ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றி எரித்த டாக்டர்... இதுதான் காரணமா? கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம்!
பிசியோதெரப்பி மருத்துவர் ஒருவர் தன்னுடைய ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) ஸ்கூட்டர் பல்வேறு சிக்கலை வழங்கிய காரணத்தினால், அந்த வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கின்றார். இந்த சம்பவம்குறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த வாகனம் விற்பனைக்கு வருவதற்கு முன்னரே இந்தியர்கள் ப்ரீ புக்கிங்கை வாரி வழங்கினர். யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு லட்சக் கணக்கில் முன்பதிவை வழங்கினர்.

இது, நிறுவனத்தை உற்பத்தியில் புதிய மைல் கல்லை எட்டும் அளவிற்கு வளர்ச்சியடையச் செய்திருக்கின்றது. சமீபத்தில், 50000 யூனிட் உற்பத்தி எனும் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை நிறுவனம் எட்டியது. விற்பனைக்கு வந்த சில மாதங்களிலேயே இந்தளவு வளர்ச்சியை ஓலா எலெக்ட்ரிக் பெற்றது ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து பல்வேறு அதிருப்தியான தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில்கூட சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீ பற்றி எரிந்து அனைவரையும் அதிர்ச்சியில் மூழ்க வைத்தது.

இதுமட்டுமின்றி, ஓலா நிறுவனம் டெலிவரி செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சேதமடைந்த நிலையில் வழங்கப்பட்டதாக அதன் உரிமையாளர்கள் பலர் கடந்த காலங்களில் புகார் தெரிவித்த சம்பவங்கள்கூட அரங்கேறியிருக்கின்றன.

இதுமட்டுமின்றி, சமீபத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்தை நிகழ்த்தியதால், இளைஞர் ஒருவர் கடுமையான காயங்களுக்கு ஆளாகினார். இந்த சம்பவம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு கூடுதல் அவ பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ந்து ஓர் திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி பிரச்னை ஏற்படுத்துவதாகக் கூறி பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கின்றார்.

இந்த நிகழ்வுகுறித்த வீடியோவே தற்போது சமூக வலைதளங்களில் காட்டு தீயாய் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர் பிரித்விராஜ். இவர் பிசியோதெரபி கிளினிக் ஒன்றை நடத்தி வருகின்றார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியிருக்கின்றார். அவர் வாங்கியது உயர்நிலை தேர்வான எஸ்1 ப்ரோ என கூறப்படுகின்றது. இந்த வாகனம் வாங்கப்பட்ட மூன்று மாத காலகட்டத்திலேயே பல முறை பழுதடைந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இருசக்கர வாகனத்தை பதிவு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த தினத்தன்று குடியாத்தம் ஆர்டிஓ-வில் பதிவு செய்ய அவர் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எடுத்து சென்றிருக்கின்றார். ஆனால், அங்கு ஆம்பூரில் பதிவு செய்துகொள்ளுமாறு கூறப்பட்டிருக்கின்றது.

இந்த அலைக்கழிப்பு அவரை கூடுதல் கவலையில் ஆழ்த்தியிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் அவர் ஆம்பூரை நோக்கி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்துக் கொண்டிருந்தபோது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென பாதி வழியிலேயே நின்றிருக்கின்றது.

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 150-க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜ் வழங்கும் என நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் அது 44 கிமீ தூரம் மட்டுமே பயணித்திருக்கின்றது. இந்த நிலை அவருக்கு கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதன் விளைவாகவே அந்த வாகனத்தை அவர் பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கின்றார். இந்த சம்பவம் ஆம்பூர் மக்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
Source: SunNews
ஒரு பக்கம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தானாகவே பற்றி எரிந்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாக கூறி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உரிமையாளரே அந்த வாகனத்தை தீயிட்டு கொளுத்தியிருக்கின்றார்.

சமீப காலமாக தங்கள் தயாரிப்புகள் குறிப்பிடத்தக்க பிரச்னைகளில் சிக்கி வருவதைக் காரணம் காட்டி நிறுவனம் சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திருப்பிக் கொண்டு வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றது. இந்த அழைப்பின் பேரில் கோளாறுகள் சரி செய்யப்படுகின்றன. எனவே, பிசியோதெரப்பி மருத்துவர் தான் இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாமோ என பலரை கேட்கச் செய்திருக்கின்றது.

தீயிட்டு கொளுத்தியதனால் தற்போது வெறும் இரும்பு கூடாக அந்த ஸ்கூட்டர் மாறியிருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய இரு தேர்வுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவற்றைத் தொடர்ந்து, நிறுவனம் எதிர்காலத்தில் அதி-நவீன தொழில்நுட்ப வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் கார்களையும் உருவாக்க இருப்பதாக தகவல் தெரிவித்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








