ஹார்லி டேவிட்சன் பைக்குகளை தயாரித்த அதே ஆலையை பயன்படுத்தும் எல்எம்எல்... அப்போ தரமான சம்பவம் காத்திருக்கு!
ஹார்லி டேவிட்சன் (Harley Davidson) பைக்குளை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அதே தொழிற்சாலையை இந்தியாவை சேர்ந்த எல்எம்எல் (LML) நிறுவனமும் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

எல்எம்எல் (LML) நிறுவனம் அதன் மறு வருகையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உறுதிப்படுத்தியது. நிறுவனம் இம்முறை எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை முக்கிய தயாரிப்பாக கொண்டு இயங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக சேரா எலெக்ட்ரிக் ஆட்டோ (Saera Electric Auto) நிறுவனத்துடன் எல்எம்எல் நிறுவனம் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை பயன்படுத்தியே எல்எம்எல் அதன் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கின்றது. இந்த பணிக்காகவே எல்எம்எல், சேரா எலெக்ட்ரிக் ஆட்டோ உடன் இணைந்திருக்கின்றது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஹர்யானாவின் பவல் பகுதியில் அமைந்திருக்கின்றது.

இந்த ஆலையிலேயே கூட்டணியின் அடிப்படையில் தனது எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்களை எல்எம்எல் எலெக்ட்ரிக் (LML Electric) உற்பத்தி செய்ய இருக்கின்றது. முன்னதாக சேரா எலெக்ட்ரிக் ஆட்டோவிற்கு சொந்தமான இந்த உற்பத்தி ஆலையை பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹார்லி டேவிட்சன் பயன்படுத்தி வந்தது.

ஆம், இந்தியாவை விட்டு வெளியேறும் முன்னர் அமெரிக்க இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் இங்கு வைத்தே தனது அனைத்து டூ-வீலர்களையும் தயாரித்தது. இந்த தயாரிப்பு ஆலை சுமார் 2,17,800 அடி பரப்பளவில் அமைந்திருக்கின்றது. மாதத்திற்கு 18 ஆயிரம் யூனிட் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டது இதுவாகும்.

இத்தகைய திறன்மிக்க ஆலையையே ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக எல்எம்எல் நிறுவனம் பயன்படுத்த இருக்கின்றது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து எல்எம்எல் நிறுவனத்திற்கு ஏற்றவாறு தொழிற்சாலையை மாற்றி அமைக்கும் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆகையால், மிக விரைவில் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்ட எல்எம்எல் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சாலைகளில் தென்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு பாகங்களைக் கொண்டு தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்க எல்எம்எல் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. "எங்கள் இலக்கின் ஓர் மைல்லாக இந்த கூட்டணி இருக்கின்றது. இந்தியா இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைத்து, உள் நாட்டு உற்பத்திக்கு வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் நாங்கள் செயல்பட இருக்கின்றோம்" என நிறுவனத்தின் சிஇஓ யோகேஷ் பாட்டியா தெரிவித்திருக்கின்றார்.

1970 மற்றும் 80-களில் இந்தியாவின் முக்கியமான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வந்த இந்த எல்எம்எல் நிறுவனம் விளங்கி வந்தது. மொபட், ஸ்கூட்டர் மற்றும் பைக் என அனைத்து ரக இருசக்கர வாகனங்களையும் அது தயாரித்து வந்தது.

ஆனால், நாளடைவில் பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் எல்எம்எல் லேசாக ஓரங்கப்பட்டது. இந்த நிலை மிகக் கடுமையாக தென்பட்டதால் முற்றிலுமாக எல்எம்எல் முடங்கும் நிலை உருவாகியது. இந்த நிலையிலேயே பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த எல்எம்எல் நிறுவனம் தற்போது மீண்டும் மறு பிறவி எடுக்கும் பொருட்டு செயல்பாட்டில் களமிறங்கியிருக்கின்றது. ஆனால், இம்முறையை வளர்ந்து வரும் மின் வாகன பிரிவை நிறுவனம் தேர்வு செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








