இரு ஜாம்பவான் நிறுவனங்களின் எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கான மானியம் திடீர் நிறுத்தம்... ஏன் இந்த நடவடிக்கை?
மத்திய அரசாங்கம் மின் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக வழங்கி வந்த மானிய திட்டத்தை குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நமது இந்திய அரசாங்கம் நாட்டில் அதிகரித்துக் காணப்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியை அது அதி-தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களின் உருவாக்கத்திற்கு பெரும் செலவு ஏற்படுகின்ற காரணத்தினால், அவை மிக அதிக விலையில் விற்கப்படுகின்றன. இதன் விளைவாக பலருக்கு எட்டக் கனியாக மின் வாகனங்கள் இருக்கின்றன. இந்த சூழலை மாற்றும் விதமாக அரசு ஃபேம் (FAME) எனும் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் முக்கிய பணியே மின் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்கிவிப்பதாகும்.

அதாவது, மின் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்குதல் மற்றும் மின் வாகன உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதே ஃபேம் திட்டத்தின் முக்கிய பணியாகும். இந்த திட்டத்தின்கீழ் சிறப்பு சலுகைகளை பெற வேண்டும் என்றால் மின் வாகன உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட சில நிபந்தனைகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

அவர்கள் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதை கடைபிடிக்கும் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே ஃபேம் திட்டத்தின்கீழ் மானியம் வழங்கப்படும். இந்த விஷயத்தில் சந்தேகம் எழுந்த நிலையிலேயே கனரக தொழில்துறை அமைச்சகம் சில மின் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோட்டீஸ் அனுப்பிய கையுடன் அந்தந்த நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு வழங்கப்பட்ட மானியம் அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. ஹீரோ எலெக்ட்ரிக், ஒகினாவா ஆகிய இரு நிறுவனங்களுக்கே அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றது.

ஏற்கனவே கிரீவ்ஸ் காட்டனின் ஆம்பியர், ரிவோல்ட், ஒகயா மற்ரும் ஜிதேந்திரா இவி ஆகிய நிறுவனங்களை சோதனை வளையத்திற்குள் அமைச்சகம் கொண்டு வந்தநிலையில் தற்போது ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் ஒகினாவா நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஆகையால், இவர்களின் தயாரிப்புகள் மானிய திட்டத்தின் கீழ் விற்பனைக்குக் கிடைப்பதற்கு தடை ஏற்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் மின் வாகன தயாரிப்புகளில் உள்ளூர் உதிரிபாகங்களே பயன்படுத்தப்படுகின்றன என்பதை நிரூபிக்க வேண்டும். இதை நிரூபிக்கும் பட்சத்திலேயே அவர்களால் அரசின் மானிய திட்டத்தின்கீழ் அவர்களின் தயாரிப்புகளை விற்பனைச் செய்ய முடியும். அரசின் ஃபேம் திட்டம் மின் வாகன பயன்பாட்டை மட்டுமல்ல உள்ளூர் உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை அரசு முதல் முறையாக 2015 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தியது. இந்த முதல்கட்ட திட்டம் 2019 மார்ச் 31 உடன் நிறைவுற்றது. இதற்கு அடுத்தபடியாக மீண்டும் ஃபேம் 2 திட்டமாக அது ஏப்ரல் 2019இல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் காலாவதி நாள் வருகின்ற மார்ச் 31 ஆகும். இந்த திட்டத்தின்கீழ் மைல்டு ஹைபிரிட், ஸ்ட்ராங் ஹைபிரிட், பிளக்-இன் ஹைபிரிட் கார்களுக்கும் மானியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த திட்டம் வெறும் மின் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிப்பது மட்டுமில்ல, தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துதல், மின்வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை (சார்ஜிங் மையம் மற்றும் பேட்டரி ஸ்வாப் மையங்களை) உருவாக்குதல் உள்ளிட்டவையும் இதன் முக்கிய பணிகளாக உள்ளன.

ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் ஒகினாவா ஆகிய இரு நிறுவனங்களின் மின்சார வாகனங்களுக்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இரு நிறுவனங்களும் ஒவ்வொரு மாதமும் தலா 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் யூனிட்டுகள் வரை மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்கின்றன. கடந்த மாதத்தில்கூட இவ்விரு நிறுவனங்களும் 17 ஆயிரம் யூனிட்டுகள் வரை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்ததாக் கூறப்படுகின்றது. இத்தகைய நிறுவனங்களுக்கே மானியம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








