ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கிற்கு காத்திருந்தது போதும்!! புக்கிங் மீண்டும் துவங்கியது!
அடுத்தக்கட்ட எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்குகளுக்கான முன்பதிவுகளை ஆன்லைனில் ஏற்க துவங்கியுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள இந்த நிறுவனத்தின் அறிக்கையினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டிஜிட்டல்மயமாக்கலை ஊக்கப்படுத்தும் முயற்சியாக, உலகின் மிக பெரிய இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் அதன் சமீபத்திய அறிமுகமான எக்ஸ்பல்ஸ் 200 4வி (4-வால்வு) மோட்டார்சைக்கிளுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை ஏற்க துவங்கியுள்ளது. முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட முதல் தொகுப்பு எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்குகள் அனைத்தும் விற்று தீர்க்கப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட முன்பதிவுகள் ஆன்லைனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரூ.1,30,150 லட்சத்தில் எக்ஸ்-ஷோரூம் விலையினை கொண்டுள்ள இந்த சிறப்பு எக்ஸ்பல்ஸ்200 பைக்கினை ஹீரோ மோட்டோர்கார்ப் நிறுவனத்தின் இ-ஷாப் என்ற இணையத்தளத்தில் புக் செய்யலாம். இதற்கு முன் தொகையாக வெறும் ரூ.10,000 மட்டுமே செலுத்தினால் போதும் என ஹீரோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மிகவும் நட்புறவாக வழிக்காட்டும் ஹீரோ மோட்டோகார்ப்பின் இந்த இணையத்தள பக்கம் வாகனத்தை டெலிவிரி பெறுவது வரையிலான அனைத்து வழிக்காட்டுதல்களையும் வழங்குகிறது. இந்த ஆன்லைன் புக்கிங் குறித்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மறுவிற்பனை பிரிவின் தலைமை அதிகாரி நவீன் சவுகான் கருத்து தெரிவிக்கையில், "ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 எப்பொழுதும் நிகரற்ற அனுபவத்தை வழங்கக்கூடியதாக அறியப்படுகிறது.

அதேநேரம் தொழிற்நுட்பம், நவீன வடிவமைப்பு மற்றும் ஒரு தனித்துவமான கவர்ச்சியை கொண்டுள்ளது. எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கிற்கு எங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கும் அமோக நேர்மறையான வரவேற்பினால் நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம். இதன் முதல் தொகுப்பு விரைவாக விற்றுத் தீர்ந்தது. இது பிரீமியம் மோட்டார்சைக்கிள்களுக்கான தேவையினையும், ஹீரோ பிராண்டின் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையும் வெளிப்படுத்துகிறது.

மற்றொரு தொகுப்பிற்கான ஆன்லைன் முன்பதிவுகளை துவங்குவதுடன் நாட்டில் எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கிற்கு அதிகப்படியான தேவையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார். இந்தியாவின் மலிவான அட்வென்ச்சர் பைக்காக விளங்கும் எக்ஸ்பல்ஸ் 200-ஐ சாதாரண சாலையில் மட்டுமின்றி ஆஃப்-ரோட்டிற்கும் தைரியமாக எடுத்து செல்லலாம்.

தனித்துவமான ஸ்டைலினை கொண்டிருக்கும் இந்த அட்வென்ச்சர் பைக் கடந்த 2019 ஏப்ரல் மாதத்தில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டதில் இருந்து இளைஞர்கள் பலரது கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் மூலமாக, இந்திய இருசக்கர வாகன துறையில் மிக முக்கிய விருதுகளுள் ஒன்றான 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் விருதை தட்டி சென்றது.

இதன் கூடுதல்-அட்வென்ச்சர் திறன் கொண்ட வெர்சனாக எக்ஸ்பல்ஸ் 200 4-வால்வு மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் வழங்கப்படுகின்ற 200சிசி பிஎஸ்6 4-வால்வு, ஆயில்-கூல்டு என்ஜின் ஸ்டாண்டர்ட் எக்ஸ்பல்ஸ் 200 2-வால்வு மாடலில் வெளிப்படுத்துவதை காட்டிலும் 6% கூடுதல் ஆற்றலையும், 5% கூடுதல் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

இதன் 200சிசி 4- வால்வு என்ஜின் 8,500 ஆர்பிஎம்-இல் 19.1 பிஎஸ் மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 17.35 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் துவங்கப்பட்ட எக்ஸ்பல்ஸ்200 4வி பைக்கிற்கான முன்பதிவுகள் கடந்த டிசம்பர் மாத துவக்கத்தில் நிறுத்தி கொள்ளப்பட்டன. முன்பதிவு செய்தவர்களுக்கு பைக்கை அடுத்த 45 நாட்களுக்குள் டெலிவிரி செய்ய தாங்கள் தீவிரமாக உள்ளதாக அந்த சமயத்தில் ஹீரோ மோட்டோகார்ப் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது இரண்டாம் தொகுப்பிற்கான முன்பதிவுகளும் ஆன்லைனில் துவங்கப்பட்டுள்ளன. இதனால் இப்போது முன்பதிவு செய்தாலும் அடுத்த 1.5 மாதத்திற்குள் பைக்கை டெலிவிரி பெற்றுவிடலாம். ஏனெனில் டெலிவிரி பணிகள் சுமூகமாக இருந்தால் மட்டுமே அடுத்தக்கட்ட தொகுப்பிற்கான முன்பதிவுகளை எந்தவொரு ஆட்டோமொபைல் நிறுவனமும் துவங்கும்.

கூடுதல் என்ஜின் ஆற்றல் மட்டுமின்றி, எக்ஸ்பல்ஸ் 200 4வி அட்வென்ச்சர் பைக்கின் மற்றொரு முக்கிய அம்சமாக நீண்ட டிராவலை கொண்ட முன்பக்க சஸ்பென்ஷன் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. ட்ரைல் நீலம், பிளிட்ஸ் நீலம் மற்றும் சிவப்பு ரைடு என்கிற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் விற்கப்படும் இந்த அட்வென்ச்சர் பைக்கின் முன்பக்கத்தில் 21 இன்ச்சில் நன்கு பெரியதாக ஸ்போக் சக்கரம் பொருத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் அறிமுகத்தினால் கடந்த அக்டோபர் மாதத்தில் எக்ஸ்பல்ஸ்200-இன் விற்பனை 3,815 யூனிட்களாக அதிகரித்தது.


Click it and Unblock the Notifications








