விற்பனையில் பலத்த அடி போல... இனி ஊர் ஊருக்கு ஷோரூம் திறக்க ஐடியா பண்ணும் ஓலா
ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டர்களை ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்துவந்த நிலையில் இந்த நிதியாண்டிற்கும் நாடு முழுவதும் 200 ஷோரூம்களை திறக்க முடிவு செய்துள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஓலா, இந்நிறுவனம் தற்போது ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்தாண்டு இறுதியில் தனது ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்த நிலையில் கடந்த மாதம் தனது ஓலா எஸ்1 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்த இரண்டு ஸ்கூட்டர்களையும் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

பொதுவாக இந்தியாவில் வாகன விற்பனையாளர்கள் தங்கள் வாகனங்களை ஒவ்வொரு நகரங்களிலும் ஷோரூம்கள் அமைத்து அந்த ஷோரூம் மூலமே விற்பனையைச் செய்வார்கள். ஆனால் ஓலா நிறுவனம் இந்த முறையை மாற்றி நேரடியாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கே தங்கள் வாகனங்களை நேரடியாக விற்பனை செய்தது. இதற்காக அந்நிறுவனம் தனது வெப்சைட் மூலமும் ஆப் மூலமும் தனது விற்பனையை நடத்தி வருகிறது.

முற்றிலும் மாறுபட்ட சப்ளை செயின் மாடலில் தனது விற்பனையை அதிகப்படுத்தி இந்த மாடலையும் வெற்றிகரமான மாடலாக மாற்றியது. இந்நிலையில் ஓலா நிறுவனம் சென்னை, சத்தீஷ்கர், பெலகாம், டில்லி, கோலாப்பூர், மங்களூரு, புனே மற்றும் திருச்சூர் ஆகிய நகரங்களில் மொத்தம் 20 ஷோரூம்களையும் இந்நிறுவனம் ஏற்கனவே திறந்து தனது ஷோரூம் மாடல் விற்பனையையும் சமீப காலமாக நடத்தி வருகிறது.

இந்நிறுவனம் இந்த ஷோரூம்களுக்கு "ஓலா எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்" எனப் பெயரிட்டுள்ளது. இந்த சென்டர் வாரத்தின் 7 நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இங்கு ஓலா எஸ்1 ப்ரோ, மற்றும் ஓலா எஸ்1 ஆகிய ஸ்கூட்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் இந்த ஸ்கூட்டர்களை ஓட்டி பார்த்து அதன் செயல்பாடுகளை பணியாளர்கள் மூலம் கேட்டறிந்து பெற விரும்புபவர்கள் இந்த ஷோரூம்களுக்கு செல்லலாம்.

இந்த ஷோரூமிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவது குறித்த தகவல்கள், இதற்கான ஃபைனான்ஸிங் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இங்கு ஸ்கூட்டர்களையும் புக் செய்து கொள்ளலாம். தற்போது ஓலா நிறுவனம் 3 விதமாக வாடிக்கையாளர்களிடம் புக்கிங்கை பெறுகிறது. நேரடியாக ஆன்லைன் மூலம் புக் செய்யலாம், இந்நிறுவனம் அமைத்துள்ள 20 சென்டர்களுக்கு சென்று புக் செய்யலாம். அல்லது இந்த சென்டர்களுக்கு சென்று ஸ்கூட்டர்களை ஓட்டிப்பார்த்து அனுபவத்தைப் பெற்று மீண்டும் ஆன்லைனில் வாங்கலாம்.

தற்போது நாடு முழுவதும் இப்படியான எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்களை ஓலா நிறுவனம் 20 சென்டர்கள் மட்டுமே வைத்துள்ள நிலையில் இதை வரும் 2023ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் 200 சென்டர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதாவது முக்கிய மெட்ரோ நகரங்கள் தவிர்த்து டயர் 2 நகரங்களிலும் ஷோரூம்களை அமைக்க ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதை அந்நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஆன்லைனில் மட்டுமான விற்பனை நல்ல விற்பனையைப் பெற்றாலும் பல வாடிக்கையாளர்கள் ஷோரூம் ரீதியிலான விற்பனையை விரும்புகின்றனர். அவர்கள் தாங்கள் செலவு செய்யும் வாங்கும் தயாரிப்பைக் கண்ணில் பார்த்து ஓட்டிப்பார்த்து வாங்க வேண்டும் என விரும்புகின்றனர் என இதற்கு அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் சிஇஓ ட்விட்டரில் நடத்திய கருத்துக்கணிப்பில் பலர் ஷோரூம் விற்பனையை விரும்புவது தெரிந்தது.

இப்படியாக ஷோரூம்களை திறப்பது வாடிக்கையாளர்களை நேரடியாக ஷோரூமிற்கு சென்று ஸ்கூட்டர் வாங்கிய அனுபவத்தை தர முடியும். குறிப்பாக அவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். இது மட்டுமல்ல ஓலா ஸ்கூட்டரை வாங்கிய பலர் வாகனப்பதிவிற்குச் சிரமப்பட்டுள்ளனர். அதனால் இப்படியாக ஷோரூம்களை செட்டப் செய்வது மூலம் பதிவு செய்வதையும் எளிமையாக்க முடியும்.

இது மட்டுமல்ல ஓலா நிறுவனம் இந்தியாவில் உள்ள 50 நகரங்களில் 100 ஹைப்பர் சார்ஜர் ஸ்டேஷன்களை வரும் தீபாவளிக்கும் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. தனது ஸ்கூட்டர்களை வாங்குபவர்களுக்கு 5 ஆண்டு வாரண்டியை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தவும் யோசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓலா ஸ்கூட்டர் தீ பிடித்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் விற்பனையை வேகமாக அதிகப்படுத்த முடியாமல் அந்நிறுவனம் திணறி வருகிறது. அதைச் சமாளிக்கவே புதிய ஆன்லைன் விற்பனை மட்டும் என்ற திட்டத்தைக் கைவிட்டுவிட்டு ஷோரூம்களை அதிகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது என விமர்சனமும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








