அதிரடி காட்ட தயாராகிய ஹோண்டா... வெவ்வேறு சிசி திறன் கொண்ட டூ-வீலர்களை களமிறக்கபோவதாக தகவல்!
ஹோண்டா நிறுவனம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் வெகு விரைவில் புதுமுக இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா வெகு விரைவில் 125 சிசி ஸ்கூட்டர் மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்திய சந்தையில் போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, புதுமுக வாகனங்களின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், நிறுவனத்திற்கு லேசாக நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதனை சமாளிக்கும் பொருட்டே புதுமுக இருசக்கர வாகனங்களை நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கின்றது. குறிப்பாக, தற்போது இந்தியர்கள் மத்தியில் 125 சிசி இருசக்கர வாகனத்திற்கு வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த சூழலை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே நிறுவனம் மூன்று புதுமுக வாகனங்களில் ஒன்றை 125 சிசி இருசக்கர வாகன பிரிவில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது.

மற்ற இரண்டில் ஒன்று 160 சிசி பிரிவிலும், மற்றொன்று 300 சிசி அல்லது 350 சிசி இருசக்கர வாகன பிரிவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, இந்தியாவின் 150 சிசி - 200 சிசி இருசக்கர வாகன பிரிவில் பஜாஜ் நிறுவனமே முன்னணி பிராண்டாக இருக்கின்றது. நிறுவனத்தின் பல்சர் பைக்கே இந்த பிரிவில் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

இவை மட்டுமின்றி டிவிஎஸ்-இன் அப்பாச்சி மற்றும் யமஹாவின் எஃப்இசட் உள்ளிட்டவையும் இந்த பிரிவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும், ஹோண்டா யூனிகார்ன் மற்றும் ஹார்னட் ஆகியவற்றும் இந்தியர்களிடத்தில் கணிசமான அளவில் டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் புதிய தயாரிப்பை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இதேபோல் 300சிசி மற்றும் 350 சிசி ஆகிய பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் இருசக்கர வாகனங்களுக்கும் நல்ல வரவேற்பு நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் இந்த பிரிவையும் விட்டு வைக்காமல் இதில் புதுமுக மோட்டார்சைக்கிளை விற்பனைக்குக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பிரிவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் மற்றும் புல்லட் பைக்குகளுக்கே சற்று சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஆகையால், நிறுவனத்தின் புதுமுக இருசக்கர வாகன மாடலில் ஒன்று ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்பிற்கு போட்டியாகக் களமிறங்கலாம் என நம்மால் யூகிக்க முடிகின்றது. ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் அதன் ஹைனெஸ் சிபி 350 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த போட்டியை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே நிறுவனம் அடுத்த ஓர் புதுமுக இருசக்கர வாகனத்தையும் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. ஹோண்டா நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்புகளில் ஒன்றாக சிபி300எஃப் இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து இன்னும் சில புதுமுகங்களால் இந்திய சந்தையை அலங்கரிக்க இருப்பதையே நிறுவனம்குறித்து தற்போது வெளியாகியிருக்கும் தகவல் உறுதிப்படுத்துகின்றன.

இதுமட்டுமில்லைங்க நிறுவனம் வெகு விரைவில் அடுத்த தலைமுறை ஹோண்டா ஆக்டிவாவையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. தற்போது நாட்டில் 6ஜி ஆக்டிவா விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஆக்டிவா 7ஜி-யை விற்பனைக்குக் கொண்டு வர அது திட்டமிட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் ஆக்டிவா 6ஜி கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே ஃபிரெஷ்ஷான அம்சங்கள் கொண்ட ஆக்டிவா வாயிலாக இந்தியர்களைக் கவர ஹோண்டா திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் மிக அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் இதுவாகும். இதேபோல் நாட்டின் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகன மாடலாகவும் ஹோண்டா ஆக்டிவா இருக்கின்றது. இந்த வரவேற்பையே இரட்டிப்பாக்க நிறுவனம் அடுத்த தலைமுறையை களமிறக்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








