ஷோரூமிலேயே கருகி நாசமாகிய 7 புதிய மின்சார வாகனங்கள்... தீ விபத்துக்கான காரணம் என்னன்றது தெரிய வந்திருச்சு!
ஷோரூமிலேயே புத்தம் புதிய ஏழு மின்சார இருசக்கர வாகனங்கள் தீ விபத்தில் சிக்கி நாசமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய மின்சார இருசக்கர வாகனங்கள் தீ விபத்தில் சிக்கி நாசமாகியிருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோமகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமே தீ விபத்தில் சிக்கியிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இருசக்கர வாகனத்தில் பற்றிய தீயே பிற இருசக்கர வாகனங்களிலும் பற்றி, அவற்றையும் நாசமாக்கியிருக்கின்றன.

குறைந்தபட்சம் ஏழு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் முழுமையாக எரிந்து நாசமாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹாராஷ்டிரா மாநிலம், புனேவின் கங்கதம் பகுதியில் மல்டி பிராண்ட் மின்சார இருசக்கர வாகன விற்பனையகம் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த ஷோரூமிலேயே எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தீ விபத்து அரங்கேறியிருக்கின்றது.

இதைத்தொடர்ந்து, இந்த தீ விபத்திற்கான காரணங்களும் தற்போது தெரிய வந்திருக்கின்றது. ஓவர் சார்ஜிங்கே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. பொதுவாக, மின்சாதன பொருட்கள் எதுவாக இருந்தாலும் நேரத்தைத் தாண்டி சார்ஜ் செய்யும்போது அதிக வெப்ப நிலையை அடையும். இந்த மாதிரியான சூழலையே ஷோரூமில் சார்ஜேற்றிக் கொண்டிருந்த கோமகி மின்சார வாகனம் சந்தித்திருக்கின்றது. இதன் காரணத்தினாலயே அது தற்போது தீ விபத்திலும் சிக்கியிருக்கின்றது.

இந்த தீ விபத்து ஒன்றோடு நிறுத்திக் கொள்ளாமல் கூடுதலாக சில இருசக்கர வாகனங்களை வாரி சுருட்டிச் சென்றிருப்பதே கூடுதல் கவலையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்வுகுறித்து கருத்து தெரிவித்த கோமகி நிறுவனத்தின் ஆபரேஷன் ஹெட் சுபாஷ் சர்மா, "உண்மையில் தீ விபத்து கோமகி நிறுவனத்தின் வாகனத்தால் ஏற்படவில்லை. வாகனத்துடன் வழங்கப்பட்ட அசல் பேட்டரி எரிந்ததற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.

ஆகையால், வேறு நிறுவனத்தின் பேட்டரியை கோமகி இருசக்கர வாகனத்தில் வைத்து நீண்ட நேரமாக சார்ஜ் செய்ததன் வாயிலாக இந்த விபத்து அரங்கேறியிருக்கின்ற என்கிற சந்தேகத்தை இந்த நிகழ்வு எழுப்பியிருக்கின்றது. ஆனால், முழுமையாக இன்னும் ஆய்வு பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. இந்த தீ விபத்தில் அதிரிஷ்டவசமாக யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படவில்லை.

மின்சார இருசக்கர வாகனங்கள் சார்ந்து நடைபெறும் தீ விபத்துகள் அண்மைக் காலங்களாக அதிகரித்துக் காணப்படுகின்றது. அதிலும், சமீப சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள்கூட தீ விபத்தில் சிக்கி அதிர்ச்சியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சம்பவங்கள் மே மற்றும் ஜூன் மாதங்களிலேயே அதிகளவில் அரங்கேறின. இந்த நிலையிலேயே புனேவில் தற்போது ஓவர் சார்ஜால் இந்த தீ விபத்து நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது.

இந்த மாதிரியான நிகழ்வு இனி வரும் காலங்களில் அரங்கேறக் கூடாது என்பதில் அரசு அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையில் ஓர் குழுவை மத்திய அரசு நியமித்திருக்கின்றது. இந்த குழு மின்சார இருசக்கர வாகனங்களின் தீ விபத்திற்கான உண்மையான காரணங்களைக் கண்டறியும். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்று தீ விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான வழிகளையும் கண்டறிய இருக்கின்ரது.

இதன் அடிப்படையில் அக்குழு மின்சார வாகனத்தை உற்பத்தி செய்வதற்கான வழிக் காட்டுதல்களை உருவாக்க இருக்கின்றது. இந்த வழி காட்டுதல்கள் மின்சார இருசக்கர வாகனத்தை மேம்படுத்தவும், பாதுகாப்பானதாக மாற்றவும் உதவியாக இருக்கும். மக்கள் மத்தியில் மின் வாகனங்கள் மீது காணப்படும் நம்பிக்கையற்றை சூழலை போக்கும் பொருட்டு இந்த முயற்சியை மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றது மத்திய அரசு.

மத்திய அரசு மின்சார வாகனங்களின் மக்களை ஈர்க்கும் பொருட்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அவற்றில் ஒன்றாக இது மாறியிருக்கின்றது. அரசு உருவாக்கும் இந்த வழிக் காட்டுதலை அனைத்து நிறுவனங்களும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை மீறும் நிறுவனங்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக், ஒகினவா ஆட்டோ டெக் மற்றும் ப்யூர் இவி ஆகிய நிறுவனங்களின் மின்சார வாகனங்கள் தொடர்ச்சியாக தீ விபத்தில் சிக்கியதை அடுத்தே இந்த கடுமையான நடவடிக்கையில் அரசு களமிறங்கியிருக்கின்றது. அரசின் இந்த மாதிரியான நடவடிக்கையைத் தொடர்ந்து மின் வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் பேட்டரியை குளிர்ச்சியாக வைத்திருக்கும் கருவிகளை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் அறிமுகப்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.
குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








