ஹோண்டாவில் எத்தனை 350சிசி பைக்கு தாங்க வரும்... புதியதாக மற்றொன்று! இருந்தாலும் ராயல் என்பீல்டை முந்த முடியாது
ஹோண்டா 2-வீலர்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய மோட்டார்சைக்கிளுக்காக 'சிபி350 பிரிகேட்' என்கிற பெயருக்கான காப்புரிமையை தாக்கல் செய்துள்ளது. இது எந்த மாதிரியான ஹோண்டா பைக்காக இருக்கும் என்பதை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கும் அதன் ரசிகர்களுக்கும் இடையே இருக்கும் பிணைப்பை பற்றி நான் கூற வேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன். அந்த அளவிற்கு... எடை அதிகம், மைலேஜ் குறைவு போன்ற சில குறைப்பாடு இருப்பினும், ராயல் என்பீல்டு பைக்குகளை கனவு வாகனங்களாக காண்போர் அதிக அளவில் உள்ளனர்.

இருப்பினும் ராயல் என்பீல்டிற்கு சரிக்கு சமமான போட்டியினை அளிக்கும் விதமாக மற்ற மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகின்றன. இந்த வகையில் ராயல் என்பீல்டு உடன் கடந்த சில வருடங்களாக நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்தி கொண்டிருக்கும் நிறுவனம் ஹோண்டா ஆகும்.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 என்கிற பைக்கை புதியதாக அறிமுகப்படுத்த உள்ளதை அறிந்த ஹோண்டா அதன் அறிமுகத்திற்கு முன்பாகவே அதற்கு போட்டியாக ஹைனெஸ் சிபி350-ஐ களமிறக்கியது. அது போதாது என அடுத்த சில மாதங்களில் இதன் புதிய வேரியண்ட்டாக சிபி350 ஆர்எஸ் மாடலை அறிமுகப்படுத்தியது.

இருப்பினும், ராயல் என்பீல்டு மீட்டியோர் 350-ஐ விற்பனையில் ஹோண்டாவால் நெருங்க முடிந்ததா என்றால், இல்லை என்பதுதான் பதில். கிளாசிக் 350-க்கு அடுத்து தற்சமயம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய 350சிசி பைக்காக மீட்டியோர் உள்ளது. ஆனால் ஹைனெஸ் சிபி350 பிரிவில் கடைசி இடத்தில் தொங்கி கொண்டுள்ளது.

இருந்தாலும் ஹோண்டா 2-வீலர்ஸ் தனது முயற்சியை கைவிடுவதாக இல்லை. இதன் எதிரொலியாகவே, ‘சிபி350 பிரிகேட்' என்ற பெயருக்கான காப்புரிமை தாக்கல் ஆகும். சிபி350 ஆர்எஸ்-ஐ தொடர்ந்து இது ஹைனெஸ் சிபி350 பைக்கின் வரிசையில் மற்றுமொரு வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா 2-வீலர்ஸின் நியோ-ரெட்ரோ ரோட்ஸ்டர் ரக பைக்காக சிபி350 விளங்குகிறது.

ஆனால் எப்படியிருந்தாலும், புதிய சிபி350 பிரிகேட் ஆனது ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து சற்று வேறுப்படும் விதமான தோற்றத்திலேயே களமிறக்கப்படும். இருந்தாலும், இந்த புதிய மாடலிலும் 348சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை தான் ஹோண்டா 2-வீலர்ஸ் நிறுவனம் பொருத்துவதற்கு வாய்ப்புள்ளது.

அதிகப்பட்சமாக 20.8 பிஎச்பி மற்றும் 30 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆனது ஸ்லிப்பர் க்ளட்ச்சின் உதவியுடன் வழங்கப்படுகின்றன. இவ்வாறான புதிய 350சிசி பைக்குகளுக்கு மத்தியில் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் சிஆர்எஃப் 300எல் பைக்கையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாதாரண சாலை மற்றும் ஆஃப்-ரோடு சாலை என இரு விதமான சாலைகளிலும் பயன்படுத்தக்கூடியதாக விளங்கும் ஹோண்டா சிஆர்எஃப்300எல் பைக் சமீபத்தில் டீலர்ஷிப் மையம் ஒன்றில் காட்சி தந்திருந்தது. இதனை வைத்துதான் இந்த பைக் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறுகிறோம்.

சிஆர்எஃப்300எல் பைக்கில் 286சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 27 பிஎச்பி மற்றும் 26.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் ஸ்லிப் & உதவி க்ளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








