ஹீரோ மோட்டோகார்பிற்கு தொடரும் சோகம்!! விற்பனையில் 4 லட்சத்தை தொடவே ரொம்ப போராடுது!
உலகின் மிக பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஹீரோவின் அறிக்கையினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் முன்னணி 2-வீலர் பிராண்டான ஹீரோ மோட்டோகார்ப்-இல் இருந்து கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியா உள்பட உலகளவில் மொத்தம் 3,80,476 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர்கள் அடங்குகின்றன. அதுவே, 2021 ஜனவரி மாதத்தில் ஹீரோ மோட்டோகார்பின் உலகளாவிய விற்பனை எண்ணிக்கை 4,85,889ஆக இருந்தது.

இந்த வகையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் வருடம்-வருடம் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ள 3,80,476 இருசக்கர வாகனங்களில் கிட்டத்தட்ட 3,57,845 மோட்டார்சைக்கிள்களும், 22,631 ஸ்கூட்டர்களும் அடங்குகின்றன.

அதுவே 2021 ஜனவரி மாதத்தில் ஹீரோ பைக்குகளின் விற்பனை மட்டுமே 4.5 லட்சங்களை நெருங்கி இருந்தது. ஸ்கூட்டர்கள் 36,852 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. உள்நாட்டு சந்தையை பொறுத்தவரையில், கடந்த மாதத்தில் மொத்தம் 3,58,660 இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

மீதி 21,816 யூனிட்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டிருந்த ஹீரோ இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 4,67,776 ஆகும். இவ்வாறு அனைத்தும் 2021 ஜனவரியை காட்டிலும் கடந்த 2022 ஜனவரியில் குறைந்திருக்க, ஹீரோ மோட்டோகார்ப்பின் ஏற்றுமதி மட்டும் கடந்த மாதத்தில் அதிகமாக இருந்துள்ளது.

ஏனெனில் 2021 ஜனவரியில் 18,113 இருசக்கர வாகனங்களையே இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஹீரோ மோட்டோகார்ப் அனுப்பி உள்ளது. மொத்தமாக, கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த 2022 ஜனவரி மாதம் முடியும் வரையிலான நடப்பு 2021-22 நிதியாண்டில் 41,35,742 ஹீரோ 2-வீலர்ஸ் இந்திய சந்தை உள்பட சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் இதனை காட்டிலும் சற்று அதிகமாக 47,09,114 இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது. கடந்த நிதியாண்டை காட்டிலும் நடப்பு நிதியாண்டில் ஹீரோ மோட்டோகார்பின் வெளிநாட்டு ஏற்றுமதிகள் கணிசமாக அதிகரித்துள்ளன என்றாலும், உள்நாட்டு விற்பனை பெரிய அளவில், கிட்டத்தட்ட 7 லட்ச யூனிட்கள் அளவில் குறைந்துள்ளது.

இவ்வாறு விற்பனை குறைவிற்கு கொரோனா வைரஸ் பரவல் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், இதனை காட்டிலும் வலுவான காரணமாக குறைக்கடத்திகளுக்கான உலகளாவிய பற்றாக்குறை உருவெடுத்து வருகிறது. இதனை ஓரளவிற்கு சரிச்செய்யும் வகையில் சமீபத்தில் மத்திய அரசாங்கம் வெளியிட்ட 2022 பட்ஜெட் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இதற்கேற்ப எந்தவொரு திட்டத்தையும் அது கொண்டிருக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 2022 பட்ஜெட் குறித்து ஹீரோ மோட்டோகார்பின் தலைவரும், சிஇஒ-வுமான பவண் முஞ்சல் கருத்து தெரிவிக்கையில், இந்த பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகளில் ஒன்று பேட்டரி மாற்று கொள்கை ஆகும். இது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இடம்பெயர்வதை ஊக்குவதிப்பதில் ஒரு முக்கியமாக பங்கு வகிக்கும். கொள்கையை உருவாக்கும்போது அதன் தாக்கத்தின் அளவு தெளிவாக இருக்கும்பட்சத்தில், தொழில்துறையானது அதன் நுண்ணறிவு மற்றும் நிபுணத்துவத்தை அரசாங்கத்துடன் பகிர்ந்துக்கொள்ள உறுதியாக உள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இது எங்கள் நிறுவனம் மற்றும் எனது சொந்த நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்புடன் எதிரொலிக்கிறது. இயற்கை வேளாண்மை, பசுமை எரிசக்தி மீதான PLI மற்றும் நிதி உருவாக்கம் ஆகியவை நிலையான எதிர்காலத்திற்கான காலநிலை மாற்ற இலக்குகளை அடைவதற்கான இந்தியாவின் முயற்சிகளை மேலும் அதிகரிக்கும்.

உள்கட்டமைப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துவது, வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமில்லாமல், இந்திய தொழில்துறை உலகளவில் போட்டித்தன்மை அடையவும் உதவும்" என்றார். மேம்படுத்தப்பட்ட செலவினத் திட்டம் மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கான ஒதுக்கீடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் ஆகியவை நம்பகமான பொருளாதார மீட்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும்.


Click it and Unblock the Notifications








