நிம்மதி பெருமூச்சு விடுங்க... இனி மின்சார வாகனங்கள் தீயிற்கு இரையாகாது... புதிய பாலிசிய உருவாக்கிட்டாங்க!
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் (Union Road Transport and Highways Ministry) புதிய பாலிசியை மின் வாகனங்களுக்காக வெளியிட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகன தீ விபத்தைத் தவிர்க்கும் பொருட்டு இந்த பாலிசி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மக்கள் மத்தியில் மின்சார வாகனங்களைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது. இதன் விளைவாக நாட்டில் மின் வாகனங்களை நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 2020 ஆம் ஆண்டிற்கு பின்னர் நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதீத வேகத்தில் வளர்ச்சியடையத் தொடங்கியது.

இந்த நிலையிலேயே மின் வாகனங்களின் வளர்ச்சிக்கு, அதாவது விற்பனைக்கு ஆப்பு வைக்கும் வகையில் சில சம்பவங்கள் நாட்டில் அரங்கேற தொடங்கின. தொடர் மின்சார இருசக்கர வாகனங்களின் தீ விபத்து சம்பவங்களே அது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட தீ விபத்து சம்பவங்கள் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சார்ந்து நாட்டில் அரங்கேறியிருக்கின்றன.

அனைத்தும் சம்பவங்களும் மக்கள் மனதில் மிகவும் கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, வேலூரில் அரங்கேறிய தீ விபத்து சம்பவம் மக்கள் மனதில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது. இங்கு நடைபெற்ற மின்சார ஸ்கூட்டர் தீ விபத்தால் தந்தை, மகள் இருவர் பலியாகினர். இந்த கசப்பான நினைவுகள் மறைவதற்கு உள்ளாகவே அடுத்தடுத்து என பல மின்சார இருசக்கர வாகன தீ விபத்து சம்பவங்கள் நாட்டில் அரங்கேறிவிட்டன.

இதன் இறுதியாக மின் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கைக் கணிசமாக குறையத் தொடங்கியது. குறிப்பாக, தொடர் தீ விபத்தில் சிக்கிய குறிப்பிட்ட நிறுவனங்களின் விற்பனை பல மடங்கு சரிவைச் சந்திக்க ஆரம்பித்தன. இந்த நிலை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமின்றி அரசுகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தூய்மையான இயக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு 'பூஜ்ஜிய உமிழ்வு திறன்' கொண்ட மின்சார வாகனங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் விதமாக அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தன. இந்த மாதிரியான சூழலிலேயே அனைத்து நடவடிக்கைகளையும் போலியாக்கும் வகையில் மின்சார இருசக்கர வாகனங்களின் தொடர் தீ விபத்தில் சிக்கின.

இந்த விவகாரத்தில் தீர்வு எட்டும் விதமாகவே அரசு அண்மையில் ஓர் குழுவை நியமித்தது. ஏஆர்சிஐ ஹைதராபாத் இயக்குநர் டாடா நர்சிங் ராவ் தலைமையிலான இந்த குழு சில ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றது. இந்த ஆலோசனையின் அடிப்படையிலேயே தற்போது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் (MoRTH) மின் வாகன உற்பத்திக்கான புதிய பாலிசியை உருவாக்கியிருக்கின்றது.

மின் வாகன உற்பத்தியாளர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாலிசி வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மின் வாகன தீ விபத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு இந்த புதிய உருவாக்க விதிகளை அறிவித்திருக்கின்றது.

பேட்டரி செல்கள், பேட்டரி பேக், ஆன்-போர்டு சார்ஜர் மற்றும் தீயிற்கு வழி வகுக்கும் உள் செல் ஷார்ட் சர்க்யூட் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தும் வகையிலேயே புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது, தீ விபத்திற்கு வழிவகுக்கும் சில முக்கிய காரணிகளைக் களையெடுக்கும் வகையிில் புதிய பாலிசி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகைாயல், எதிர்காலத்தில் மின்சார இருசக்கர வாகனங்கள் சார்ந்து தீ விபத்து நிகழ்வுகள் அரங்கேறாது என எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சகத்தின் இந்த புதிய விதிக்கு மின்சார இருசக்கர வாகந உற்பத்தி நிறுவனங்கள் வரவேற்பை வழங்கத் தொடங்கியிருக்கின்றன. புதிய திருத்தப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகள் இந்திய மின் வாகன தொழில்துறையை பலப்படுத்த உதவும் என உற்பத்தியாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் தீ விபத்தைத் தவிர்க்க கூடிய வசதிக் கொண்ட மின்சார இருசக்கர வாகனங்களை இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் மின் வாகன உற்பத்தியாளர்கள் விற்பனைக்குக் கொண்டு வரத் தொடங்கிவிட்டனர். கோமகி மற்றம் பென்லிங் உள்ளிட்ட சில முன்னணி ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தியாளர்களே தீ விபத்தைத் தவிர்க்கக் கூடிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








