மணிக்கு 85கிமீ வேகத்தில் இயங்கும்... ப்யூர் இவி-யின் முதல் எலக்ட்ரிக் பைக்!! ஆனால் விலைதான் பயமுறுத்துது!
'இட்ரிஸ்ட் 350' (ETRYST 350) என்கிற பெயரில் புதியதொரு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ப்யூர் இவி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய எலக்ட்ரிக் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து இனி பார்க்கலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான தேவை அதிகரிக்க துவங்கியதை அடுத்து, பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் புதியவை புதியவைகளாக களமிறங்கியுள்ளன. அந்த வகையில் ஐதராபாத்தை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக ப்யூர் இவி தன்னை அறிமுகப்படுத்தி கொண்டது.

இந்த பிராண்டில் இருந்து பல்வேறு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், தனது முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக இட்ரிஸ்ட் 350-ஐ தற்போது ப்யூர் இவி அறிமுகப்படுத்தி உள்ளது. 'மேக் இன் இந்தியா' தயாரிப்பாக ப்யூர் இவி இட்ரிஸ்ட் 350 முற்றிலும் இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள ப்யூர் இவி-யின் விற்பனை மையங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ள இட்ரிஸ்ட் 350-இன் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1,54,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள ப்யூர் இவி நிறுவனத்தின் தொழிற்நுட்ப மேம்பாட்டு & உற்பத்தி தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு, இனி தயாரிக்கப்பட உள்ள இந்த எலக்ட்ரிக் பைக்கின் அதிகப்பட்ச வேகம் 85kmph ஆகும்.

ப்யூர் இவி-யின் முதல் எலக்ட்ரிக் பைக்கான இட்ரிஸ்ட் 350-இல் 3.5kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. ப்யூர் இவி நிறுவனத்தால் சொந்தமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பேட்டரிக்கு ஏஐஎஸ் 156 சான்றளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளதால், இட்ரிஸ்ட் 350 ஆனது டாப்-ஸ்பீடான 85kmph-இல் கூட நிலையான ரைடிங் அனுபவத்தை வழங்கும் என்கிறது ப்யூர் இவி.

குறிப்பாக, இதன் பேட்டரி எந்தவொரு கடினமான பயண சூழலையும் தாங்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இட்ரிஸ்ட் 350-இன் பேட்டரி தொகுப்பிற்கு தைரியமாக 5 வருட/ 50,000 கிமீ உத்தரவாதத்தை ப்யூர் இவி நிறுவனம் வழங்கியுள்ளது. இவ்வாறு, இந்திய சாலைகளுக்கு மிகவும் ஏற்ற எலக்ட்ரிக் பைக்காக உருவாக்கப்பட்டுள்ள இட்ரிஸ்ட் 350 -ஐ அன்றாட பயன்பாட்டிற்கு தாராளமாக பயன்படுத்தலாம் என அடித்து கூறுகிறது ப்யூர் இவி.

எலக்ட்ரிக் பைக்காக மட்டுமின்றி, அதி செயல்திறன்மிக்க பைக்காவும் இட்ரிஸ்ட் 350 உருவாக்கப்பட்டுள்ளதால், குறைந்த விலையில் ஆற்றல்மிக்க எலக்ட்ரிக் பைக்கை வாங்க நினைக்கும் இளம் தலைமுறையினரை இந்த இ-பைக் வெகுவாக ஈர்க்கும் என்பது உறுதி. ப்யூர் இவி நிறுவனம் பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துவந்தாலும், இந்த எலக்ட்ரிக் பைக்கின் மீது கூடுதல் நம்பிக்கையோடு உள்ளது.

ஏனெனில் இந்தியாவில் தற்சமயம் அன்றாட தனிநபர் பயன்பாட்டிற்கும், தொலைத்தூர பயன்பாட்டிற்கும் கிட்டத்தட்ட 70 சதவீதத்தினர் மோட்டார்சைக்கிள்களையே தேர்வு செய்கின்றனர். அதுமட்டுமின்றி, பெரும்பான்மையான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறைந்த ரேஞ்ச் உடன் குறுகிய தூரத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. ஆதலால் நீண்ட தூர பயணங்களுக்கு எலக்ட்ரிக் பைக்குகளின் பயன்பாடு காலத்தின் தேவையாக உள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தையில் கண்டுள்ள குறிப்பிடத்தக்க வெற்றி, முதல் எலக்ட்ரிக் பைக்கை உருவாக்குவதில் ப்யூர் இவி நிறுவனத்திற்கு பெரிதும் உதவிக்கரமானதாக இருந்திருக்கும். இந்தியா உள்பட தெற்காசியாவில் மேலும் சில நாடுகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுமதி செய்துவரும் ப்யூர் இவி நிறுவனம் வரும் காலத்தில் தென் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் முனைப்பில் உள்ளது.

இட்ரிஸ்ட் 350 எலக்ட்ரிக் பைக்கின் தொழிற்நுட்ப அம்சங்கள் குறித்து ப்யூர் இவி நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி ரோஹித் வதேரா கருத்து தெரிவிக்கையில், "இந்த உயர்-செயல்திறன்மிக்க மோட்டார்சைக்கிளின் வெளியீடு ஆனது ப்யூர் இவி-யின் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையத்தில் பவர்ட்ரெயின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க கற்றல்களை எடுத்துக்காட்டுவதாக இருக்கும்.

நிறுவனத்தின் முக்கிய ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு செயல்பாடுகள் சராசரி இந்திய வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டு சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள 150சிசி ப்ரீமியம் எரிபொருள் என்ஜின் மோட்டார்சைக்கிள்களுக்கு இணையாக இந்த தயாரிப்பு வாகனம் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த செயல்படுதிறனை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications








