எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொடர்ந்து அதிகளவில் தயாரிக்கும் ஓலா!! உற்பத்தி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது!
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தி எண்ணிக்கை வெற்றிக்கரமாக 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வேகமாக வளர்ந்து எலக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த 2020இல் நுழைந்தது. ஆனால் அதிகாரப்பூர்வமாக முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்சமயம், ஹீரோ எலக்ட்ரிக்கிற்கு அடுத்து இந்தியாவின் 2வது முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டாக ஓலா விளங்குகிறது.

டீலர்கள் கூட்டமைப்பு சங்கம் வெளியிட்டுள்ள விபரங்களின்படி, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சார்பில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பேட்டியில், ஒவ்வொரு நாளும் தங்களது நிறுவனத்தில் சராசரியாக 800 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும், மொத்த உற்பத்தி எண்ணிக்கை 50 ஆயிரம் என்கிற இமாலய எண்ணிக்கையை கடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோதாதென்று, தினசரி சராசரி உற்பத்தி எண்ணிக்கையை 2,000 ஸ்கூட்டர்களுக்கு அதிகரிக்க ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தீவிரமாக உள்ளது. இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். ஓசூரில் உள்ள ஓலா எலக்ட்ரிக் 'எதிர்கால தொழிற்சாலை' தற்சமயம் வருடத்திற்கு 15 லட்ச எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் திறன் உடன் செயல்பட்டு வருகிறது.

ஆனால் உண்மையில், ஓலாவின் தொழிற்சாலை ஆனது உலகின் மிக பெரும் எலக்ட்ரிக் 2-சக்கர வாகன தயாரிப்பு தொழிற்சாலையாக விளங்குகிறது. ஆகையால் இந்த தொழிற்சாலையில் வருடத்திற்கு 1 கோடி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கூட தயாரிக்க முடியுமாம். குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை, வைரஸ் பரவல் உள்ளிட்ட காரணங்களினால் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது தொழிற்சாலையை பகுதியாக செயல்படுத்தி வருகிறது.

எஸ்1 & எஸ்1 ப்ரோ என இரு விதமான வேரியண்ட்களில் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதில் டாப் வேரியண்ட்டான எஸ்1 ப்ரோ ஆனது 3.97kWh லித்தியம்-இரும்பு பேட்டரி உடன் அதிகப்பட்சமாக சிங்கிள் முழு-சார்ஜில் 181கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியதாக உள்ளது. இந்த வேரியண்ட்டில் பொருத்தப்படும் ஹைப்பர்ட்ரைவ் மோட்டாரின் மூலம் 8.5 கிலோவாட்ஸ் & 58 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடிகிறது.

0-வில் இருந்து 60kmph வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த வேரியண்ட்டின் டாப்-ஸ்பீடு 115kmph ஆகும். ஆரம்ப நிலை எஸ்1 வேரியண்ட்டில் டாப்-ஸ்பீடு இந்த அளவிற்கு கிடைப்பதில்லை. ஆனால் இதெல்லாம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு பிரச்சனையாக இருக்காது. ஏனெனில் ஓலாவிற்கு தற்போதைக்கு ஒரே தலைவலியாக அதன் இ-ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனை கருத்தில் கொண்டே, சமீபத்தில் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் 1,441 யூனிட்களை திரும்ப அழைப்பதாக ஓலா எலக்ட்ரிக் அறிவித்தது. இந்த வகையில் திரும்ப அழைக்கப்படும் 1,441 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் தொழிற்சாலையில் வைத்து சரிப்பார்க்கப்பட உள்ளன. அதனை தொடர்ந்து பழுதுகள் ஏதேனும் இருப்பின், அவை இலவசமாக பழுது பார்க்கப்பட்டு வழங்கப்படும் என ஓலா அறிவித்துள்ளது.

தற்சமயம் மேலும் சில ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆங்காங்கே தீப்பிடித்துள்ள நிலையில், முதல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த மார்ச் மாத இறுதியில் புனேவில் தீப்பிடிப்பிற்கு உள்ளானது. மேலும் இதுவே முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடிப்பு சம்பவமாக இருந்ததால், இது நாடு முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த புனே சம்பத்தை இன்னமும் விசாரித்து வருவதாக ஓலா தெரிவித்து வருகிறது.

இந்த சம்பவத்தின் காரணமாக ஓலா மட்டுமின்றி, மற்ற பிராண்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவோரும் அச்சப்பட துவங்கினர். இதற்கேற்ப ஓலா இ-ஸ்கூட்டர்களுடன், ஒகினவா, ப்யூர் இவி போன்ற மற்ற இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்களின் சில தயாரிப்புகளும் தீப்பிடிப்பு சம்பவங்களில் உள்ளாகின. இதனால் ஒகினவா, ப்யூர் இவி நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் திரும்ப அழைத்துள்ளன.

இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்களின் இந்த திரும்ப அழைப்புகளுக்கு மற்றொரு காரணமும் உள்ளது. அதாவது, தொடர் இ-ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பு சம்பவங்களினால் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்ப தொழிற்சாலைக்கே அழைத்து முறையாக பரிசோதித்து வழங்க வேண்டும், இல்லையேல் சட்ட அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டும் என காட்டமாக கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications








