ஐஐடி மெட்ராஸ் உருவாக்கிய வாகனமா இது!.. இப்படி ஒரு வாகனத்த முன்னணி நிறுவனங்கள்கூட தயாரிக்கல!
ஐஐடி மெட்ராஸ் உருவாக்கியிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்பெஷல் வாகனம் பற்றிய சிறப்பு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த வாகனத்தை வீல் சேர் அல்லது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என 2-இன்-1 ஆக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
டெக்னாலஜி பல மடங்கு வளர்ந்துக் காணப்படுகின்றது. இருப்பினும், நம் நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இடம் விட்டு இடம் பெயர்வதில் பெருத்த சிக்கல் காணப்படுகின்றது. குறிப்பாக சொந்த வாகனம் இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு வெளியூர் பயணம் என்பதே ஓர் மிகப் பெரிய கனவாக உள்ளது. இதனைக் களையும் பொருட்டு அரசுகள் சார்பில் கணிசமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இப்போதும் அவர்களால் நினைத்த இடத்திற்கு பயணிக்க முடியாத நிலை தென்படுகின்றது.

ஏன், டாக்சி இருக்கே அதுல போகலாமே என நீங்கள் கேட்கலாம். ஆனால், பெரும்பாலான டாக்சி டிரைவர்கள், மாற்றுத் திறனாளிகள் அவர்களின் நான்கு சக்கர வீல் சேருடன் பயணிப்பதை அனுமதிப்பதில்லை. அரசு இதற்காக குறிப்பிட்ட சில பகுதிகளில் மாற்று திறனாளிகள் எளிதில் ஏறி, இறங்கும் வசதிக் கொண்ட பேருந்துகளை இயக்கிக் கொண்டிருக்கின்றதே என்றும் நீங்கள் கூறலாம். ஆனால், இந்த மாதிரியான பேருந்துகள் நாட்டின் குறிப்பிட்ட சில நகர்ப்புறங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன.
இந்த மாதிரியான சூழ்நிலையை உணர்ந்தே ஐஐடி மெட்ராஸ் ஓர் தனித்துவமான அம்சம் கொண்ட வாகனத்தை உருவாக்கியிருக்கின்றது. மூன்று சக்கரங்கள் கொண்ட இருக்கையை அது உருவாக்கியிருக்கின்றது. இதனை இரு விதமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். நான்கு சக்கர வீல் சேர் அல்லது பைக் இவற்றில் எதுவாக வேண்டுமானலும் இந்த வாகனத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மாற்றுத் திறனாளிகள் எளிதில் தாங்கள் விரும்பும் இடத்திற்கு அவர்களே சென்று வரும் விதமாக இந்த வாகனத்தை ஐஐடி மெட்ராஸ் வடிவமைத்திருக்கின்றது.

சிறிய சக்கரங்கள் நான்கும், ஸ்கூட்டர்களில் பயன்படுத்துவதைப் போன்ற சக்கரம் ஒன்றும், சைக்கிள்களில் பயன்படுத்துவதைப் போன்ற சக்கரம் இரண்டும் வாகனத்தின் சுலபமான இயக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இதனை இரு பாகமாக நம்மால் பிரித்துக் கொள்ள முடியும். முதல் பாகம் ஸ்கூட்டருக்கான வீல், மின் மோட்டார் மற்றும் ஹேண்டில் ஆகிய அம்சங்களைக் கொண்டதாக இருக்கும். இரண்டாவது பாகம் வழக்கமான வீல் சேரை போல் இருக்கும்.
மாற்றுத் திறனாளிகள் வீடுகளில் இருக்கும்போது வீல் சேரிலும், வெளியில் செல்ல விரும்பினால் பைக்காக மாற்றி அதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான அனைத்து வசதிகளும் இந்த வாகனத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த வாகனத்தை ஏற்கனவே சிலர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அந்தவகையில், வெளிமாநில வாசிகள் சிலரும் ஐஐடி மெட்ராஸ் உருவாக்கிய இந்த வாகனத்தை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த வாகனத்தை நிஷான் எனும் மாற்றுத் திறனாளி இளைஞர் தன்னுடைய சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் பணிக்காக பயன்படுத்தி வருகின்றார். தன்னுடைய பணிகளுக்கு இந்த வாகனம் மிகுந்த உதவியாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கின்றார். மேலும், தான் எந்த ஒரு தடையும் இன்றி இந்த வாகனத்தில் சுற்றி வருவதாக அவர் கூறியிருக்கின்றார். இதன் வாயிலாக மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய வெளியுலக பயணத்திற்கு மட்டுமல்ல தொழில் புரிவதற்கும் இந்த வாகனம் பயன்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
இது ஓர் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இதனை நொடிப் பொழுதில் வீல் சேர் அல்லது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மாற்றிக் கொள்ள முடியும். முழுக்க முழுக்க மாற்றுத் திறனாளிகளின் அவசியத்தை உணர்ந்து இந்த வாகனத்தை ஐஐடி மெட்ராஸ் வடிவமைத்திருக்கின்றது. மேலும், இதனை மிகவும் பாதுகாப்பானதாகவும் வடிவமைத்திருக்கின்றனர். இரு பாகங்களும் ஒரு முறை இணைக்கப்பட்ட பின்னர் மீண்டும் தானாக கழலாத வகையில் லாக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது அவ்வளவு எளிதில் கழன்டுவிடாது. இதுதவிர, பார்-எண்ட் விளக்குகள், ஓஆர்விஎம்கள், வேகத்தைக் கண்கானிக்க உதவும் மீட்டர் மற்றும் ஓடோ மீட்டர் போன்ற அம்சங்களும் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன. முக்கிய தகவல்களைப் பெறுவதற்காக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். ஆகையால், இதை வைத்திருக்க லைசென்ஸ் தேவைப்படாது. இதேபோல், வாகன பதிவும் கட்டாயம் கிடையாது. இந்த சிறப்பு வாகனத்தை ரூ. 1 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் ஒரு வருடம் உத்தரவாதமும் வழங்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









