புதுசா ஹீரோ டூவீலரை வாங்க போறீங்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்குதான்... யோசிச்சு முடிவு பண்ணுங்க!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டூவீலர்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு கவலையளிக்கும் வகையிலான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதனை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது ஹீரோ மோட்டோகார்ப். இந்த நிறுவனம் தற்போது தனது இரு சக்கர வாகனங்களின் விலைகளை மீண்டும் ஒரு முறை உயர்த்தியுள்ளது. இதன்படி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஒவ்வொரு இரு சக்கர வாகனங்களின் விலையும் 1,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை உயர்வு உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு காலத்திற்குள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களின் விலைகளை உயர்த்திருப்பது இது ஐந்தாவது முறையாகும். அதே நேரத்தில் கடைசி 6 மாதங்கள் என எடுத்து கொண்டால், இது 3வது விலை உயர்வாகும்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது அறிவித்துள்ள விலை உயர்வு, அதன் அனைத்து மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கும் பொருந்தும். நாங்கள் ஏற்கனவே கூறியபடி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களின் விலை தற்போது 1,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் துல்லியமான விலை உயர்வு எவ்வளவு? என்பது மாடல்களை பொறுத்து மாறுபடும். பண்டிகை காலம் தொடங்கவுள்ள நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். பொதுவாக பண்டிகை காலம் என்பது இந்தியாவில் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

ஏனெனில் இந்த சமயத்தில் வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் விற்பனை எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தி கொள்ள முடியும். ஆனால் அப்படிப்பட்ட பண்டிகை காலம் தொடங்கவுள்ள நிலையில்தான், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

ஆனால் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மட்டுமல்லாது, இந்தியாவில் இன்னும் பல்வேறு நிறுவனங்களும் தற்போது விலை உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இதன்படி எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது அஸ்டர், ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் ஆகிய கார்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

அதேபோல் மஹிந்திரா நிறுவனமும் தனது கார்களின் விலைகளை சத்தமே இல்லாமல் அதிரடியாக உயர்த்தி விட்டது. மறுபக்கம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார்களின் விலைகள் வரும் அக்டோபர் 1ம் தேதியில் இருந்து அதிரடியாக உயரவுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார்களின் விலைகள் 2 சதவீதம் வரை உயரும் என அறிவித்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் வாடிக்கையாளர்கள் பலரும் புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த சமயத்தில் வாகனங்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களை கவலையடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








