற்றும் இன்னும் பிற முக்கிய தொழில்துறைக்காக ஒதுக்காக அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்த அறிவிப்பை அடுத்தே நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் மின் வாகனத்தை அறிமுகப்படுத்துவதில் மிக தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது. மேலும், மின் வாகன உற்பத்தி இந்த உலகளாவிய அளவில் அது கூட்டணி செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டணியின் வாயிலாக மின் வாகன உற்பத்தி மட்டுமின்றி, உலக நாடுகளுக்கு அதன் தயாரிப்புகளை விற்பனைக்கு அனுப்பி வைப்பதற்கும் ஏதுவாக இருக்கும்.

தற்போது இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு தேவை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த தேவையைப் பூர்த்தி செய்யவும், தன்னுடைய ஆதிக்கத்தை மின்சார வாகன பிரிவிலும் செலுத்தும் விதமாக ஹீரோ மோட்டோகார்ப் அதன் புதுமுக எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கின்றது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல்கள் ஹீரோ இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் கூடுதலாக ஹைப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மின்சார தயாரிப்பு ஸ்கூட்டராக இருக்கும் எனும் யூகிக்கப்படுகின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர், ஓலா எலெக்ட்ரிக், பஜாஜ் மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அது விற்பனைக்கு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








