இந்தியாவில் ரீ-என்ட்ரீ கொடுக்க தயாரானது முன்னணி பைக் நிறுவனம்... மொத்தமா 4 டூ-வீலர்களை களமிறக்க போறாங்களாம்!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று இந்தியாவில் ரீ-என்ட்ரீ கொடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று இந்திய சந்தையில் ரீ-என்ட்ரீ கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ ஆகிய இரு நிறுவனங்களும் அதன் இந்திய மறு வருகையை உறுதிப்படுத்தின. இந்த நிலையிலேயே மற்றுமொரு ஐகானிக் மோட்டார்சைக்கிள் பிராண்ட் ஒன்று இந்தியாவில் மீண்டும் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம் மோட்டோ மோரினி (Moto Morini). இந்த நிறுவனமே இந்தியாவில் மறு வருகையை புரிய இருக்கின்றது. இந்த நிறுவனம் இந்தியாவில் மீண்டும் நுழைய இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்திய வருகைக்காக மோட்டோ மோரினி நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த ஆதிஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியா பிரைவேட் லிமிடெட் (Adishwar Auto Ride India) உடன் இணைந்திருக்கின்றது. இந்த நிறுவனத்தின் வாயிலாகவே தனது ரீ-என்ட்ரீயை இந்தியாவில் கொடுக்க இருக்கின்றது, மோட்டோ மோரினி.

மோட்டோ மோரினி தனது மறு வருகையை வழக்கமான ஒன்றாக இல்லாமல், மிக சிறப்பானதாக மாற்ற திட்டமிட்டிருக்கின்றது. இதன் அடிப்படையில் நிறுவனம் ஒட்டுமொத்தமாக நான்கு புதிய இருசக்கர வாகன தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. நான்கு டூ-வீலர்களும் இத்தாலியில் வைத்தே வடிவமைக்கப்பட இருக்கின்றன. மேலும், அங்கு வைத்தே அவை உருவாக்கப்படவும் இருக்கின்றன.

இதன் பின்னரே அவை இந்தியா கொண்டு வரப்பட்டு விற்பனைச் செய்யப்படும் என மோட்டோ மோரினி தெரிவித்துள்ளது. ஆகையால், ஆதிஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனம், மோட்டோ மோரினியின் இருசக்கர வாகனங்களின் விற்பனை பணிகளை மட்டுமே நாட்டில் மேற்கொள்ளும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

முன்னதாக இந்நிறுவனம் மறுகை வருகைக்காக மும்பையைச் சேர்ந்த வர்தேன்சி மோட்டார்சைக்கிள்ஸ் உடன் கூட்டணியை வைத்தது. ஆனால், தற்போது இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆதிஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியா பிரைவேட் நிறுவனத்துடன் வாகன விற்பனைக்காக இணையும் மூன்றாவது பன்னாட்டு நிறுவனமே இந்த மோட்டோ மோரினி ஆகும்.

ஏற்கனவே, இந்திய நிறுவனத்துடன் இணைந்து இரு வெளிநாட்டு நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளை நம் சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. பெனெல்லி மற்றும் கீவே ஆகிய இரு நிறுவனங்களே ஏற்கனவே ஆதிஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியாவுடன் இணைந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வரிசையிலேயே தற்போது மோட்டோ மோரினியும் இணைந்திருக்கின்றது.

இந்த நிறுவனம் தனது வருகையைத் தொடர்ந்து நாட்டில் உள்ள வாகன விற்பனையகத்தை விரிவாக்கும் செய்யும் பணியையும் மேற்கொள்ள இருக்கின்றது. இந்த நிலையங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பணிகளை அது மேற்கொள்ள இருக்கின்றது. குறிப்பாக, இருசக்கர வாகனத்தை டெஸ்ட் டிரைவ் கொடுத்தல், வாகனம்குறித்த முக்கிய தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை அது மேற்கொள்ள இருக்கின்றது.

மோட்டோ மோரினி உடனான கூட்டணி குறித்து ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விகாஸ் ஐபக் கூறியதாவது, "மோட்டோ மோரினி அறிமுகத்தின் வாயிலாக இந்தியாவின் பிரீமியம் இருசக்கர வாகன தேவையை நாங்கள் பூர்த்தி செய்ய இருக்கின்றோம். இதுவே எங்களின் நோக்கம். சூப்பர் பைக் பிரிவில் உள்ள எங்களது முன்னனுபவத்தைக் கொண்டு, மோட்டோ மோரினியை வெற்றிகரமான பிராண்டாக இந்தியாவில் மாற்ற உள்ளோம்" என தெரிவித்தார்.

1937 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே மோட்டோ மோரினி நிறுவனம். அல்போன்சா மோரினி என்பவரால் உருவாக்கப்பட்டதே இந்நிறுவனம் ஆகும். இந்த பிராண்ட் ஸ்போர்ட்ஸ் வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. இலகுரக, அதிவேக இருசக்கர வாகனங்களை 50ஸ் மற்றும் 60ஸ்-களிலேயே விற்பனைக்கு வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது நிறுவனம் தயாரித்து வரும் இருசக்கர வாகனங்களும் அதே ரேஸிங் டிஎன்ஏ-வைக் கொண்டதாக காட்சியளிக்கின்றன. இத்தகைய வாகனங்களுக்கு இந்தியாவில் சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆகையால், மோட்டோ மோரினி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல டிமாண்ட் இந்தியாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








