எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு இன்சூரன்ஸ் இல்லையா? விபத்தில் சிக்கினால் யார் பொறுப்பு?
எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு ஏன் இன்சூரன்ஸ் கட்டாயம் இல்லை என பொது நல வழக்கில் டில்லி கோர்ட் மத்திய அரசுக்கு விளக்கம் தரும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்த தகவல்களைக் கீழே காணலாம்

இந்தியாவில் மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோகம் அதிகமாகியுள்ளது. எலெக்ட்ரிக் கார்களை விட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை நாளுக்கு நாள் அசூர வளர்ச்சியை அடைந்து வருகிறது. தற்போது இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஒட்டு மொத்தமாக விற்பனையாகும் இருசக்கர வாகனத்தில் 2 சதவீத சந்தை பங்கை எலெக்ட்ரிக் வாகனங்கள் பிடித்துவிட்டன.

இந்தியாவைப் பொறுத்தவரை ஓலா, ஹீரோ எலெக்ட்ரிக், ஓகினாவா, போன்ற நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமானபோது அதற்கான ஒழுங்கு முறையை அறிவித்திருந்தது.

அதன்படி எலெக்ட்ரிக் வாகனங்களும் ஆர்டிஓவில் பதிவு செய்ய வேண்டும். இந்த எலெக்ட்ரிக் வாகனங்களை இரண்டாகப் பிரித்து குறைந்த வேகத்தில் செல்லும் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள் என இரண்டு பிரிவுகள் உள்ளது. 25 கி.மீ வேகத்திற்கு அதிகமாகச் செல்லும் வாகனங்கள் வேகமாகச் செல்லும் வாகனங்கள் என்றும் 25 கி.மீ வேகத்திற்குக் குறைவாகச் செல்லும் வாகனங்கள் குறைந்த வேக வாகனங்கள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் குறைந்த வேக வாகனங்களைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அந்த வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமமும் தேவையில்லை. வேகமாகச் செல்லும் வாகனங்களைப் பதிவு செய்து பதிவு எண்ணைப் பெறவேண்டும். அந்த பதிவு எண்ணைப் பச்சை நிற போர்ட்டில் அச்சடித்து வாகனத்தின் முன்பு பொருத்த வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது.

மிக முக்கியமான இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் என்பது கட்டாயமில்லை. குறைவான வேகத்தில் செல்லும் ஸ்கூட்டர்களுக்கு ஹெல்மெட் அணிவதும் கட்டாயமில்லை என்ற விதி உள்ளது. இந்நிலையில் இந்த விதிகளை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

ராஜத் கபூர் என்பவர் ஆர்கே கபூர் என்ற வழக்கறிஞர் மூலம் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.இந்த வழக்கில் மோட்டார் வாகன சட்டம் 146 பிரிவின் படி எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கும் கட்டாயம் இன்சூரன்ஸ் விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது "இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஆகும் மாசை இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் குறைக்கிறது. அது மட்டுமல்ல நீண்டநாள்கள் குறைந்த விலையில் ஒரு இடத்திலிருந்த மற்றொரு இடத்திற்குப் பயணிக்க இது பெரிதும் உதவுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தும் மக்கள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான இன்சூரன்ஸ் பெறுவதில் குழப்பம் இருக்கிறது. இன்சூரன்ஸ் கட்டாயம் இல்லை என்பது குழப்பத்தை ஏற்படுத்தும் அந்த வாகனம் விபத்தை ஏற்படுத்தினால் அதற்கான நஷ்டத்தை யார் ஏற்பது என்பது குறித்த தெளிவான விளக்கம் இல்லை.

அதே போல எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளின் தரத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். பல இடங்களில் எலெக்டரிக் வாகனங்கள் அதிக சூடாகி வெடித்து விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஒழுங்கு விதிமுறைகளை உருவாக்க வேண்டும். அதே போல எலெக்ட்ரிக் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமில்லை எனச் சட்டம் உள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் குறைந்த வேகத்தில் சென்றாலும் மற்றவர்கள் இவர்கள் மீது மோதி விபத்தை உண்டாக்க வாய்ப்புள்ளது. அதனால் இருசக்கர வாகனத்தின் திறனைப் பற்றி யோசிக்காமல் அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் எனக் கொண்டு வரவேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விபின் ஷங்கி மற்றும் நீதிபதி நவீன் சாவ்லா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இது குறித்து விளக்கம் கேட்டு மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறைக்கும், டில்லி அரசிடமும் விளக்கம் கேட்டு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு ஏன் இன்சூரன்ஸை கட்டாயமாக்கக்கூடாது என விளக்கம் கேட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் சமீபகாலமாக தீ பிடிப்பது வெடிப்பது போன்ற சம்பவங்கள் சமீபத்தில் நடந்துள்ளன. இதையடுத்து ஒகினாவா, மற்றும் ஓலா நிறுவனங்கள் விற்பனை செய்த சில ஸ்கூட்டர்களை திரும்ப அழைத்து அதை மறுபடியும் சோதனை செய்து வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்


Click it and Unblock the Notifications








