நாள் ஒன்றுக்கு 1,000 இ-ஸ்கூட்டர்களை தயாரிக்கும் ஓலா எலக்ட்ரிக்!! முன்பதிவு செய்தவர்கள் செம்ம குஷி!
எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தயாரிப்பு பணிகள் மற்றும் டெலிவிரி தொடர்பாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முன்பு பல கேள்விகள் வைக்கப்பட்ட நிலையில், தற்சமயம் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 1,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருவதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அடுத்த தொகுப்பிற்கான கொள்முதல் ஜன்னலை மீண்டும் திறந்துள்ளது. இதனால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிப்பதிலும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் முனைப்புடன் உள்ளது. இந்த நிலையில் ஓலா எஸ்1 ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் ஓலா எலக்ட்ரிக் சிஇஓ செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பாவிஷ் அகர்வாலின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஓலாவின் தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படத்துடன், "எதிர்கால தொழிற்சாலை தற்போது நாளுக்கு 1,000 ஸ்கூட்டர்களை தயார் செய்கிறது. கீழுள்ள படம்: இன்றைய தயாரிப்புகள்!

மீதமுள்ள வாடிக்கையாளர்களுக்கான கொள்முதல் ஜன்னல் விரைவில் திறக்கப்படும். அதுகுறித்து பகிர்வோம்." என குறிப்பிடப்பட்டுள்ளது. ஓலா எலக்ட்ரிக் ஒரு நாளைக்கு 150 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கவே போராடுகிறது என சமீபத்தில் வதந்திகள் இணையத்தில் பரவிய நிலை தற்போது இவ்வாறான டுவிட்டர் பதிவினை பாவிஷ் அகர்வால் பதிவிட்டுள்ளார்.

இந்த வதந்திகள் இத்துடன் நின்றுவிடவில்லை! ஓசூரில் அமைக்கப்பட்டுள்ள ஓலாவின் எதிர்கால தொழிற்சாலையில் ஸ்கூட்டரில் உடல் பேனல்களை பொருத்தும் பிரிவு பாதி திறனில் இயங்குவதாகவும், பெயிண்ட்டிங் பிரிவு இன்னும் இயங்கவே ஆரம்பிக்கவில்லை எனவும் வதந்திகள் பரவின. ஆனால் இதற்கெல்லாம் ஒரு பதிலாக சிஇஓ பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ள இந்த படம் விளங்குகிறது.

படத்தில், தொழிற்சாலைக்குள் எஸ்1 & எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வேரியண்ட்கள் & நிறம் வாரியாக பிரித்து நிற்க வைக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது. தமிழகத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான தொழிற்சாலையாக கட்டமைக்கப்பட்டுள்ள ஓலாவின் ‘எதிர்கால தொழிற்சாலை' ஆனது அதிகப்பட்சமாக வருடத்திற்கு 20 லட்ச எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.

எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்திற்கான உலகின் மிக பெரிய தொழிற்சாலையாக விளங்கினாலும், இதனை வெறும் 6 மாதங்களில் கட்டி முடித்துள்ளனர். பெரும்பான்மையாக பெண்களால் இயங்கும் இந்த தொழிற்சாலையில் தற்போதுவரையில் மட்டுமே 10,000 பெண் தொழிலாளர்கள் பணியாற்றுவதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவிக்கிறது.

கடந்த 2021 ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகளில் 90,000ஐ கடந்துள்ளதாக சமீபத்தில் ஓலா எலக்ட்ரிக் அறிவித்திருந்தது, இந்த இடத்தில் நினைவுக்கூரத்தக்கது. இதற்கேற்ப தனது உற்பத்தி பணிகளையும் அதிகரிக்க தொடர்ந்து வெவ்வேறான நடவடிக்கைகளை இந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் கடந்த டிசம்பர் மாதத்தில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலான எஸ்1 ஸ்கூட்டர்களே டீலர்கள் மூலமாக விற்கப்பட்டதாக நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் செய்திதளத்தில் கூட செய்தியினை வெளியிட்டிருந்தோம். இதற்கு காரணமாக ஓலா எலக்ட்ரிக் கூறுவது என்னவென்றால், எஸ்1 ஸ்கூட்டர்களின் முதல் தொகுப்பு 40,000 யூனிட்களாக தொழிற்சாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த ஆண்டு முடிவதற்குள், இவற்றில் வெறும் 300 யூனிட்கள் மட்டுமே வாடிக்கையாளர்களை சென்றடைந்துள்ளதாம். ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 & எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகளை சில தாமதங்களுக்கு பிறகு கடந்த டிச.15ஆம் தேதியில்தான் துவங்கியது. இந்த வகையில் பார்த்தோமேயானால், சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 4 மாதங்கள் கழித்து வாடிக்கையாளர்களை ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சென்றடைந்துள்ளன.

இந்த தாமதத்திற்கு காரணம், உங்களில் பலருக்கு தெரிந்ததுதான், உலகளாவிய சிப்-களுக்கான பற்றாக்குறை. மிகுந்த எதிர்கால கனவுகளுடன் தொழிற்சாலையை நிறுவி வணிகத்தை ஆரம்பித்திற்கும் ஓலா எலக்ட்ரிக்கின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களான எஸ்1 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சமாகவும், எஸ்1 ப்ரோ வேரியண்ட்டின் விலை இதனை காட்டிலும் ரூ.30,000 அதிகமாக ரூ.1.30 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுப்படுகிறது.


Click it and Unblock the Notifications








