மிகவும் சூப்பரா இருந்த ஒரே காரணத்திற்காக ரத்து செய்யப்பட்ட வாகன பதிவு... அழகால் வந்த வினை!
அழகாக இருக்கும் ஒரே ஒரு காரணத்திற்காக மோட்டார்சைக்கிளின் பதிவை காவல்துறையினர் ரத்து செய்திருக்கின்றனர். இந்த நடவடிக்கைக்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தன்னுடைய இருசக்கர வாகனம் அழகாக இருப்பதை யார்தான் விரும்ப மாட்டாங்க. சாலையில் செல்லும்போது பிறரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும், தங்களின் வாகனம் பிறரின் வாகனங்களிடம் இருந்து தனித்துவமானதாக தெரிய வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கின்றது.

இதற்காக ஒரு சிலர் வாகனங்களை அங்கீகரிக்கப்படாத அலங்காரப் பொருட்களைக் கொண்டு அலங்கரித்து வருகின்றனர். அந்தவகையில், மாற்றப்பட்ட ஓர் பைக்கின் பதிவே தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரளா மாநிலம், பாலக்காடு பகுதியிலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. பதிவு ரத்து செய்யப்பட்டிருக்கும் இருசக்கர வாாகனத்தின் உரிமையாளர் அதேப்பகுதியைச் சேர்ந்த ஜிஷ்னு என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவரே தன்னுடைய மோட்டார்சைக்கிளை வேறு வாகனங்களிடம் இருந்து பல மடங்கு மாறுபட்டுக் காட்சியளிக்கும் விதமாக மாற்றியவர் ஆவார். ஏற்கனவே இதுபோன்று விதிமீறல் செயலில் ஈடுபட்டதன் காரணமாக ஜிஷ்னு மீதும், அவரின் உருவம் மாற்றப்பட்ட இருசக்கர வாகனத்தின் மீதும் கேரள மோட்டார் வாகன பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே தொடர்ச்சியாக மீண்டும் அதே விதிமீறலில் ஈடுபட்டதன் காரணத்தினால் பைக்கின் பதிவெண் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாகனத்தின் பதிவை ரத்து செய்ததோடு அவர் ஆறு மாதங்களுக்கு சாலையில் எந்தவொரு வாகனத்தையும் இயக்கக் கூடாது எனவும் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஜிஷ்னு தனது இருசக்கர வாகனத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மாற்றியிருக்கின்றார்.

இதனால் அந்த வாகனம் அதன் உண்மை தன்மையை முற்றிலுமாக இழந்திருக்கின்றது. அது எந்த நிறுவனத்தின் தயாரிப்பு, என்ன மாடல் என்பதுகூட அறியமுடியாத வகையில் முற்றிலுமாக மாற்றப்பட்டிருக்கின்றது. இத்தகைய கடுமையான மாற்றத்தைக் கண்டித்தே மிகக் கடுமையான நடவடிக்கையை கேரளா எம்விடி துறையினர் ஜிஷ்னு மீது எடுத்திருக்கின்றனர்.

டூ-வீலரின் கைப்பிடி, இருக்கை, பெட்ரோல், செயின் ஸ்பிராக்கெட், எக்சாஸ்ட் குழாய், மட்குவார்ட் என பலவற்றை அவர் மாற்றியிருக்கின்றார். இதனால், அந்த வாகனம் மிகவும் முரட்டுத் தனமானதாகவும், விநோத பைக்காகவும் மாறியிருக்கின்றது. இவ்வாறு வாகனத்தை மாற்றியமைப்பது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டனைக்கு உரிய செயலாகும்.

ஜிஷ்னு இந்த விதிமீறல் செயல் மட்டுமின்றி, இன்னும் பல்வேறு போக்குவரத்து விதமீறல் செயல்களிலும் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. அவர் அவ்வப்போது இருசக்கர வாகன ரேஸிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றார். ஆகையால், மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்பட்டதாக கூறியும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரளா மோட்டார் வாகன பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இதுபோன்று மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் சில வாகனங்கள் மீது அவர்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், கேரளா வெள்ளத்தின்போது மீட்பு பணியில் பெரும் உதவியாக இருந்த இசுஸு டி-மேக்ஸ் வி கிராஸ் காரை கடந்த காலங்களில் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

ஹெவியாக மாற்றியமைக்கப்பட்டிருந்த ஒற்றைக் காரணத்திற்காக இந்த காரை கேரளா எம்விடி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காரை உண்மை நிலைமைக்குக் கொண்டு வரும்பட்சத்தில் அதனை விடுவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் டூ-வீலர் விஷயத்திலும் சலுகை வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் பதிவு ரத்தானது 2023 ஏப்ரல் 30 வரை நீடிக்கும். இந்த காலகட்டத்திற்குள் வாகனம் அதன் ஆர்சி புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் போன்ற உருவத்திற்கு மாற்றியமைக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகையால், வாகனத்தை அழகாக மாற்றப்போய் அதன் உரிமையாளர் ஜிஷ்னு தற்போது கடுமையான சிக்கலில் சிக்கியிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








