எல்லாரும் ஒதுங்குங்க... ஹீரோ நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் அறிமுக தேதி வெளியாகிருச்சு!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் எப்போது அறிமுகமாக இருக்கின்றது என்பது பற்றிய விபரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், மின் வாகன உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு வருவதாக அண்மைக் காலங்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. மேலும், நிறுவனம் இதற்காக ஓர் புதிய பிராண்டை உருவாக்கி இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், புதிய பிராண்டின் கீழ் விற்பனைக்கு வர இருக்கும் முதல் மின்சார வாகனத்தின் அறிமுக தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முக்கியமான விபரங்களையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான தகவலுக்குள் போகலாம்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 'விடா' (Vida) எனும் புதிய பிராண்டின் கீழாகவே அதன் எலெக்ட்ரிக் வாகன வர்த்தக பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது. இதுகுறித்த தகவலை துபாயில் உள்ள கிளாரன்ஸ் தீவில் நடைபெற்று வரும் 'கார்பன் நியூட்ரல்' நிகழ்வில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவன் முஞ்சால் வெளியீடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து விடா பிராண்டின் முதல் மின்சார இருசக்கர வாகனம் வரும் ஜூலை 1ம் தேதி வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். ஆகையால் இன்னும் 4 மாதங்களில் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் அறிமுகமாகிவிடும் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், முதலில் வருவது மின்சார ஸ்கூட்டராக இருக்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.

இந்த தகவல் வெகு நாட்களாக நிறுவனத்தின் மின்சார வாகனத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் மின் வாகன உற்பத்தி பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி, இந்த பணிக்காக உலகளாவிய அளவில் அது கூட்டணி செய்யவும் திட்டமிட்டுள்ளது.

புதிய பிராண்டுக்கான சின்னம் சூர்ய உதயத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகின்றது. வளர்ந்து வரும் சந்தையில் புதிய எழுச்சியை நிறுவனம் செய்ய இருப்பதை உணர்த்தும் வகையில் இந்த சின்னம் அமைய இருக்கின்றது. மேலும், விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆந்திராவின் சித்தூரில் உள்ள, மோட்டோகார்ப் ஹீரோ நிறுவனத்திற்கு சொந்தமான கிரீன் உற்பத்தி ஆலையில் வைத்தே தயாரிக்கப்பட இருக்கின்றன.

இங்கிருந்தே இந்தியாவிற்கும், உலக நாடுகள் சிலவற்றிற்கும் ஹீரோ மோட்டோக்ராப், விடா மின் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கின்றது என்பது பற்றிய தகவல் வெளி வரவில்லை.

அதேவேலையில், கடந்த 2021ம் ஆண்டு ஓர் முன் மாதிரி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அது காட்சிப்படுத்தியிருந்தது. இதன் அடிப்படையிலேயே முதல் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தனது கூட்டாளரான கோகோரோ நிறுவனத்துடன் இணைந்தே அந்த வாகனத்தை நிறுவனம் உருவாக்க இருக்கின்றது.

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை முன்பைக் காட்டிலும் தற்போது பன் மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர், ஓலா எலெக்ட்ரிக், பஜாஜ் மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களின் இந்த பிரிவில் கொடிக் கட்டு பறந்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இந்த நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் மின் வாகன வர்த்தகத்தில் விரைவில் களமிறங்க இருகின்றது, ஹீரோ மோட்டோகார்ப்.

கார்பன் நியூட்ரல் நிகழ்வில் உலக தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர். குறிப்பாக, அரபு நாட்டைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பலர் பங்கேற்றிருக்கின்றனர். இவர்கள் தவிர ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூத்த அரசு பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றிருக்கின்றனர். மேலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பல்வேறு பங்குதாரர்களும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பு: படங்கள் சில உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








